குடியரசுத் தலைவர் செயலகம்

விவேகானந்த கேந்திராவில் இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் அவர்கள் ஆற்றிய உரை

Posted On: 26 DEC 2019 6:08PM by PIB Chennai
  • விவேகானந்தா பாறை நினைவிடம் மற்றும் விவேகானந்தா கேந்திராவின் துணைத் தலைவர் திரு.அ.பாலகிருஷ்ணன் அவர்களே,
  • சிறப்புமிக்க விருந்தினர்களே,
  • தாய்மார்களே மற்றும் பெரியோர்களே,

1.    உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! விவேகானந்தா பாறை நினைவிடம் மற்றும் விவேகானந்தா கேந்திராவிற்கு வருகை தருவது என்பது சிறப்புமிக்க புனிதயாத்திரை போன்றது என்பதால் நான் இங்கு வருவதில் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன். அதிக அளவிலான நேர்மறையான தாக்கங்களை தொடர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் இடத்தில் நாம் கூடியிருக்கிறோம். இயற்கையாகவே அமைந்த சிறப்புமிக்க எழிலுடன் அமைந்துள்ள சில இடங்களில் விவேகானந்தா பாறை நினைவிடம் மற்றும் கேந்திராவும் ஒன்றாகும். அவை அமைதியற்ற மனதிற்கு அமைதியை அளித்து, சிந்தனையை தூண்டும் கேள்விகள் குறித்து சிந்திக்க வைக்கிறது.

2.    பாரத மாதாவின் காலடியில் அமைந்துள்ள இப்பாறையின் ஆன்மிக சக்தியானது சுவாமி விவேகானந்தரை கன்னியாகுமரிக்கு அவரது உள்அமைதிக்கான தேடலுக்காக வரவழைத்தது. இன்று பாறை அமைந்திருக்கும் இதே இடத்தில் தான், 127 ஆண்டுகளுக்கு முன்பாக, 1892, டிசம்பர் 25 அன்று சுவாமி அவர்கள் ஆழ்ந்த தியானத்தை துவக்கினார். மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளில், ஒரு சாதாரண துறவி, அறிவொளி பெற்றவராகவும், இந்திய கலாச்சாரத்திற்கான உலக தூதுவராகவும் உருமாறினார். இந்த பகுதியில் தான், சுவாமிகள் அறிவொளி பெற்று உயரிய ஆன்மிக புரட்சியை உருவாக்கினார். அது தனிநபரின் சுய இரட்சிப்பிற்கானது அல்ல; தாய்நாட்டின் ஆன்மிக மாண்புகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்காகவும் மற்றும் அதன் மக்களுக்கான சேவைக்கும் ஆனதாகும். சமீபத்தில், நான் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை பற்றிய நாடகத்தை காணும் அற்புத அனுபவத்தை பெற்று, அவர் “உணர்ந்த ஆன்மா”வாக உருமாறியதில் மெய்மறந்தேன்.

3.    இத்தருணத்தில், 1894, மார்ச், 19 அன்று சுவாமிகள் தனது திட்டங்கள் குறித்து எழுதிய கடிதத்தை நினைவு கூறுகிறேன். அவர் தன்னலமற்ற சன்யாசிகள் கிராமம், கிராமமாக சென்று, மக்களுக்கு கல்வியளித்து, அவர்களது நிலை மேம்பாடு அடைய உழைக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அவர் எழுதுகிறார், “நாம், ஒரு தேசமாக, நமது தனித்துவத்தை இழந்துவிட்டோம், அதுவே இந்தியாவின் அனைத்து தவறுகளுக்கும் காரணமாகும். நாம் தேசத்திற்கு அதன் தனித்துவத்தை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் மற்றும் மக்களை உயர்த்த வேண்டும்.”

4.    கன்னியாகுமரி அனுபவத்திற்கு பின்பான ஓராண்டிற்குள்ளாக, வரலாற்று சிறப்புமிக்க தினமான 1893, செப்டம்பர் 11 அன்று சிகாகோவில், உலக மதங்களுக்கான நாடாளுமன்றத்தில் சுவாமிகள் தனது சகாப்தத்தை உருவாக்கும் உரையை அவர் நிகழ்த்தினார். உலகெங்கிலிருந்தும் வந்திருந்த மதத் தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், உலகிற்கு சகிப்புத்தன்மை மற்றும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆகிய இரண்டையும் போதிக்கும் மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமைக் கொள்வதாக அறிவித்தார்.

தாய்மார்களே மற்றும் பெரியோர்களே,

5.    சுவாமிகளின் நூற்றாண்டு விழாவினை 1963-ல் கொண்டாடும்போது, அறியப்படாத ஒரு துறவி, நவீன காலத்தில் தலைச்சிறந்த ஆன்மிக தலைவர்களில் ஒருவராக உருவாமாறிய இடத்தில் நினைவிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி மக்கள் நினைத்தனர். 650 திறமையான கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரவும், பகலும் ஆறு ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர்.  இந்த நினைவிடத்தை கடின உழைப்பு, உறுதி மற்றும் அர்பணிப்பின் அடையாளமாகவும் அவர்கள் உருவாக்கினார்கள். விவேகானந்தர் பாறை நினைவிடம், 1970, செப்டம்பர், 2 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் திரு.வி.வி. கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இது கணக்கிலடங்காத பார்வையாளர்களை, குறிப்பாக இந்நாட்டின் இளைஞர்களை, உயர்ந்த லட்சியங்களுக்காக ஈர்த்துள்ளது.

