PIB Headquarters

தமிழ்நாடு, புதுச்சேரி சிஜிஎஸ்டி தலைமை ஆணையராக திரு ஜி.வி. கிருஷ்ணாராவ் பொறுப்பேற்றார்

Posted On: 19 MAR 2020 6:39PM by PIB Chennai

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின்  மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை தலைமை ஆணையராக திரு. ஜி.வி. கிருஷ்ணாராவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆந்திரா பல்கலைகழகத்தின் அறிவியல் பட்டதாரியான இவர், உஸ்மானியா பல்கலைக்கழத்தில் எம்பிஏ மற்றும் எல்எல்பி பட்டங்களைப் பெற்றார். சிஏஐஐபி படிப்பையும் அவர் நிறைவு செய்தார். இதுதவிர கணினி வழிச்சட்டம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றில் முதுநிலைப் பட்டயமும், எம்ஏ (இதழியல்) எம்ஏ (சோதிடம்) ஆகிய பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

1987ஆம் ஆண்டில் ஐஆர்எஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த திரு. கிருஷ்ணாராவ், விஜயவாடா, குண்டூர், சென்னை, ஹைதராபாத், வதோதரா, மைசூர், குவஹாத்தி ஆகிய இடங்களில் சுங்கம் மற்றும் மத்திய கலால்துறையில் பணியாற்றியுள்ளார்.    2017-ஆம் ஆண்டு மைசூரில் ஆணையர் மற்றும் முதன்மை ஆணையராகப் பணியாற்றியபோது, ஜிஎஸ்டி-யை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் அவர் முக்கிய பங்காற்றினார். இதற்கு முன்பு அவர்,  7 வடகிழக்கு மாநிலங்களின்  ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை தலைமை ஆணையராக குவஹாத்தியில் பணியாற்றினார்.

1998-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2005ஆம் ஆண்டு ஜூன் வரை சென்னையில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் அவர் பணியாற்றி இருப்பதால் இந்தப் பகுதியை நன்கு அறிந்தவராவார்.

அவரது இந்தப் பொறுப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் வரிசெலுத்துவோர் சேவைக்கும், வருவாயை அதிகரிக்கவும், முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஊழியர் நலனிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் கூடுதல் ஆணையர் பி செந்தில்வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                              •••••••


(Release ID: 1607219)
Read this release in: English