விவசாயத்துறை அமைச்சகம்
அதிக மகசூல் தரக்கூடிய 838 பயிர் வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது: வேளாண் அமைச்சர் தகவல்
Posted On:
09 FEB 2021 2:58PM by PIB Chennai
மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* அதிக மகசூல் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு திறனுடைய பயிர் வகைகளையும், தொழில்நுட்பங்களையும் உருவாக்கும் முயற்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், அதிக மகசூல் தரக்கூடிய 838 பயிர் வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது. இவற்றில் 578 வகைககள் பருவநிலை மாற்றங்களை தாங்கக் கூடியவை. 41 வகை பயிர்கள் குறுகிய காலத்தில் மகசூல் தரக் கூடியவை. 47 பயிர் வகைகள் உயிர் ஊட்டச்சத்து ஏற்றப்பட்டவை.
* கடந்த 3 ஆண்டுகளில் 61 பயிர்களின் 1330 வகைகளைச் சேர்ந்த விதைகள் 3.53 லட்சம் குவிண்டால் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
* விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, 63 ஒருங்கிணைந்த விவசாய முறைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியது. கடந்த 3 ஆண்டுகளில் 18 ஒருங்கிணைந்த விவசாய முறைகள் உருவாக்கப்பட்டன.
* கடந்த 3 ஆண்டுகளில் 77 வேளாண் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. வேளாண் பொருட்களைப் பதப்படுத்த 101 தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன.
* பருவநிலை மாற்றத்தால், இந்திய வேளாண் துறையில் ஏற்படும் பாதிப்பை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பீடு செய்தது. நாட்டில் 573 மாவட்டங்கள், பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 109 மாவட்டங்கள் அதிக அபாயம் உள்ள மாவட்டங்களாகவும், 201 மாவட்டங்கள் அபாயம் உள்ள மாவட்டங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
* நீண்ட கால ரசாயன உரங்கள் பயன்பாடு குறித்த ஆய்வுகள், அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இதில் நைட்ரஜன் உரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது, மண் வளத்துக்கு தீங்கு விளைவிப்பதாகவும், உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. நுண் ஊட்டசத்து குறைபாடு, தாவரங்களின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். நிலத்தடி நீரிலும் நைட்ரேட் கலப்பு அனுமதிக்கப்பட்ட அளவான 10 மில்லி கிராமைவிட அதிகம் இருந்தது.
* கடந்த 2019-20ம் ஆண்டில் 59.88 மில்லியன் டன் ரசாயண உரங்கள் (யூரியா, டை-அம்மோனியம் பாஸ்பேட்(டிஏபி), பொட்டாஷ்(எம்ஓபி), கலப்பு உரம், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்(எஸ்எஸ்பி)) பயன்படுத்தப்பட்டுள்ளன.
* மண் பரிசோதனை மற்றும் நியாயமான அளவில் உரங்கள் பயன்பாடு போன்றவற்றை ஊக்குவிக்க தேசிய மண் வள அட்டை திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதேபோல் பரம்பிரகத் கிரிஷி விகாஷ் திட்டம் மூலம் இயற்கை விவசாய முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதற்கான பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் ஆகியவை இந்திய வேளாண் ஆராய்சி கவுன்சில் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
* குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள் மற்றும் செயல்பாடு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மின்துறை அமைச்சகத்தின் எரிசக்தி சேமிப்பு அலுவலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* பீகாரில் விளைவிக்கப்படும் மக்னா பயிரின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பீகார் மாநிலம் தர்பங்காவில் தேசிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இது தற்போது, பாட்னாவில் உள்ள கிழக்குப் பகுதி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
******
(Release ID: 1696578)
Visitor Counter : 312