|
பிரதமர் அலுவலகம்
விவசாய மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAR 2018 5:14PM by PIB Chennai
எனது அமைச்சரவை சகாக்களே, திரு. ராதா மோகன் சிங் அவர்களே, மத்தியப் பிரதேச முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, மேகாலயா மாநில முதல்வர் கன்ராட் சங்மா ஜி, எனது சகா திரு. பர்ஷோத்தம் ருபாலா ஜி, திரு. கஜேந்திர சிங் செகாவாத் அவர்களே, திருமதி. கிருஷ்ணா ராஜ் அவர்களே, விஞ்ஞானிகளே, இந்த நிகழ்வின் மையமாக விளங்குகின்ற நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள எனது விவசாய சகோதர, சகோதரிகளே,
உங்கள் அனைவரையும் இந்த விவசாய மேம்பாட்டு விழாவிற்கு வரவேற்கிறேன். இத்தகைய விழாக்கள் புதிய இந்தியாவின் பாதையை வலுப்படுத்துவதில் மிகப்பெரும் பங்கை வகிக்கின்றன.
இந்த விழாவின் மூலமாக புதிய இந்தியாவின் இரண்டு கண்காணிப்பாளர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் ஒரு பகுதியினர் நாட்டிற்கு உணவளிப்பதற்காக கடுமையாக உழைக்கும் விவசாயிகள். மற்றொரு பகுதியினர் புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குகின்ற நமது விஞ்ஞானிகள்.
இந்த முறை நாடு முழுவதிலும் உள்ள விவசாய அறிவியல் மையங்களில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக தொடர்பில் உள்ளனர். இத்தருணத்தில் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகளே, இந்த மேடைக்கு வருவதற்கு முன்பாக, இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். பல விஞ்ஞானிகளுடனும் விவசாயிகளுடனும் பேசினேன். விவசாயம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களுடனும் பரிச்சயம் செய்து கொண்டேன். புதிய தொழில்நுட்பங்கள் குறித்த நேரடியான விளக்கங்களுடன் தரப்படும் தகவல்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உதவி செய்வதாகவே இருக்கும்.
விவசாயத் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளை மரியாதை செய்வதற்கான வாய்ப்பும் எனக்கு இன்று கிடைத்தது. அனைத்து மாநிலங்களுக்கும், க்ரிஷி கர்மான், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா க்ரிஷி ப்ரோத்சஹான் விருதுகளை பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் கடுமையான உழைப்பை அங்கீகரித்து, அதற்கு மரியாதை செய்வதாகவும், கோடிக்கணக்கான விவசாயிகளை ஊக்கப்படுத்தும் ஒரு கருவியாகவும் இந்த விருதுகள் அமைகின்றன.
உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்த பல மாநிலங்களுக்கும் இன்று விருதுகள் வழங்கப்பட்டன. தனியாக விருது வழங்கப்பட்ட மேகாலயாவைப் பற்றி குறிப்பாக நான் பேச விரும்புகிறேன். நண்பர்களே, பரப்பளவில் மிகச் சிறிய மாநிலமான மேகாலயா மகத்தான செயலைப் புரிந்துள்ளது. அந்த மாநிலத்தின் விவசாயிகள் 2015-16-ம் ஆண்டில் ஐந்தாண்டுகளிலேயே மிக அதிகமான உற்பத்தியை செய்துள்ளனர். மேகாலயா மாநிலத்தின் இளம் முதல்வர் இங்கே மேடையில் வீற்றிருக்கிறார். மேகாலயா மாநில விவசாயிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் இதே போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்.
இலக்கு தெளிவாக இருக்குமெனில், நாள்தோறும் வேலை செய்ய நாம் விரும்பினால் அந்த இலக்கை அடைவது இயலாத ஒன்றல்ல என்ற எனது நம்பிக்கை இப்போது மேலும் வலுவாகியுள்ளது. நமது நாட்டின் விவசாயிகள் கடுமையாக உள்ள இலக்குகளை அடைவதற்கான நம்பிக்கையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். நாடு விடுதலை பெற்ற பின்பு நிலவிய உணவு தானிய உற்பத்தியின் நிலையை நாம் மறந்து விடக் கூடாது. நமது உணவை உற்பத்தி செய்பவர்கள் அத்தகைய சிக்கலான சூழ்நிலையில் இருந்து நம்மை விடுவித்துள்ளனர். இன்று நாட்டில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் என அதிக அளவு உற்பத்தியை நாம் கண்டு வருகிறோம்.
