பிரதமர் அலுவலகம்

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு – 2017-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 26 NOV 2017 8:48PM by PIB Chennai

ஷோபனா பார்தியா அவர்களே,

இங்கு வந்திருக்கும் அனைத்து பிரமுகர்களே,

சகோதர, சகோதரிகளே,

மீண்டும் ஒரு முறை உங்களைச் சந்திக்கும்  வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இங்கு பல அறிமுகமான முகங்களை என்னால் காண முடிகிறது. என்னை மீண்டும் அழைத்ததற்காக இந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்திற்கும், அதன் வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உச்சி மாநாட்டில் நான் கலந்து கொண்ட போது பிரகாசமான இந்தியாவை நோக்கிஎன்ற தலைப்பில் நாம் உரையாற்றினோம். அடுத்த இரண்டே ஆண்டுகளில் இன்று இந்தியாவின் மாற்ற முடியாத எழுச்சிஎன்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். தலைப்பில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை, நாட்டின் எண்ண ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பிரதிபலிப்பாக இது காணப்படுகிறது. நாட்டின் நம்பிக்கையிலும் இது மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது

     நாடு முழுவதையும் நாம் பார்த்தோமானால், ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை நாட்டில் ஏற்பட்டுள்ளதைக் காண முடியும்இது இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒன்றாகும். ஏழை, எளிய மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு தங்களது திறமை, வளங்கள், கனவுகள் குறித்து இத்தகைய நம்பிக்கை எப்போதாவது இருந்ததா என்பதை  என்னால் நினைவுகூர இயலவில்லை.

     125 கோடி இந்தியர்களாகிய நாம், இடையறாது, இரவு, பகலாக உழைத்ததால்தான் இந்த நம்பிக்கையை ஏற்படுத்த நம் அனைவராலும் முடிந்துள்ளது. நாட்டு மக்கள் தங்கள் மீதும், நாட்டின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையே நாட்டின் எழுச்சிக்கான சூத்திரமாகும்.

     இன்று கீதை தினம், கீதையில் மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உங்களது தகுதியை உயர்த்துங்கள், எதிர்மறையான எண்ணங்களைத் தவிருங்கள்.

உங்களுக்கு நீங்களே நண்பர், நீங்களே பகைவர்,

அதனால்தான் புத்தபகவான் அப்பா தீபோ பவோஎன்று கூறியுள்ளார். இதன் பொருள், உனக்கு நீயே சொந்த விளக்காக வேண்டும்.

     125 கோடி மக்களிடையே கிளர்ந்துள்ள நம்பிக்கை நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக மாறிக் கொண்டிருக்கிறது.

     இந்த விடுதிக்கு வெளியே ஆட்டோ ஓட்டுபவராக இருந்தாலும், ரிக்ஷா இழுப்பவராக இருந்தாலும், பழுதடைந்த வயலின் வரப்புகளை செம்மைப்படுத்துபவராக இருந்தாலும், கடும் பனியில், இரவுப்பணியை முடித்து விட்டு கூடாரத்தில் உறங்கும் காவலாளியாக இருந்தாலும், இந்த அரங்கில் நிறைந்துள்ள ஒவ்வொருவரும், கடின உழைப்பை மேற்கொள்பவர்கள்தான். அதனால்தான் பிரகாசமான இந்தியாவை நோக்கிஎன்ற தலைப்புக்கு அப்பால் இந்தியாவின் மாற்ற முடியாத எழுச்சிஎன்ற தலைப்பாக மாறி இருக்கிறது.

நண்பர்களே, 2014-ஆம் ஆண்டு மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் வாக்களிக்கவில்லை. நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், அவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். நிர்வாக நடைமுறை நிலைத்ததாகவும், நிரந்தரமானதாகவும், மாற்ற முடியாததாகவும், இருப்பதற்கான மாற்றங்களைக் கொண்டுவர, அந்த வாக்கு பயன்பட்டது. நாடு சுதந்தரமடைந்து பல ஆண்டுகள் ஆகியும், நமது நிர்வாக நடைமுறையின் பலவீனமானது, நாட்டின் வெற்றிப்பாதையில் தடைக்கல்லாக இருந்து வந்தது.

     நாட்டின் ஆற்றலைக் கொண்டு நீதி வழங்க இயலாத ஒரு நடைமுறை இருந்து வந்தது. எல்லா இடத்திலும், யாராவது சிலர் இந்த நடைமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தனர். எனது முயற்சியால் மட்டும் அல்லாமல், எனது உறுதிப்பாடு காரணமாக, மக்களுக்கும், நடைமுறைக்கும், இடையிலான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்களது வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தையும், தடங்கல் இல்லாத வாழ்க்கை முறையையும், நாம் கொண்டு வந்திருக்கிறோம்.

