சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
எம்எஸ்எம்இ-களுக்கு அதிகாரம் வழங்க “சம்வர்தன்” மாநாட்டை ஜூன் 24, 25 தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் நடத்த உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2023 8:05PM by PIB Chennai
பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் எம்எஸ்எம்இ-களுக்கு அதிகாரம் வழங்க “சம்வர்தன்” மாநாட்டை ஜூன் 24, 25 தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் நடத்த உள்ளது. சர்வதேச எம்எஸ்எம்இ (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரிடையே இணைப்பை ஏற்படுத்த இந்த 2 நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ-க்களை பொருளாதார ஊக்கிகளாக உருவாக்கி அவற்றை தற்சார்புடையவர்களாக மாற்றுவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் பட்டயக் கணக்காளர்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வங்கியாளர்கள், வல்லுநர்கள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் 9 அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த அமர்வுகளில் பல்வேறு துறைகளின் நிபுணர்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்துப் பரிமாற்றம் செய்வார்கள். இதில் பொதுமக்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு https://www.sirc-icai.org/common_events.php என்ற இணையதளம் வழியாக பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த மாநாட்டையொட்டி தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு sirc-icai.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய ஜூன் 18, 2023 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்கள் பெற 99400 20956 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மாநாட்டின் முதல் நாளான ஜூன் 24 அன்று நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மற்றும் சாதனைப் படைத்த எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்கு 19 வகையிலான விருதுகள் வழங்கப்படும்.
***
AP/SMB/KPG/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1932713)
வருகையாளர் எண்ணிக்கை : 151