ஊரக வளர்ச்சி அமைச்சகம்

2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதற்கான தேசிய மாநாட்டிற்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தலைமை வகித்தார்

லட்சாதிபதி பெண்கள் திட்டம் ஊரகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டதை அவர் எடுத்துக்காட்டினார்

Posted On: 06 SEP 2023 6:23PM by PIB Chennai

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை நிலையான வருமானம் ஈட்டும் சுய உதவிக் குழு பெண்களை உருவாக்குவதற்கான தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 கோடி 'லட்சாதிபதி பெண்கள்' -குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். 2023, ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நிகழ்த்தியது சுதந்திர தின உரையில் இந்த லட்சிய இலக்கை அறிவித்தார். "இன்று 10 கோடி கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கிறார்கள். நீங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றால், வங்கி முகவர் பெண்கள்', 'அங்கன்வாடி பெண்கள்', மருந்து முகவர் பெண்கள்' ஆகியோரைக் காண்பீர்கள். கிராமங்களில் இரண்டு கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு" என்று பிரதமர் கூறினார்.

 

பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய திரு கிரிராஜ் சிங், பிரதமரின் கனவை கடின உழைப்பு மற்றும் பன்முக அணுகுமுறையுடன் காலவரையறைக்குள் நனவாக்க இந்த இயக்கம் உத்வேகம் காட்டுகிறது என்றார். லட்சாதிபதி பெண்கள் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்க முழு அரசு அணுகுமுறையையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்திய அரசின் முதன்மையான வறுமை ஒழிப்புத் திட்டமான தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஏழைகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய முன்முயற்சியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

போபாலில் இருந்து ஆன்லைனில் இணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் எஃகுத் துறை இணைமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே, பிரதமரின் கனவுப்படி லட்சாதிபதி பெண்கள் அமிர்த காலத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள் என்றார்.

 

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில், லட்சாதிபதி பெண்கள் முன்முயற்சி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று இம்மாநாட்டில் வரவேற்புரையாற்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் திரு. சைலேஷ் குமார் சிங் தெரிவித்தார்.  சுய உதவிக் குழுவின் ஒவ்வொரு குடும்பமும் மதிப்புத் தொடர் தலையீடுகளுடன் பல வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது என்றும் இதன் விளைவாக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் கூடுதலாக நிலையான வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

 

ஊரக வாழ்வாதாரத் துறையின் கூடுதல் செயலாளரும், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநருமான திரு சரண்ஜித் சிங், சுய உதவிக் குழு குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக அரசு, தனியார் துறை, பலதரப்பு முகமைகள், பொது சேவை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் சமூக முழு அணுகுமுறையை இந்த இயக்கம் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.

 

இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் லட்சாதி பெண்கள் அமைப்பில் சேர விரும்பும் அரசு மற்றும் மேம்பாட்டுத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகள், சுய உதவிக் குழு பெண்கள் பங்கேற்றனர். இந்தியா முழுவதிலுமிருந்து 1 கோடிக்கும் அதிகமான சுய உதவிக் குழு பெண்கள் காணொலிக் காட்சி  மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 

ஊரக வாழ்வாதாரத் துறை இணைச் செயலாளர் திருமதி சுவாதி சர்மா, இந்த முன்முயற்சிக்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணை இயக்குர் திரு ராமன் வாத்வா மாநாட்டின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

***

AD/SMB/RS/KRS



(Release ID: 1955274) Visitor Counter : 223


Read this release in: English , Urdu , Hindi