சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்திய தேசியக் கொடி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Posted On: 25 JUL 2022 12:56PM by PIB Chennai

கேள்வி-1: தேசிய கொடியை பயன்படுத்த, காட்சிப்படுத்த, பறக்கவிட கடைப்பிடிக்க வேண்டிய ஏதாவது அறிவுறுத்தல்கள் உள்ளனவா?

ஆம் – இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002 மற்றும் தேசத்தின் கௌரவத்தை இழிவுபடுத்தல் தடுப்புச் சட்டம் 1971.

 

கேள்வி-2: இந்தியாவின் கொடி குறித்த விதிமுறை என்ன?

தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கான அனைத்து சட்டங்கள், மரபுகள், நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் இந்தியாவின் கொடி குறித்த சட்டம் ஒருங்கிணைக்கிறது.  தனியார், பொது மற்றும் அரசு நிறுவனங்களால் தேசியக்கொடி காட்சிப்படுத்துதலை இது முறைப்படுத்துகிறது.  இந்தியாவின் கொடி பிடித்த சட்டம் 2002 ஜனவரி 26 அன்று அமலுக்கு வந்தது. 

 

கேள்வி-3: தேசியக்கொடியை தயாரிக்க எந்தப் பொருளை பயன்படுத்த வேண்டும்?

இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ல் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட 2021 டிசம்பர் 30 தேதியிட்ட உத்தரவை காண்க. பாலிஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டிருந்தது.  தற்போது கைத்தறி, விசைத்தறி, பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு, காதி துணியால் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

 

கேள்வி-4: தேசியக்கொடியின் அளவு மற்றும் விகிதம் என்ன?

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம் உயரம் (அகலம்) விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

 

கேள்வி-5: எனது வீட்டில் நான் தேசியக் கொடியை காட்சிப்படுத்த முடியுமா?

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 2.2-ன்படி, தேசிய கொடிக்கான மரியாதை மற்றும் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் பொதுமக்கள், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் அனைத்து நாட்களிலும் அல்லது விழாக்களில் தேசியக் கொடியை பறக்கவிடலாம் / காட்சிப்படுத்தலாம்.

 

 

கேள்வி-6: வீட்டில் அல்லது பொது இடத்தில் தேசியக் கொடி பறப்பதற்கான நேரம் என்ன?

இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002 திருத்தப்பட்டு, 2022 ஜூலை 20 தேதியிட்ட உத்தரவை காண்க. இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பகுதி-2-ன் பத்தி 2.2 பிரிவு (xi) கீழ்காணுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:-

(xi) “பொது இடத்தில் அல்லது பொதுமக்களில் ஒருவரின்

   வீட்டில் காட்சிப்படுத்தப்படும் கொடி இரவிலும், பகலிலும்    

   பறக்கவிடப்படலாம்”.   

 

கேள்வி-7: எனது வீட்டில் தேசியக் கொடியை காட்சிப்படுத்தும் போது நான் மனதில் கொள்ள வேண்டியது என்ன?

தேசியக்கொடி காட்சிப்படுத்தப்படும் போது அது கௌரவமான நிலையையும், மதிப்புக்குரிய இடத்தையும் பெற்றிருக்க வேண்டும். கிழிந்த அல்லது கசங்கிய தேசியக்கொடியை காட்சிப்படுத்தக் கூடாது.

 

 

கேள்வி-8:தேசியக்கொடியை தவறான முறையில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்க நான் மனதில் கொள்ள வேண்டியது என்ன?

  • தேசியக்கொடி தலைகீழான நிலையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருக்கக் கூடாது
  • கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படக் கூடாது
  • எந்தவொரு நபருக்கும், பொருளுக்கும் தாழ்வானதாக தேசியக்கொடி இருக்கக்கூடாது
  • தேசியக் கொடிக்கு உயரமானதாக அல்லது மேலே அல்லது பக்கத்தில் இணையாக வேறு எந்த கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது; தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது
  • தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுபடுத்திய பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது
  • தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது
  • தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது  
  • தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது
  • உரையாளரின் மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது
  • அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது; மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது 

 

 

கேள்வி-9: இந்திய தேசியக் கொடிக்கு அவமதிப்பு செய்வதை தடுக்க விதிகள் ஏதாவது உள்ளனவா?

ஆம், தேசிய கௌரவத்திற்கான அவமதிப்பை தடுக்கும் சட்டம் 1971-ன் விளக்கம் – 4, பிரிவு – 2-ன்படி, கீழ்காணும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன:

  • தனியார் இறுதிச்சடங்குகள் உட்பட எந்த நிலையிலும் தேசியக்கொடியை தொங்கவிடக் கூடாது
  • அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது
  • தேசியக் கொடியின் மீது எழுத்துக்கள் எதையும் பதிவு செய்யக் கூடாது
  • பொருள்களை மடிக்கவோ, வாங்கவோ அல்லது வழங்கவோ தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது
  • எந்தவொரு வாகனத்தின் ஓரப்பகுதி, பின்பகுதி, மேற்பகுதி ஆகியவற்றை மூடுவதற்கு தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது

 

 

10. திறந்தவெளி அல்லது பொது கட்டிடங்களில்  தேசியக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கான சரியான முறை எது?