     அதானல்தான், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள், சமையல் எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள், மருத்துவ மனையில் சேருவது, பாஸ்போர்ட் பெறுவது, வருமானவரியைத் திரும்பப் பெறுவது போன்ற சிறிய விஷயங்களை மக்கள் எளிதாக அடைய முடிகிறது.

 நண்பர்களே, இந்த அரசின் மிகப்பெரிய முன்னுரிமை, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சியுடன் கூடிய சுற்றுச்சூழல் முறையைக் கொண்டு வருவதாகும். கொள்கைகள், தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, ஆகியவற்றின் அடிப்படையில், இத்தகைய சுற்றுச்சூழல் முறை இருக்க வேண்டும். இதில் கசிவுகள், முறைகேடுகளுக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

     ஜன்தன் திட்டத்தைப் பார்த்தோமானால், அது ஏழைமக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. முன்னர் யாரும் இதுபற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏழை மக்கள் முன்பெல்லாம், வங்கிகளின் வாயிலில் நிற்பதற்குக் கூட இயலாத நிலையில் அவமதிக்கப்பட்டனர். ஆனால் இன்று, அவர்கள் தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 125 கோடியில் 30 கோடி மேற்பட்டவர்களுக்கு இந்தக் கணக்குகள் உள்ளன.

     வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை சேமிப்புக்காக செலுத்தும் போதும், ரூபே அட்டைகளைப் பயன்படுத்தும்போதும், ஏழை மக்களிடம் ஏற்பட்டுள்ள தன்னம்பிக்கையைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தத் தன்னம்பிக்கையும், தைரியமும், இப்போது நிரந்தரமாகி விட்டன. அவற்றை யாரும் மாற்ற முடியாது.

     உஜ்வாலா திட்டமும், இந்த வகையைச் சேர்ந்ததே. இது, கிராமப்புறங்களைச் சேர்ந்த 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வாழக்கையை நிரந்தரமாக மாற்றி அமைத்துள்ளது. அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கிடைத்ததால் மட்டும் இந்த மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பும், குடும்பத்திற்காக செலவிட நேரமும் கிடைத்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

     தூய்மை இந்தியா இயக்கத்தின் பலனாக, லட்சோபலட்சக் கணக்கான இத்தகையப் பெண்களின் வாழக்கையில், கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் குறித்து, தயவு செய்து எண்ணிப் பாருங்கள். அரசு கழிவறைகளைக் கட்டுவதால் மட்டும் இது நிகழ்ந்து விடவில்லை. லட்சக்கணக்கான பெண்களும், அவர்களது பெண் குழந்தைகளும், மாலை வருவதற்காக காத்திருக்க வேண்டிய அவல நிலையால் ஏற்பட்ட துயரத்திலிருந்து தற்போது மீண்டுள்ளனர்.

     சிலர் எங்கோ நடக்கும் சில தவறுகளை புகைப்படங்களாக எடுத்துப் போட்டு, இழிவானவற்றை எழுதிவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொலைக்காட்சியில் அதை விவாதித்தும் வருகின்றனர். ஆனால், இந்த இயக்கம் எந்த வகையிலான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது என்பதைக் களத்தில் உள்ள மக்கள் நன்றாக அறிவார்கள்.

சகோதர, சகோதரிகளே, இந்த அரங்கில் அமர்ந்துள்ள எத்தனை பேர்இங்கிருந்து போகும்போது, பார்க்கிங் உதவியாளருக்கு சிறு வெகுமதி வழங்குவீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், அந்தத் தொகையைவிடக் குறைவான தொகைக்கு இன்று ஏழை மக்களின் வாழ்க்கை காப்பீடு செய்யப்படுகிறது.

     மாதத்திற்கு ஒரு ரூபாய்க்கு குறைவாக விபத்து காப்பீடும், நாளொன்றுக்கு 90 பைசா வீதம் ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியமும்  வழங்கப்படுவதைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போது, 15 கோடிக்கும் அதிகமாக  ஏழைமக்கள் அரசின் இந்தத் திட்டங்களில் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டங்களின் கீழ், ஏழை மக்களுக்கு உரிமைக் கோரிக்கைக்காக சுமார் ரூ.1,800 கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த அரசாவது, இத்தகைய நிதியை வழங்கி இருந்தால் அது மீட்பராக கருதப்பட்டு இருக்கும்.