எனவே நாட்டின் விவசாயத்தின் முன்னேற்றத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தாய்மார்கள், சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் எனது வணக்கத்தை செலுத்த விரும்புகிறேன்.
நண்பர்களே, நமது நாட்டின் விவசாயத் துறை பல விஷயங்களில் உலகம் முழுவதற்குமே வழி காட்டியிருக்கிறது. எனினும் காலப் போக்கில் இன்றைய யுகத்தில் விவசாயம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சவால்கள் விவசாயிகளின் வருமானத்தை குறைத்து, விவசாயத்திற்கான செலவை அதிகரித்து வருகிறது.
இந்த சவால்களை முழுமையானதொரு வகையில் நேர்மையுடன் எதிர்கொள்ள எமது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான நடவடிக்கைகளின் திசைவழி மட்டும் ஒன்றேதான். அதாவது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது; விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவது என்ற ஒரே இலக்குதான் அதில் அடங்கியிருக்கிறது. இந்தத் தீர்மானத்துடன் தான் நாங்கள் வெகு விரைவாக முன்னேறிச் செல்கிறோம்.
இன்று 11 கோடிக்கும் மேற்பட்ட மண்வள அட்டைகள் நாடு முழுவதிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மண் வள அட்டையில் இருந்து பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் மகசூலை விவசாயிகளால் அதிகரிக்க முடிந்துள்ளது. அதே நேரத்தில் உரத்திற்கான செலவையும் அவர்களால் குறைக்க முடிந்துள்ளது.
யூரியாவிற்கு 100 சதவீத வேப்பிலை மேற்பூச்சு பூசுவதை கட்டாயமாக்கியதன் விளைவாக உர நுகர்வு பெருமளவிற்கு குறைந்துள்ளது. ஹெக்டேருக்கு தானிய உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
சகோதர, சகோதரிகளே, பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மிகக் குறைந்த பிரிமிய விகிதத்தில் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பினை எமது அரசாங்கம் வழங்கியுள்ளது. காப்பீட்டின் மீதான உச்சவரம்பையும் நாங்கள் அகற்றி முழுத் தொகையையும் காப்பீடு செய்ய அனுமதித்துள்ளோம். இந்த திட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு விவசாயியும் பெறுகின்ற இழப்பீட்டுத் தொகையானது இரண்டு மடங்குக்கும் மேலானது. இது விவசாயிகளின் நலனுக்காக எமது அரசு மேற்கொண்ட மிகப்பெரும் நடவடிக்கை ஆகும்.
பிரதமர் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் அனைத்திற்குமான பாசன வசதி என்ற தொலைநோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பல பத்தாண்டுகளாக அரைகுறையாக நிற்கும் பாசனத் திட்டங்கள் ரூ. 80 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பிரதமர் விவசாய கட்டமைப்புத் திட்டத்தின் வழி நவீன விவசாய கட்டமைப்பை உருவாக்கி வயலில் இருந்து சந்தைக்கான விநியோக சங்கிலியை எமது அரசு வலுப்படுத்தி வருகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பசுமைக்கான நடவடிக்கையும் கூட புதிய விநியோக சங்கிலி முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள், குறிப்பாக தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
விவசாயிகளின் நலனைக் கருதி முன்மாதிரி சட்டத்தை அமலாக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மாநிலங்கள் அவற்றை அமலாக்கிய பிறகு இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க உதவும்.
