சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நேர்மறை சிந்தனை: பெருந்தொற்று குறித்த அச்சத்தைப் போக்கும் நிவாரணி

Posted On: 18 JUN 2021 6:06PM by PIB Chennai

தற்போதைய பெருந்தொற்று  சூழலும், பொதுமுடக்கமும் இன்றியமையாதது என்பதால்இந்தக் கொடிய தொற்று நமக்கு அளித்துள்ள நேர்மறையான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, நமது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நாள் முழுவதும் பல்வேறு விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.கொவிட் பெருந்தொற்றின்போது மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவதுஎன்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டம், வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி, மற்றும் போரூர் ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுடன்  இணைந்து இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேலூர் மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று (ஜூன் 18, 2021) ஏற்பாடு செய்திருந்த வலைதள கருத்தரங்கில் இராமநாதபுரம் மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் ஜே பெரியார் லெனின் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், புதிய படிப்புகள், மொழிகள் முதலியவற்றைக் கற்பதற்கான வாய்ப்பாக தற்போதைய சூழலைக் கருதுமாறு அறிவுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் விளையாட்டு, முகம் தெரியாதவர்களுடன் மெய்நிகர் வாயிலான உரையாடல் போன்றவற்றை மாணவர்கள் தவிர்க்குமாறு அவர் எச்சரித்தார். வன்முறை மற்றும் சமூகவிரோத சிந்தனைகளைத் தூண்டும் இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அது தற்போது நோயாகவே கருதப்படுகிறது என்றார் அவர். பெண்கள், தங்கள் குடும்பத்தாரிடம் இருந்து விலகி, மெய்நிகர் வாயிலான கலந்துரையாடலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, மாறாக நிஜ வாழ்வில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிறரைப் பற்றிக் குறை கூறாமல், அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, மன அழுத்தம் என்ற வார்த்தை முற்றிலும் புதிதானது என்பதை நினைவுகூர்ந்த டாக்டர்  லெனின், ஆனால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சர்வசாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகிப்பதாக அவர் குறிப்பிட்டார். எப்பொழுது மனம் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குகிறதோ, எப்போதெல்லாம் மனம் திணறுகிறதோ, அப்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. இயற்கையான பாதுகாப்பு இயக்கமுறைகளான சுரப்பிகளில் மாற்றம், எரிச்சல், கோபம் போன்ற நடத்தை மாற்றங்கள், உடலளவில் தூக்கமின்மை, பசியின்மை, படபடப்பு முதலிய மாற்றங்களால் மன அழுத்தத்தை நாம் உணர முடியும்”, என்று அவர் கூறினார். மன அழுத்தத்தை நல்ல அழுத்தம், தீய அழுத்தம் என்று வகைப்படுத்திய அவர், நல்ல அழுத்தம் ஒருவருக்கு ஊக்கமளித்து, அவர் வெற்றிபெற ஏதுவாக இருக்குமென்றும் தீய அழுத்தமோ, பதற்றத்தால் இலக்கை அவர் அடைய முடியாமல் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வனிதா அகர்வால் பேசுகையில், மன அழுத்தத்தைக் குறைப்பதில் யோகா, பிராணாயாமம் மற்றும் தியானத்தின் முக்கிய பங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா வித்திடுகிறது. பிராணாயாமப் பயிற்சியை செய்யும்போது ஒரு நிமிடம் நமது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எண்ணிலடங்காத பயன்கள் கிடைக்கின்றன.மன அழுத்தத்தை முற்றிலும் நீக்க முடியாது, ஆனால், ஒருவரது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை உணர்ந்து செயல்படும்போது மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில், நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதும் மிகவும் முக்கியம். நம் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை நம்மால் குறைக்க முடியும். அதற்காக இசை, ஓவியம் போன்ற வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்”, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகத்தின் பங்கு மற்றும் அது எவ்வாறு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்ற தலைப்பில் உரையாற்றிய புதுச்சேரி அகில இந்திய வானொலியின் துணை இயக்குநர் திரு ஆர் சிதம்பரநாதன், கொவிட் சம்பந்தமான செய்திகளை  சமூக ஊடகங்களிலிருந்து பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு போன்ற அரசு ஊடகங்களையும், உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிடாத தனியார் ஊடகங்களையும் நாடுமாறு கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு பெருந்தொற்று தொடங்கியபோது தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று இந்திய அரசு உத்தரவிட்டது. இன்று வரை அந்த உத்தரவு அமலில் உள்ள போதும் பெரும்பாலான ஊடகங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளையே வழங்கிவருகின்றன”, என்று அவர் குறிப்பிட்டார். ரெம்டெசிவர் மருந்து குறித்த பிரச்சினையை உதாரணமாகக் கூறிய அவர், பலதரப்பினரின் கருத்துக்களை வெளிப்படுத்தி, ஊடகம் இந்த விஷயத்தை மிகைப்படுத்தி பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடையே அதிகப்படியான அச்சத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.‌ தவறான செய்திகளுக்கு பொதுமக்கள் இரையாகக் கூடாது என்று வலியுறுத்திய அவர், உண்மையான செய்திகளுக்கும் போலியான செய்திகளுக்கும் இடையேயான வேறுபாட்டை அனைவரும் உணர வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, இந்த இணைய கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குநர் திரு ஜே காமராஜ், உயர்ந்த லட்சியங்களைக் கொண்டுள்ள மக்கள், தங்களது இலக்கை அடைவதற்கான சரியான திட்டத்தை வகுத்து, நேர்மறையான சிந்தனைகளுடன்  பயணிப்பதால் அவர்கள் மன அழுத்தமின்றி வாழ்கிறார்கள் என்று தெரிவித்தார். நாம் பொறுப்பில்லாமல் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பியதால்தான் பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். எனினும், விசாலமான சிந்தனை, முறையான திட்டமிடலுடனான அணுகுமுறையை மாணவர்கள்  உள்ளிட்ட அனைவரும் பின்பற்றினால் மூன்றாவது அலை உருவாவதைத் தடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேலூர் கள விளம்பர அலுவலர் திரு எஸ். முரளி வரவேற்புரையையும், உதவியாளர் திரு எம். ஜெயகணேஷ் நன்றி உரையையும் வழங்கினார்கள்.

*************

 



(Release ID: 1728268) Visitor Counter : 100


Read this release in: English