இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்
Posted On:
20 APR 2023 3:55PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை & தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 877 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
பட்டங்களை வழங்கி விழாப் பேருரை ஆற்றிய மத்திய அமைச்சர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் ஏற்படும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை அமைச்சர் பட்டியலிட்டார். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அளவை விட 12 மடங்கு அதிகமாக தற்போது இணையதளத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார். மேலும் அலைபேசி வழி இணைய நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/L1photo-10AE1.jpg)
ஸ்டார்ட் அப் களை பொறுத்தவரையில், 77 ஆயிரம் ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகான்களுடன் இந்தியா சர்வதேச அளவில் 3வது இடத்தை வகித்து வருவதாக அமைச்சர் கூறினார். பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு ஆலைகளை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்து வருவதாகவும், அலைபேசி தயாரிப்பில் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 4ஜி, 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக்கப்ப்பட்டு வருவதாக கூறினார். மேலும் தேசிய குவாண்டம் இயக்கத்தை தொடங்கியுள்ள ஏழாவது நாடாக இந்தியா உள்ளதென கூறினார். மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகின் தலைசிறந்த நாடாக விளங்கி வரும் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை உட்கட்டமைப்பை யுபிஐ வலுப்படுத்தி வருவதாக அவர் கூறினார். மேலும் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி சர்வதேச அளவில் பேசப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/L1photo-25XZK.jpg)
சிறந்த கல்வியே வெற்றிக்கு அடித்தளம் எனவும் அறிவே ஆயுதம் எனவும் அமைச்சர் பேசினார். நாட்டை வழிநடத்துபவர்களாகிய மாணவர்கள், தங்களது வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இது முக்கியமான தருணம் என எடுத்துக் கூறினார். மேலும், விளையாட்டில் இருப்பது போல மாணவர்கள் அனைவரும் தெளிவான இலக்குகளை (கோல்) கொண்டிருக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். மாணவர்கள் அனைவரும் விளையாட்டில் முனைப்புடன் பங்கேற்க வேண்டும். இதன் மூலம் உடல், மனம் வலுப்பெறுவதோடு மட்டுமல்லாது தலைமைத்துவ பண்புகளையும் வளர்த்து வாழ்வில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது என்று தெரிவித்தார். நவீன யுகத்தில் செல்போன், கணினி ஆகியவற்றால் உடல் உழைப்பற்ற நிலையில் உள்ள மாணவர்கள் அவற்றில் இருந்து மாறி உடற்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/L1photo-3MJ0M.jpg)
புதுமையான, வேலைவாய்ப்புகள் மிகுந்த பாடங்களை பயிற்றுவித்து, தகவல் தொழில்நுட்பம் (ஐடி) உள்ளிட்ட துறைகளில் திறமையான பணியாளர்களை உருவாக்கி தருவதற்காக ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தை அமைச்சர் பாராட்டினார். திறன் மேம்பட்டை ஊக்குவிக்க அரசின் உறுதிபாட்டை எடுத்துக் கூறிய அமைச்சர், நாட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் புதிய பாடப்பிரிவுகளை இந்தக் கல்வி நிறுவனம் அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வரவேற்புரை ஆற்றிய ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் திரு. ஷிப்நாத் தேப், மாறுபட்ட எதார்த்தங்களுடன் ஒத்திசைவான நமது இந்தியப் பிரதமரின் தொலைநோக்கிற்கு இணங்க இம்மையம் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இது, கடந்த 3 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான இளம் தலைமுறையினரின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்களின் லட்சியங்களுக்கு உதவுவதற்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்துள்ளது என கூறினார்.
புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, இன்றைய இளைஞர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட, கல்வி சூழலை உருவாக்குவதில் இம்மையம் ஆர்வமாக உள்ளது என தெரிவித்தார்.
பிரதமரின் முக்கிய நோக்கமான "தேசமே முதன்மை" என்பதை முதன்மையாகக் கொண்டு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து வருவதாக கூறினார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/L1photo-481K5.jpg)
தரமான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, பிற கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு, தொழில்துறை, அறிவு மற்றும் தொழில்நுட்பம் பகிர்தல் ஆகியவற்றின் மூலம் இம்மையம் தனது குறிக்கோள்களை எட்டி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் அமைச்சருக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இயக்குனர் திருப்புனாதேவ் 2020 முதல் தற்போது வரை மையத்தின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்களின் எதிர்காலம் சிறக்க அவர் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் துறை இணைச் செயலர் திரு. நிதிஷ்குமார் மிஸ்ரா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
நிறுவனம் பற்றி: ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் 1993 இல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இது தெற்காசியாவில் இளைஞர்கள் நலன், இளைஞர்களின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் திறன்களை வழங்குவதற்கான முதல் நிறுவனமாகும். இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், நாட்டின் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கம்.
இது இளைஞர் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். மேலும் அமைச்சகத்தின் சிந்தனைக் குழுவாகவும் இளைஞர்கள் தொடர்பான செயல்பாடுகளின் அமைப்பாகவும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் "இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீட்டை" அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் முதுகலை மற்றும் முனைவர் பட்ட நிலைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. மேலும், இளைஞர்கள் அறிவைப் பெறவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் இலக்குகளை அடையவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
AD/TV/KRS
***
(Release ID: 1918283)
Visitor Counter : 147