விவசாயிகளுக்கு நவீன ரக விதைகள் கிடைக்கப்பெற வேண்டும். அதைப் போன்றே மின்சாரமும் அவர்களுக்குத் தேவைப்படும். தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அவர்கள் எடுத்துச் செல்லும்போது எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது. தங்களின் பயிருக்கு அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். எனவே இதற்காக எமது அரசு அல்லும்பகலும் பாடுபட்டு வருகிறது.
நண்பர்களே, அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது குறைந்த பட்சம் அதன் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு ஆக இருக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. எனது விவசாய சகோதரர்களுக்கு அதைப் பற்றி விரிவாக விளக்க விரும்புகிறேன். சகோதர, சகோதரிகளே, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும்போது உங்கள் உழைப்பின் மதிப்பு, கால்நடைகளின் மதிப்பு அல்லது இயந்திரங்களுக்கான வாடகை, விதைகளின் விலை, அனைத்து வகையான உரங்கள், பாசனம், மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிலவாடகை, செயல் மூலதனத்திற்கான வட்டி, குத்தகை நிலத்திற்கான செலவு மற்றும் இதர செலவுகள் சேர்த்துக் கொள்ளப்படும்.
மேலும் விவசாயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பும் உற்பத்திச் செலவில் சேர்க்கப்படும்.
நாட்டில் மிகக் கடுமையான உழைப்பைச் செலுத்தி வரும் விவசாயிகளின் வருமானம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமானதொரு நடவடிக்கையாகும் இது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன்கள் விவசாயிகளுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நாங்கள் மிக நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம்.
நண்பர்களே, விவசாயிகளின் பயிர்களுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்த விவசாய (பொருட்களின்) விற்பனைக்கான சீர்திருத்தங்கள் குறித்தும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
உள்ளூர் மொத்தவிற்பனை சந்தைகளை உலகச் சந்தைகளுக்கு தகுந்த வகையில் திருத்தியமைப்பது மிகவும் முக்கியமாகும்.
விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பதற்காக நீண்ட தூரம் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமப்புற சில்லறை விவசாய சந்தை என்பது இந்த முயற்சியின் விளைவாக எழுந்த கருத்தாக்கமே ஆகும். இதன் கீழ் நாட்டில் உள்ள 22,000 கிராமப்புற சந்தைகள் தேவையான கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்டு, விவசாய விளைபொருட்களுக்கான சந்தைக் குழுவுடன் மற்றும் இணைய தள அடிப்படையிலான தேசிய விவசாய விளைபொருட்களுக்கான சந்தையுடன் ஒன்றிணைக்கப்படவிருக்கின்றன. ஒரு வகையில் தனது நிலத்தில் இருந்து 5-6 கிலோமீட்டர் தூரத்திற்குள் இத்தகைய அமைப்புடன் விவசாயிக்கு தொடர்பு ஏற்படும் என்பதோடு நாட்டில் உள்ள எந்தவொரு சந்தையுடனும் அவர் தொடர்பு கொள்வதற்கும் வழியேற்படுத்தும்.
இத்தகைய கிராமப்புற சந்தைகளின் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கே விற்க முடியும். வரும் நாட்களில் இந்த மையங்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரித்து விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புற, விவசாய பொருளாதாரத்தின் புதிய மையங்களாக உருப்பெறும்.
இந்த நிலைமையை மேலும் வலுப்படுத்த விவசாயி உற்பத்தியாளர் அமைப்பையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. கிராமப்புற சந்தைகளில் விவசாயிகள் சேர்வதுடன், சிறிய அமைப்புகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள பெரும் மொத்தவிற்பனை சந்தைகளுடனும் இணைத்துக் கொள்ள முடியும்.
