PIB Headquarters
கடினங்கள் நிறைந்த இந்த வருடத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதைப்பதற்குத் தயாராகும் விவசாயிகள்.
இலட்சக்கணக்கான மண் வள அட்டைதாரார்கள் மண் பரிசோதனைக்குப் பதிவு செய்தனர்.
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAY 2020 3:43PM by PIB Chennai
கே. தேவி பத்மநாபன், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம், திருச்சிராப்பள்ளி:
கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் நமது வேளாண் அலுவலர்களை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்திவிடவில்லை. மண் பரிசோதனை, உரம் வழங்கல் மற்றும் விவசாயிகளின் வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த உதவி செய்தல் போன்ற களப் பணிகளை செய்து விவசாயிகளுக்கு அவர்கள் தொடர்ந்து உதவி வருகின்றனர். தூய்மை மற்றும் மனித வாழ்வில் சுகாதாரத்தைப் பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கும் கொவிட்-19 பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. வைரசைத் துரத்தியடிக்க, மக்களைப் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இருக்க அறிவுறுத்தும் அதே வேளையில், பொது முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தானியங்கள், பருப்புகள், சமையல் எண்ணெய் வழங்குதல் மற்றும் பல்வேறு இதர நடவடிக்கைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் உதவி வருகின்றன. நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளின் பங்கை ஒரு போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது மற்றும் விவசாய நடவடிக்கைகளை எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்படைய விடக்கூடாது. நாட்டில் உள்ள 130 கோடி பேருக்கும் உணவளிக்க வேண்டுமென்றால் வேளாண் சமுதாயத்தின் வாழ்க்கை தொடர்ந்து நடைபெற வேண்டும். உரம் மற்றும் தண்ணீரின் உகந்த பயன்பாட்டோடு நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டுமென்றால், மனிதர்களின் உடல் நலம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு மண் வளமும் முக்கியமாகும். மத்திய வேளாண் அமைச்சகத்தால் மண் வள அட்டை இந்தியாவில் 5 டிசம்பர், 2015 அன்று அமல்படுத்தப்பட்டது. பயிர்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளைப் பரிந்துரை செய்ய ஏதுவாக நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை அளிப்பதே இதன் நோக்கமாகும்.
நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK) போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள்; இரண்டாம் நிலை ஊட்டச்சத்துகள்; துத்தநாகம், இரும்பு, தாமிரம் மற்றும் இதர அளவுருக்கள் போன்ற சிறிய ஊட்டச்சத்துகள் போன்ற மண்ணின் 12 விஷயங்களைப் பற்றிய தகவல் சுருக்கத்தை விவசாயிக்கு மண் வள அட்டை வழங்குகிறது. நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் (NMSA) மண் வள அட்டை திட்டத்தின் கீழ் திருச்சியில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் ஐந்து கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். உரங்களின் அதிகமான பயன்பாடு, மண் வள அட்டைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயார் நிலையில் உள்ள விவசாயிகள், விவசாய மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய இரண்டையும் பெற்றுள்ள கிராமங்கள் மற்றும் மண்ணில் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மண் மாதிரிகள் தற்போது சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், மே 25இல் இந்தப் பணிகள் முடிவடையும். மண் மாதிரிகள் சோதிக்கப்பட்டு மானாவாரி சாகுபடிப் பருவத்துக்கு முன்னதாக மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் (NMSA) கீழ் மண் வள அட்டைத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 12957 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று வேளாண் துறை உதவி இயக்குநர், திரு. மோகன் கூறினார். மண் பரிசோதனைக்காக மாவட்டத்தில் 5,26,000க்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நிலங்களில் பயிர்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் இந்த சமயம் தான் இதற்கு உகந்தது என்பதால் வேளாண் அலுவலர்கள் நிலங்களைப் பார்வையிட்டு வருகிறார்கள். மண் வள அட்டைத் திட்டத்தில் 54,50,116 விவசாயிகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். நிலத்தின் நடுவில் இருந்தும் மற்றும் நான்கு முனைகளில் இருந்தும் 15இல் இருந்து 20 செ.மீ ஆழத்தில் மண் மாதிரி எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மண் வள ஆய்வகத்தில் நிபுணர்களால் இது ஆய்வு செய்யப்படும்.
நல்ல அறுவடையை பெற எவ்வளவு உரங்கள் மற்றும் உயிரி ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு சிறந்த யோசனையை வழங்குவதில் மண் வள அட்டை மிகவும் உதவிகரமாக இருப்பதாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நஞ்சை சங்கேந்தி கிராமத்தை சேர்ந்த விவசாயியான அன்பரசன் கூறுகிறார். எந்த விதமான பயிர்களை நிலம் நன்றாக ஆதரிக்கும் என்பதை முடிவு செய்யவும் அது உதவும். மண் வள நிலைமையைப் பற்றிய விழிப்புணர்வும் உரங்களின் பங்கும் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தன்னுடைய நிலத்தில் உள்ள மண்ணை வேளாண் வல்லுநர்கள் பரிசோதனை செய்தார்கள் என்றும் மண் வள அட்டையை வழங்கினார்கள் என்றும் திருச்சி புள்ளம்பாடியைச் சேர்ந்த விவசாயியான குமரவேல் கூறினார். நிலத்தில் எந்த வகையான உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்ள அது உதவியதாக அவர் கூறினார். இந்த வழியின் மூலம் அதிக உரங்களை இடாமல் தான் பணத்தை சேமித்ததாகவும் நல்ல விளைச்சலைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.
நாட்டுக்கு உணவிடும் தலையாய கடமையைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் பொது முடக்கத்தின் போது கூட விவசாயிகளுக்கு ஓய்வில்லை. செயல்மிகு கொள்கைகள் மற்றும் உதவிகள் மூலம் அவர்களுக்குத் தேவை ஏற்படும் சமயங்களில் அரசுகள் அவர்களோடு நிற்கின்றன.
- கே. தேவி பத்மநாபன், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம், திருச்சிராப்பள்ளி

மண் வள அட்டையுடன் விவசாயி குமரவேல்
(வெளியீட்டு அடையாள எண்: 1620369)
வருகையாளர் எண்ணிக்கை : 222