சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சணல் அலங்காரப் பொருள் உற்பத்தி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2021 6:36PM by PIB Chennai

சணல் அலங்காரப் பொருள் உற்பத்தி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய சணல் வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ஜவுளித் துறைக் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய சணல் வாரியம், சணல் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்க, தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டம் என்ற பெரும் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் சணல் ஆதார மற்றும் உற்பத்தி மையங்களை அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சணல் பொருட்கள் உற்பத்திக்கானப் பயிற்சி, வடிவமைப்பு, உற்பத்தி, மூலப்பொருட்களை வழங்கி  கைவினைஞர்கள், தொழில் முனைவோர், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் & அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு சந்தை ஆதரவு அளித்து சணல் அலங்கார பொருள் உற்பத்தி மையங்களை அமைக்க உதவி அளிக்கப்பட உள்ளது.

சணல் ஆதார மற்றும் உற்பத்தி மையத்தின் மூலம் சணல் பொருட்கள் உற்பத்திக்கான அடிப்படைப் பயிற்சி, அதி நவீனப் பயிற்சி மற்றும் வடிவமைப்புப் பயிற்சிகள் 49 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி நாடு முழுவதும் உள்ள சணல் ஆதார மற்றும் உற்பத்தி மையங்களில் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 18,000 பேருக்கு இந்தப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர அங்கீகரிக்கப்பட்ட முகமைகளின் ஒத்துழைப்புடன் சணல் மூலப்பொருள் வங்கியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது. இந்த வங்கிகளை அமைக்க விற்பனை மதிப்பில் 30 சதவீதம், ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் என்ற உச்ச வரம்புக்குட்பட்டு நிதியுதவி வழங்கப்படும். இது தவிர, மலைப்பகுதிகளில் செயல்படும் சணல் மூலப்பொருள் வங்கிகளுக்கு, சரக்குப் போக்குவரத்துச் செலவில் கூடுதல் ஊக்கத் தொகையாக  கிலோவுக்கு ரூ.1.50 வழங்கப்படும்.

மேலும் சணல் சில்லரை விற்பனை மையங்கள், சணல் வடிவமைப்பு ஆதார மையம் அமைக்கப்படுவதுடன், உற்பத்திப் பொருட்களைப் பன்முகப்படுத்துதல், சணல் அலங்காரப் பொருட்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை ஆதரவு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

சணல் பொருட்களை பிரபலப்படுத்தி விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளால் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச சணல் கண்காட்சி மற்றும் தேசிய/ மண்டல கண்காட்சிகளில் பங்கேற்கவும் பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்தப் பெரும் திட்டத்தின் துணைத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் வழிகாட்டு குறிப்புகள், www.jute.com என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இதன்படி தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் துணைத் திட்டங்களில் பங்குதாரர்களாக இடம்பெற விரும்புவோரிடமிருந்து, விருப்ப முன்மொழிவுகள்/ விண்ணப்பங்கள்/பிரேரணைகள் வரவேற்கப்படுவதாக தேசிய சணல் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதன் நகலை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

அனுப்ப வேண்டிய முகவரி:-

Regional Office – Chennai:

Joint Director (Market Promotion & Scheme Implementation),

National Jute Board, Govt. of India, Ministry of Textiles,

TNSCB Complex, 130 (Old-212), R.K.Mutt  Road,

Mylapore, Chennai, Tamil Nadu - 600004

Tel: 044 2462 0059, Mob:  9444459448

Email: njbchennai[at]gmail[dot]com:   t_ayyappan@yahoo.com

(Regional Office, Chennai jurisdiction: Tamilnadu, Karnataka, Kerala, Lakshadweep, and Puducherry)

 

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1765230) வருகையாளர் எண்ணிக்கை : 309
இந்த வெளியீட்டை படிக்க: English