சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

உள்நாட்டிலேயே லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்புக்கு துணை புரியும் வகையில் ஏஆர்சிஐ- என்ஸ்யூர் ரிலையபில் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 25 NOV 2021 8:09PM by PIB Chennai

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளை உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்க ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறைக்கு உட்பட்ட தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான ஆட்டோமோடிவ் எனர்ஜி மெட்டீரியல்ஸ் இன்டர்நேஷனல் (ஏஆர்சிஐ) நிறுவனம், பெங்களூருவைச் சேர்ந்த Nsure Reliable Power Solutions Ltd., உடன் 25-11-2021 அன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பயிற்சி வழங்க இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சூரிய சக்தி தெரு விளக்குகளில் லித்தியம் அயன் பேட்டரி பயன்பாடு வெற்றி பெற்றதையடுத்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ARCI நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர். அனில் ககோட்கர், இந்த இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பருவநிலை மாற்றம், கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் ஒரு மைல்கல்லாக அமையும் என்றார். நீடித்த பயன்பாட்டிற்கு, உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இது தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிடையே ஒத்துழைப்பு மேற்கொள்வது அவசியமென்றும் குறிப்பிட்டார்.

சென்னையிலுள்ள ARCI மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பம் குறித்து, இந்த மையத்தின் தலைவர் டாக்டர். ஆர். பிரகாஷ் விளக்கமாக எடுத்துரைத்தார். இரு நிறுவனங்களையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த நிகழ்ச்சியின்போது உடன் இருந்தனர்.

*********



(Release ID: 1775125) Visitor Counter : 132


Read this release in: English