நண்பர்களே, ஒற்றுமையே வலிமை என்பது நம் நாட்டில் நிலவி வரும் பழமொழி. விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் இது பொருந்தும். ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் ஒன்றுபட்ட குழு உரத்தை விலைக்கு வாங்கி அதை தங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது பெருமளவு பணத்தை அவர்களால் சேமிக்க முடியும். அதைப் போலவே பூச்சிக் கொல்லி மருந்துகள், விதைகள் போன்றவற்றை வாங்கும்போது பெரிய அளவுக்கு தள்ளுபடியையும் அவர்களால் பெற முடியும். அதே குழுவினர் கிராமத்தில் உற்பத்தியான பொருட்களை ஒன்றுசேர்த்து அதை பொட்டலமாக கட்டுவதில் உதவி செய்து சந்தையில் கொண்டு சென்று விற்கும்போது நிச்சயமாக அவர்களின் வருமானம் அதிகரிக்கும். இந்த வகையில் விவசாயிகள் பெருமளவிற்கு நன்மை பெறுவார்கள். ஏனெனில் நிலத்திற்கும் நுகர்வோருக்கும் இடையேயான செலவை அது வெட்டிக் குறைக்கும்.
சகோதர, சகோதரிகளே,
கூட்டுறவு கழகங்களைப் போலவே இந்த விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளும் கூட வருமானவரியில் இருந்து விலக்கு பெறும் என இந்த பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்புகளின் உதவியுடன் பெண்களின் சுய உதவிக் குழுக்களை இயற்கை விவசாயம், நறுமணப் பொருட்கள், மூலிகைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபடும் விவசாயிகளுடன் இணைப்பு ஏற்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதுவும் கூட விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கியமானதொரு நடவடிக்கையே ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை எளிதாக விற்பதற்கு உதவி செய்ய புதியதொரு அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாய மாநாட்டில் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த இணையதள வழிப்பட்ட சந்தைப்படுத்தும் இணைய தளம் குறித்த எனது கருத்தை கடந்த மாதம் நான் முன்வைத்தேன். அது இன்று துவங்கப்படுவது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கும், நுகர்வோரின் வீட்டுக்கும் கொண்டு செல்வதில் இணைய தள வழிப்பட்ட சந்தைப்படுத்தும் இணைய தளம் முக்கியமானதொரு பங்கினை வகிக்கும். உற்பத்திப் பொருட்கள், சந்தை மற்றும் விநியோகத்திற்கான சங்கிலித் தொடர் ஆகியவை பற்றிய விவரங்கள் மிக எளிதாக விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இதன் மூலம் கிடைக்கும்.
சகோதர, சகோதரிகளே, இயற்கை விவசாயத்தை இங்கு நான் வலியுறுத்துவதன் பொருள் அது பாரம்பரியமானது; அதே நேரத்தில் நவீனமானதும் ஆகும். உலகத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் மிகப் பழமையான நாடுகளில் நமது நாடும் ஒன்றாகும் என்பதே உண்மை. இன்று 22 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் இயற்கை விவசாயத்திற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக, இயற்கை விவசாயத்திற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்பது மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை ஆகும். இதில் நாம் பின் தங்கியிருக்கிறோம். இந்த வகையில் இந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு இணையதள வழிப்பட்ட சந்தைப்படுத்தும் இணையதளம் மிகப்பெரும் உதவி செய்வதாக இருக்கும்.
நண்பர்களே, பாரம்பரிய விவசாய மேம்பாட்டிற்கான திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுப்பதில் அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, இயற்கை விவசாயத்திற்கான ஒரு மையமாக நாட்டின் வடகிழக்குப் பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது.
நண்பர்களே, விவசாயத் துறையில் இத்தகைய புதிய பிரிவுகளின் முன்னேற்றம் என்பது எதிர்காலத்தில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவிபுரிவதாக அமையும். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகியவற்றுடன் இயற்கை விவசாயப் புரட்சி, தண்ணீர் புரட்சி, நீலப் புரட்சி, இனிப்புப் புரட்சி போன்றவற்றில் எவ்வளவு அதிகமாக நாம் மேலும் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.