இந்திய கொடி குறியீட்டின் மூன்றாவது பகுதியின், மூன்றாவது பிரிவில் தெரிவித்திருப்பதற்கு இணங்க, பொது கட்டிடங்களில் தேசியக்கொடி பறந்தால், வானிலை நிலவரங்களையும் பொருட்படுத்தாது அனைத்து நாட்களிலும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அது பறக்க வேண்டும். வேகமாக ஏற்றப்பட்டு, மெதுவாக இறக்கப்பட வேண்டும்.

  • சுவற்றில் தேசியக்கொடி கிடைமட்டமாக காட்சிப்படுத்தப்பட்டால், காவி மேல் நோக்கி இருக்க வேண்டும். செங்குத்தாக காட்சிப்படுத்தப்பட்டால் காவி நிறம், தேசிய கொடியின் வலது புறம், அதாவது எதிரே இருக்கும் நபருக்கு இடது புறம் பறக்க வேண்டும்.
  • கொடிக்கம்பத்தில் கிடைமட்டமாக காட்சிப்படுத்தப்பட்டாலோ அல்லது ஜன்னல், மேம்பாடு அல்லது கட்டிடத்தில் முகப்பில் காட்சிப்படுத்தப்பட்டால், காவி நிறம், கம்பத்தின்  தொலைவில் இருக்க வேண்டும்.

 

 

11. தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கப்பட வேண்டுமா?

இந்திய அரசின் உத்தரவு இல்லாத தருணங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படக்கூடாது. அரைக் கம்பத்தில் பறக்க வேண்டிய போது முதலில் கம்பத்தினீ உச்சிவரை ஏற்றப்பட்டு அதன் பிறகு அரை கம்பம் வரையில் இறக்கப்பட வேண்டும். அதேபோல தேசியக் கொடியை இறக்கும்போதும், உச்சிவரை ஏற்றப்பட்டு பின்பு முழுவதும் இறக்கப்பட வேண்டும்.

 

 

12. எனது காரில் தேசியக் கொடியை பறக்க விடலாமா?

இந்திய கொடி குறியீடு, 2002 இன் 3.44வது பத்தியின் படி கீழ்காணும் நபர்கள் மட்டுமே மோட்டார் கார்களில் தேசிய கொடியை பறக்கவிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது:

•  குடியரசுத் தலைவர்

•  குடியரசு துணைத் தலைவர்

•  ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள்

•  இந்திய தூதரகங்களின் தலைவர்கள்

•  பிரதமர்

•  மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர்கள் மத்திய துணை அமைச்சர்கள்

•  மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்

•  மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், மக்களவைத் துணை சபாநாயகர், மாநிலங்களில் உள்ள சட்ட மேலவைகளின் தலைவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற சபாநாயகர்கள், மாநிலங்களில் உள்ள சட்டமேலவையின் துணைத் தலைவர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற துணை சபாநாயகர்கள்.

•  இந்திய தலைமை நீதிபதி

•  உச்சநீதிமன்ற நீதிபதிகள்

•  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்

•  உயர்நீதிமன்ற நீதிபதிகள்

 

3. பிற நாடுகளின் கொடிகள் உடன் இந்திய தேசிய கொடியை எவ்வாறு காட்சிப்படுத்துவது?

* இந்திய கொடி குறியீட்டின் 3.32 ஆம் பத்தியின்படி, இதர நாட்டு கொடிகளுடன் இந்திய தேசிய கொடி நேர் வரிசையில் காட்சிப்படுத்தப்படும் போது நம் நாட்டுக் கொடி வலது புற ஓரத்தில் இடம் பெற வேண்டும். இதர நாடுகளில் கொடிகள் ஆங்கிலத்தில் அந்நாடுகளின் அகர வரிசைப்படி இடம் பெற வேண்டும்.

* மூடிய வட்ட வடிவமைப்பில் கொடிகள் பறந்தால், மூவர்ண கொடி முதலிலும், அதைத் தொடர்ந்து கடிகாரச் சுற்று வரிசையில் இதர கொடிகளும் இருக்க வேண்டும்.

* கொடிக்கம்பம் பெருக்கல் குறி போன்ற அமைப்பில்  மற்றொரு கொடியுடன் சுவற்றில் இடம்பெற்றிருந்தால், இந்திய தேசிய கொடி வலதுபுறமும், அதன் கம்பம் மற்ற நாட்டு கொடி கம்பத்திற்கு முன்பாகவும் இருக்க வேண்டும்.

* மற்ற நாட்டுக் கொடிகளுடன் நம் தேசியக்கொடி பறந்தால் அனைத்து கொடிக் கம்பங்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

 

14.  தேசியக்கொடியை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

* இந்திய கொடி குறியீட்டின் 2.2 பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசியக்கொடியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அதை எரித்தோ, அல்லது வேறு வழியிலோ தனிமையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

•       காகித கொடி பொதுமக்களால் அசைக்கப்பட்ட பிறகு அவற்றை தரையில் போடக்கூடாது. தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் தனிமையில் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

 

ஆதாரம்:



(Release ID: 1845266) Visitor Counter : 9240


Read this release in: English