குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாட்டின் அமைப்பு சார்ந்த தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
15 JUL 2022 6:54PM by PIB Chennai
இந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு குறைந்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கய்ய நாயுடு, இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில், தீர்வு காணவேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துத் தொழில்துறைகளிலும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயவாடாவில் மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் வைரவிழாவில் இன்று உரையாற்றிய அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும், முறை சார்ந்த தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியம் என்றார். பெண்களுக்கு கல்வியில் அதிகாரம் அளிக்காமல் எந்த நாடும் முன்னேற முடியாது என்று குறிப்பிட்ட திரு நாயுடு, பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் அடிப்படையிலான பாட வகுப்புகளை கல்வி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளியிட்டார்.
தொழில் துறைகளுடன் கல்வி நிறுவனங்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பெண்களின் தேவைக்கு ஏற்ப பாட வகுப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். 2035-க்குள் பள்ளிகளில் 100 சதவீத பெண்குழந்தைகளும், உயர்கல்வி நிறுவனங்களில் 50 சதவீத மாணவிகளும் சேர்க்கப்பட தேசிய கல்விக் கொள்கை 2020 இலக்கு நிர்ணயித்திருப்பதாக திரு நாயுடு குறிப்பிட்டார். இளம் பெண்கள், தங்களின் உள்ளார்ந்த படைப்பாற்றலிலும் சவால்களை எதிர்கொள்ளும் திறனிலும், நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841855
***************
(Release ID: 1841881)