இந்த வகையில் நமது விவசாய அறிவியல் மையங்கள் மிக முக்கியமான பங்கினை வகிப்பதாக இருக்கும். இன்று 25 புதிய விவசாய அறிவியல் மையங்கள் தொடங்கப்ப்ட்டுள்ளன. இப்போது நமது நாட்டில் மொத்தம் கிட்டத்தட்ட 700 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விவசாய அறிவியல் மையங்கள் நவீன விவசாயத்தின் கலங்கரை விளக்கங்கள் என்றே நான் கருதுகிறேன். இந்த மையங்களில் இருந்து வெளிப்படும் ஒளி நாட்டின் விவசாயத்தின் மீது ஒளிவீசுவதாக இருக்கும். இந்த மையங்களின் மிக முக்கியமான வேலை என்பது புதிய தொழில்நுட்பங்களையும் புதிய தகவல்களையும் விவசாயிகளுக்குத் தருவதே ஆகும். முழுமையான ஈடுபாட்டுடன் இந்த வேலையை தொடர்ந்து செய்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இன்று இங்கே விருது பெற்ற விவசாய அறிவியல் மையங்களில் பலவும் தேனி வளர்ப்பில் முக்கியமான பங்கினை வகித்து வருகின்றன. தேனி வளர்ப்பு என்பது வருவாய்க்காக மட்டுமல்ல; அது மனித குலத்தின் நன்மைக்குமானது. மாபெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறியிருந்தார்: “பூமியில் இருந்து தேனிக்கள் மறைந்துவிடுமானால், அதன்பிறகு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே மனித குலத்தால் நிலைத்து இருக்க முடியும்.”
இந்தக் கருத்தானது விவசாயத்திலும் தோட்டக் கலையிலும் தேனிக்களின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் கூறுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, நூறு வகையான பயிர் வகைகளில் 70 சதவீதமான பயிர்களை தேனிக்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. தேனியானது இனச்சேர்க்கைக்கு மட்டுமே உதவி செய்வதில்லை; அது நமக்கு தேனையும் சேகரித்துத் தருகின்றது.
எனவே இந்தப் பாதையானது விவசாயியின் மகசூலை மட்டுமே அதிகரிப்பதில்லை; தேன் வடிவில் கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான வழியையும் தருகின்றது. அது இனிப்புப் புரட்சியை நோக்கியும் நம்மை இட்டுச் செல்கிறது. ஒரு மதிப்பீட்டின்படி, தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 50 பெட்டிகள் தேனை விற்பதன் மூலம் மட்டுமே இரண்டில் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடிகிறது.
அதைப் போலவே கூடுதல் வருவாய்க்கான மற்றொரு வழி சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாகும். இது பாசனத்திற்கு உதவும் ஒரு தொழில்நுட்பம் என்பது மட்டுமின்றி, சுற்றுச் சூழலையும் பாதுகாக்கிறது. வயலில் ஓரங்களில் நிறுவப்படும் சூரிய ஒளிப்பலகைகள் நீரை மேலேற்றுவதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவது மட்டுமின்றி, தயாரிக்கப்படும் கூடுதல் மின்சாரத்தை அரசுக்கு விற்கவும் வழியேற்படுத்துகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றிலிருந்து விவசாயியை அது விடுவிப்பதோடு சுற்றுச் சூழலையும் பாதுகாக்கிறது. பெட்ரோலையும் டீசலையும் வாங்குவதற்காக அரசு செலவு செய்யும் பணமும் கூட இதனால் மிச்சமாகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் விவசாயிகளுக்கு அரசு 3 லட்சம் சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் செயல்படும் பம்ப்புகளை வழங்கியுள்ளது. இதற்கென ரூ. 2500 கோடி அனுமதிக்கப்பட்டது.
எனதருமை விவசாய சகோதர, சகோதரிகளே, கழிவில் இருந்து செல்வத்தை உருவாக்குவது என்ற திசைவழியில் அரசு பயனுள்ளதொரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் கோபார்தன் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது இயற்கை வழியிலான உயிரி ஆதாரங்களில் இருந்து செல்வத்தை உருவாக்கும் திட்டம். கிராமங்களில் பெருமளவிலான உயிரி கழிவு உருவாகின்றன. இது சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கான மிகப்பெரும் காரணமாக அமைகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த கழிவு இப்போது தொழு உரமாக, உயிரி வாயுவாக, உயிரி இயற்கை வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த திட்டமும் கூட விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்.
