PIB Headquarters
புதுச்சேரியில் ஊரடங்கு காலகட்டத்தில் வாடிக்கையாளர் வசிப்பிடங்களுக்கு சென்று வங்கிகள் ரூபாய் 25 கோடி பட்டுவாடா
Posted On:
09 MAY 2020 5:48PM by PIB Chennai
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு 25-3-2020 முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து ஊரடங்கு 2, ஊரடங்கு 3 என சுமார் 45 நாட்கள் ஆகிவிட்டன. எதிர்பாராத இந்த முடக்கத்தால் மக்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாகப் பணப்பிரச்சனை பெரிய பிரச்சனையாக மக்கள் முன் தோன்றியது.
கையில் இருக்கும் சேமிப்பு சில நாட்களில் கரைந்துவிட, வங்கியில் ஏதாவது இருப்பு இருக்குமா என்று பார்க்கும் நிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டது. ஊரடங்கைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நிவாரணத் தொகுப்பை அறிவித்து உள்ளது. மாநில அரசும் நிவாரணத் தொகை அறிவித்து உள்ளது. இந்தக் கருணைத் தொகைகள் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லவே அச்சப்படும் நிலையில் பணத்தை எப்படி எடுப்பது என்று பலரும் கவலைப்பட்டனர். அதிலும் கொரோனா கட்டுப்பாட்டு தனிமை மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் வெளியே செல்லவே முடியாது.
ஊரடங்கு காலத்தில் இத்தகையோருக்கு பணம் எடுக்க உதவும் ஆபத்துகால உதவியாளர்களாக வங்கி வணிக தொடர்பாளர்கள் முன்வந்தனர். பல வங்கிக் கிளைகளின் சார்பாக வணிகத் தொடர்பாளர்கள் பணியாற்றுகிறார்கள். வாடிக்கையாளர்களின் வசிப்பிடத்திற்கே சென்று மினி ஏ.டி.எம் மூலம் பணம் எடுத்துத் தருவதே இவர்களின் வேலை ஆகும். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த வங்கி வணிக தொடர்பாளர்களின் சேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 282 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. சுமார் 130 வங்கி வணிகத் தொடர்பாளர்கள் பணியில் இருக்கின்றனர். மார்ச் 25ஆம் தேதி முதல் இவர்கள் புறநகர் பகுதிகள், கிராமப் பகுதிகள் எனப் பல இடங்களுக்கும் தொடர்ந்து சென்று பணத் தேவை உள்ளவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். வணிகத் தொடர்பாளர்கள் பணியில் இருக்கின்ற 8 பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சல் துறை பேமண்ட் வங்கி ஆகியன இணைந்து புதுவை மாநிலத்தில் மார்ச் 25 முதல் மே 7ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களின் வசிப்பிடங்களில் 1,46,369 பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டு 25 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரத்து 580 ரூபாயை நேரில் வழங்கி உள்ளனர். இதில் கொரோனா கட்டுப்பாட்டு தனிமை மண்டலங்களுக்குச் சென்று தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் அடங்கும். வங்கி வணிகத் தொடர்பாளர்களின் இந்தப் பணியைச் சமூகத்தின் பல பிரிவினரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். விவரங்கள் அட்டவணையாகத் தரப்படுகின்றன:
வரிசை எண்
|
வங்கி பெயர்
|
பரிமாற்றங்கள் எண்ணிக்கை
|
பட்டுவாடா செய்யப்பட்ட தொகை (ரூபாய்)
|
1
|
பரோடா வங்கி
|
227
|
3,85,900
|
2
|
பேங்க் ஆஃப் இந்தியா
|
441
|
8,02,580
|
3
|
கனரா வங்கி
|
561
|
11,94,910
|
4
|
இந்தியன் வங்கி
|
76,524
|
11,78,46,960
|
5
|
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
|
21,081
|
4,34,26,840
|
6
|
புதுவை பாரதியார் கிராமிய வங்கி
|
31,029
|
5,77,13,940
|
7
|
பாரத ஸ்டேட் வங்கி
|
5440
|
1,07,16,850
|
8
|
யூகோ வங்கி
|
1549
|
30,98,000
|
9
|
இந்திய அஞ்சலக பேமண்ட் வங்கி
|
9517
|
1,71,30,600
|
|
மொத்தம்
|
1,46,369
|
25,23,16,580
|
புதுச்சேரியில் இந்தியன் வங்கிதான் முன்னோடி வங்கியாக உள்ளது. முன்னோடி வங்கிதான் மாவட்டத்தின் அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து செயல்படும். புதுச்சேரி இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு.பி.வீரராகவன் “ஊரடங்கு அறிவித்ததில் இருந்தே அத்தியாவசியப் பணி என்பதால் வங்கிகள் மூடப்படாமல் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைபிடித்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன; சமூக இடைவெளி விட்டு நிற்றல் முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை கிருமி நாசினியால் கழுவுதல் ஆகியன கட்டாயமாக வங்கிக் கிளைகள், மண்டல அலுவலகம், ஏடிஎம்-களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கிளைக்கு இந்தச் சூழலில் வாடிக்கையாளர்கள் வருவதைத் தவிர்க்கும் பொருட்டே வணிகத் தொடர்பாளர்கள் வசிப்பிடங்களுக்குச் சென்று பணம் வழங்குவதை தீவிரப்படுத்தினோம்” என்கிறார்.
முன்னோடி வங்கி மேலாளரான திரு.ஏ.உதயகுமார், ”கொரோனா நெருக்கடி காலத்தில் உதவியாக இருக்கும் பொருட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கோவிட் கடன் அறிவித்துள்ளோம். இதன்படி மகளிர் உறுப்பினர்கள் அதிகபட்சமாக ரூ.10,000-மும் குழுவாக அதிகபட்சம் ரூ 2 லட்சமும் பெறலாம். முதல் 6 மாதங்களுக்கு தவணை கட்ட வேண்டாம். உழவர் கடன் அட்டை உள்ளவர்களுக்கு தகுதி வாய்ந்த தொகையைவிட கூடுதலாக 10 % தொகை கடன் பெற அனுமதித்து உள்ளோம். அதேபோல குறு, சிறு தொழில்களுக்கும் கூடுதலாக 10 % தொகை கடன் அளிக்கிறோம்” என்றார்.
கொரோனா முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மீட்டெடுப்பதில் வங்கிகளின் பங்கு முக்கியமானதாகும். அதிலும் ஏழைகளுக்கு வாழ்வாதார செயல்பாடுகளில் ஈடுபட பலவகைகளில் உதவ வங்கிகள் முன்வருவது பாராட்டுக்குரியது ஆகும். அதிலும் கொரோனா கிருமித் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை உறுதியாகக் கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/8BZCO.jpg)
மலர்க்கொடி நைனார்மண்டபம். இந்தியன் வங்கி வாடிக்கையாளர் வணிகத் தொடர்பாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவிக்கிறார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/9EDAC.jpg)
விசாலாட்சி, வணிகத் தொடர்பாளர், செல்லிப்பட்டு இந்தியன் வங்கி
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/10T4HP.jpg)
பி.வீரராகவன், மண்டல மேலாளர், இந்தியன் வங்கி, புதுச்சேரி
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/11EPEP.jpg)
ஏ.உதயகுமார், முன்னோடி வங்கி மேலாளர், புதுச்சேரி
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/124YZP.jpg)
மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கி கிளையில் வணிகத் தொடர்பாளர் பணி
***
(Release ID: 1622657)
Visitor Counter : 168