6.    இந்த நினைவிடம் கட்டுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் குறித்து உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நினைவிடம், திரு.ஏக்நாத் ரனடே அவர்களின் அயராத முயற்சிகளால் சாத்தியமானது. இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் அவர் அணிதிரட்டினார்.

7.    சுவாமி விவேகானந்தர் அவர்களின் தகுதியான சீடர் என்பதற்கேற்ப, திரு.ஏக்நாத் அவர்கள் ஒரு துறவி போன்று வாழ்ந்து, இந்தியாவின் ஆன்மிக மேன்மையை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இதற்காக, அவர் தனது திறன்மிக்க நிர்வாகத் திறன்களை பணிகளில் செலுத்தினார். ‘கர்மயோகி’ ஏக்நாத் அவர்கள் இத்திட்டத்திற்காக மாபெரும் தொடர்புத் திட்டத்தினை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான மக்களை ஈடுபடுத்தினார். இத்திட்டத்திற்கான நிதியாக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தாழ்மையான பங்களிப்பாக தலா ஒரு ரூபாய் பெறப்பட்டது. மேலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்ததுடன், அவர்களில் 323 பேர்களை இத்திட்டத்திற்கு உதவியளிக்க கோரும் வேண்டுகோளில் கையெழுத்திட வைத்தார். கட்சிகளுக்கும் அல்லது மதங்களுக்கும் அப்பாற்பட்டு ஆதரவாளர்களை ஒன்றாக கொண்டு வந்து, இந்த கம்பீரமான நினைவிடத்தை அதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்களுக்கேற்ப உண்மையான தேசியமயமாக்கினார்.

8.    சுவாமி அவர்களின் நினைவினை வெறும் கிரானைட் கட்டடம் என்ற அளவில் கொண்டிருக்க ஏக்நாத் அவர்கள் விரும்பவில்லை. அவர் மக்களின் மனதில், தனக்கும் மேலாக தேசத்தை வைத்து, ஏழைமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வே சுவாமிகளின் உண்மையான வாழும் நினைவிடமாக இருக்கும் என நம்பிக்கை கொண்டார். இக்குறிக்கோளை மேம்படுத்தும் வகையில், 1972, ஜனவரி, 7 அன்று விவேகானந்தா கேந்திரம் உருவாக்கப்பட்டு, அது சேவையாற்றும் மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. விவேகானந்தா கேந்திரா விரைவில் தனது 50வது ஆண்டினை கொண்டாட உள்ளது.

 9.   இந்த வருடம் செப்டம்பர், 2 அன்று, பாறை நினைவிடம் துவங்கப்பட்டு ஐம்பதாவது ஆண்டிற்கான கொண்டாட்டங்களை நாம் துவக்கியுள்ளோம். அன்றைய தினம், ‘ஒரே பாரதம் வெற்றி பாரதம்’ தொடர்புத் திட்டத்தினை நான் துவக்கி வைத்தேன். கொண்டாட்டாங்களில், ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் கீழ், சுவாமி அவர்களின் செய்தியை இந்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்பிட விவேகானந்தா கேந்திரம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேற்றுமைகளின் சங்கமமாகவும், அவற்றை ஒன்றிணைக்கும் ஆன்மிக சக்தியாகவும் விளங்கும் விவேகானந்தா பாறை நினைவிடத்தின் உண்மையான மகத்துவத்தை  மேன்மேலும் மக்களிடம் உணர வைக்கும் என நான் நம்புகிறேன்.

10.   இந்தியா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்துள்ளது என அவ்வப்போது விவரிக்கப்படுகிறது. ஒன்று உயர்ந்த இமயமலையின் மடியில் உள்ளது, மற்றொன்று, அதன் மடியில் இந்த கம்பீரமான நினைவிடத்தை கொண்டுள்ளது. இமயமலை மற்றும் விவேகானந்தா பாறை நினைவிடம் ஆகியவை இந்நாட்டில் வாழ்வோரிடம் தங்களது சிறிய தனிப்பட்ட அடையாளங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கான தேவையை நினைவூட்டுகிறது. இரண்டுமே வாழ்வில் சாதாரண நிலையிலிருந்து உயர்நிலையை நாம் அடைவதற்காக தொடர்ந்து நமக்கு உணர்வூட்டுகின்றன. வெற்று இயற்கையின் மத்தியில் கம்பீரமாக நிற்கும் பாறை நினைவிடமானது, கொந்தளிக்கும் கடல்களுக்கிடையே நமது ஆன்மிக வீட்டிற்கு நமது கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது.

11.   சுவாமி விவேகானந்தர் அவர்களின் வாழ்க்கை மற்றும் செயல்கள், வரும் காலங்களிலும் இந்நாட்டிற்கு தொடர்ச்சியாக உணர்வூட்டுமாக!

நன்றி,

ஜெய் ஹிந்த்!



(Release ID: 1597721) Visitor Counter : 215


Read this release in: English