விவசாயிகளுக்கு கவலையைத் தருகின்ற விளைபயிர் எச்சங்களும் கூட பணம் ஈட்ட அவர்களுக்கு உதவும். கயிறு கழி, தேங்காய் ஓடுகள், மூங்கில் கழிவுகள், அல்லது வயல்களில் அறுவடைக்குப் பிறகு தேங்கி விடும் எச்சங்கள் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, ஒரு சில பகுதிகளில் வயல்களில் உள்ள மிச்சங்களை எரித்துவிடும் தவறான பழக்கம் நிலவுகிறது. ஒரு சிலரால் அது ‘தட்டையை எரிப்பது’ என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் விளைபயிர் என்பது என்ன? அது நிலத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ஊட்டச்சத்துக்கள், காற்று, நீர், சூரிய வெளிச்சம், விதையின் வலிமை ஆகியவற்றின் கலவையே ஆகும். அத்தகைய விளைபயிரின் எச்சத்தை நாம் எரிக்கிறோம் எனில் இந்த உயிரோட்டமான அம்சங்கள் எரிந்து காற்றில் கரைந்து விடுகிறது. இது காற்றை மாசுபடுத்துவதோடு, நிலத்தின் மண்வளத்திற்கும் சேதம் விளைவிக்கிறது.
விவசாயிகள் இவ்வாறு தட்டையை எரிப்பதை நிறுத்திவிட்டு, இயந்திரத்தின் உதவியுடன் அதை நிலத்தோடு கலந்து விட்டால், அவர்களுக்கு பெரும்பயன் விளையும். வயலில் இவ்வாறு தட்டையை கலந்துவிடுவதன் மூலம் மண்வளம் மிகப்பெருமளவிற்கு மேம்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. உரத்திற்கான தேவையும் குறைந்து விளைச்சலும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதெனில் இந்த நடவடிக்கை விவசாயியின் வருவாயை அதிகரிக்கிறது.
எனவே நிலத்தில் உள்ள தட்டையை எரிப்பது என்ற வழக்கத்தை நிறுத்தி விட வேண்டுமென எனது விவசாய சகோதரர்களை இந்த மேடையில் இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். இயந்திரம் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு நிதியுதவியையும் இப்போது அரசு வழங்கி வருகிறது. மண் வளமாக இருக்கும்போது வயலும் பசுமையாகவே இருக்கும்.
நண்பர்களே, தங்களின் வருவாயை அதிகரிக்க புதிய வழிகளை மேற்கொள்கின்ற விவசாயிகள் நிதிப் பற்றாக்குறையை சந்திக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. கடன் வாங்கும்போது விவசாயிகள் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். எனவே இந்த ஆண்டு விவசாய வேலைகளுக்கான கடன் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 10 லட்சம் கோடியில் இருந்து ரூ. 11 லட்சம் கோடிக்கும் மேலாக அரசு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகியவற்றுக்கென கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு இதற்கென ரூ. 10,000 கோடி நிதியையும் அரசு ஒதுக்கியுள்ளது. தேசிய மூங்கில் இயக்கத்திற்கென சுமார் ரூ. 1,300 கோடியையும் அரசு ஒதுக்கியுள்ளது.
ஒரு சில இடங்களில் குத்தகை சாகுபடி என்று அழைக்கப்படுகின்ற நிலத்தை வாடகைக்கு எடுத்து பயிர் செய்யும் விவசாயிகளின் நலனுக்காகவும் நாங்கள் முயற்சிகளை எடுத்து வருகிறோம். இடையூறுகள் ஏதுமில்லாத வகையில் விவசாயிகள் கடன் பெறுவதை உறுதி செய்ய மாநில அரசுகளுடன் நாங்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
கூட்டுறவுக் கழகங்களில் இருந்து கடன் பெறுவதில் சிறுவிவசாயிகள் தடைகளை எதிர்நோக்குவதையும் நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். இதற்கென நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கான தொடக்க கூட்டுறவுக் கழகங்களிலும் கணினி மயப்படுத்தும் வேலை மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது.
நண்பர்களே, விவசாயம் என்பது நமது நாகரீகத்தின், கலாச்சாரத்தின் ஆணிவேராக விளங்குகிறது. நமது சமூக, பொருளாதார வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாகவும் அது அமைகிறது. எனினும் கடந்த பல நூற்றாண்டுகளாக நாம் நடந்து வந்த பாதை புதிய இலக்குகளை அடைவதற்கு நமக்கு உதவி புரியுமா என்று நம்மால் உறுதியாகக் கூறிவிட முடியாது. இந்தப் புதிய பாதைகளில் நடப்பதற்கு தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்யும். விவசாய மேன்மைக்கான திருவிழாவில் தாங்கள் கண்ட புதிய பரிசோதனைகளை விவசாய சகோதரர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
இந்தப் பரிசோதனைகளை நாட்டின் இதர பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்னிடம் மேலும் ஒரு வேண்டுகோள் உள்ளது. நண்பர்களே, இத்தகைய கண்காட்சிகள் டெல்லி மாநகரில் அடிக்கடி நடைபெறுகின்றன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் விவசாயத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழும் பகுதிகளிலும் இது போன்ற கண்காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் உங்களின் முயற்சிகளும் தொழில்நுட்பமும் மக்களைச் சென்றடையும்.
மேலும் இத்தகைய கண்காட்சிகளின் தாக்கம் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய கண்காட்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் இந்தக் கண்காட்சிகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பற்றியும், அவர்கள் விரும்புகின்ற தொழில்நுட்பங்கள் பற்றியும், அதை மேற்கொண்டதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை எளிமையானதாக மாறியுள்ளதா என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய ஆய்வு எதிர்காலத் தயாரிப்புகளுக்கு நமக்கு உதவி செய்யும்.
நண்பர்களே, நமது பழம்பெரும் நூல்களில் சொல்லப்படுவதுண்டு:
தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் எறும்பு படிப்படியாக பல கிலோமீட்டர் தூரத்தை கடந்து விடும்; ஆனால் அசையாமல் நிற்கும் ஒரு கழுகு ஓர் அடியைக் கூட எடுத்து வைக்காது. நமது முயற்சிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் கூட நம்மால் வெற்றியை அடையமுடியும் என்பதே இதன் பொருளாகும்.
நண்பர்களே, எறும்பைப் பற்றிய ஓர் உதாரணத்தை நான் எடுத்துக் கூறிய போதிலும் அதோடு தொடர்புடைய மற்றொரு விஷயத்தை நான் சொல்லத் தவறிவிட்டேன். இதை நான் எங்கோ ஓரிடத்தில் படித்தது. இந்த பூமிப்பந்தில் உள்ள ஜீவராசிகளில் விவசாயத்தை மேற்கொள்வது மனித இனம் மட்டுமேயல்ல; மனித இனம் தவிர மேலும் இரண்டு மூன்று உயிரினங்களும் தங்களுக்கான உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றன. அவற்றில் எறும்பும் ஒன்றாகும்.
உலகத்திலுள்ள ஒரு சில காடுகளில் எறும்புகள் முறையான வகையில் காளான்களை உற்பத்தி செய்கின்றன. இதற்காக நிலத்தை பண்படுத்தி, கழிவுகளை அகற்றி, நீருக்கான ஏற்பாட்டையும் செய்து கொள்கின்றன. அவை பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகின்றன.
சகோதர, சகோதரிகளே, பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்த எறும்புகள் நீடித்து வாழ்ந்து வருகின்றன. அதற்கான காரணம் அவற்றின் மனவலிமைதான். உலகத்தின் மிகப் பழமையான, மிகச் சிறிய விவசாயி நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்: அடையவே முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை.
வாருங்கள்! இந்திய விவசாயத்தை மேலும் மேம்படுத்த, இந்திய விவசாயத்தின் புகழை மீட்டெடுக்க சபதமேற்போம்!
எனது உரையை நிறைவு செய்யும் தருணத்தில் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
(வெளியீட்டு அடையாள எண்: 1557432)
|