     ஏழை மக்களுக்காக இத்தகைய மிக முக்கியமான நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், எவராவது இதில் கவனம் செலுத்தினார்களா என, நான் கவலைப்படவில்லை. இதுதான் நிதர்சனம். இதை ஏற்றுக்கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். மற்றொரு எடுத்துக்காட்டு, எல்..டி விளக்கு. முந்தைய ஆட்சியின்போது இதன் விலை ரூ.300 முதல் ரூ.350-ஆக இருந்தது. இப்போது அது நடுத்தர பிரிவு குடும்பத்திற்கு சுமார் ரூ.50 விலையில் கிடைக்கிறது. உஜாலா திட்டம் தொடங்கப்பட்டப் பின்னர், சுமார் 28 கோடி எல்..டி விளக்குகள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்களின் பணம் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக சேமிக்கப்பட்டுள்ளது.

     மின்சாரக் கட்டணச் செலவைக் குறைத்து, பணத்தைச் சேமிக்கும் நடவடிக்கைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கருதத் தேவையில்லை. இந்த சேமிப்பு ஒரு தொடர்ச்சியான நடைமுறை. தற்போது இது நிரந்தரமாகி உள்ளது.

சகோதர, சகோதரிகளே, இத்தகைய செயல்களைச் செய்வதிலிருந்து முந்தைய அரசுகளை யாரவது தடுத்தார்களா என, எனக்கு தெரியவில்லை. இருப்பினும், நாட்டின் நலனுக்காகவும் நடைமுறைகளில் நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்தவும் இத்தகைய முடிவுகளை எடுப்பதிலிருந்து யாரும் எங்களை தடுக்க முடியாது என்று எனக்கு தெரியும்.

     இந்த நாட்டில் மந்திரக்கோல் மூலம் உடனடியாக மாற்றத்தை கொண்டுவர முடியாது என்று சிலர் கருதுகின்றனர். அவர்கள் அவநம்பிக்கையும், விரக்தியும் கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுகிறார்கள். இத்தகைய அணுகுமுறை நாம் புதிதாகவும், புதுமையாகவும் எதையும் செய்வதைத் தடுத்து விடும்.

     இந்த அணுகுமுறை நாம் முடிவுகள் எடுப்பதைத் தடுக்கக் கூடியதாகும். எனவே இந்த அரசின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. உதாரணமாக வேம்பு கலக்கும் யூரியா பற்றி பார்ப்போம். முந்தைய ஆட்சியின்போது, வெறும் 35 சதவீத யூரியாவை மட்டுமே வேம்பு கலந்த, யூரியாவாக மாற்றும் அணுகுமுறை இருந்தது.  வெறும் 35 சதவீத யூரியாவில் வேம்பு கலப்பதால், எந்தப் பயனும் இல்லை என்பது, அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. யூரியாவின் மாற்றுப் பயன்பாட்டை நாம் தடுக்க வேண்டுமானால், தொழிற்சாலைகளுக்கு அது மடைமாற்றப்படுவதை தடுக்க நாம் விரும்பினால், 100 சதவீத யூரியாவில் வேம்பு கலக்கப்பட வேண்டும். ஆனால் யூரியாவில் 100 சதவீத வேம்பு கலக்கும் இந்த முடிவு முன்பு எடுக்கப்படவில்லை.

சகோதர, சகோதரிகளே, இந்த முடிவின் மூலம், யூரியா வேறு வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தியதுடன், அதன் திறனையும் அதிகப்படுத்தி உள்ளது. தற்போது விவசாயிகள், தங்களது நிலப்பரப்புக்கு குறைந்த அளவு யூரியா பயன்படுத்தினாலே போதும். அத்துடன் நின்றுவிடாமல், குறைந்த அளவு யூரியாவைப் பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தியும் காணமுடிகிறது.

     அதுபோல, எந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும், தனது உற்பத்திப் பொருளை, விற்பனை செய்யும் வகையில், நாட்டில் டிஜிட்டல் தளம் போன்ற ஒன்றை நாம் உருவாக்கி உள்ளோம். இது, நாட்டின் மிகப்பெரிய நடைமுறை மாற்றத்தை, கொண்டுவரப் போகிறது. -நாம் என்னும் மின்னணு தேசிய விவசாயச் சந்தை, என்னும் இந்த தளத்தின் மூலம், 450க்கும் மேற்பட்ட சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையை, இந்தத் தளத்தின் வாயிலாக பெறுவதற்கு வழி ஏற்படும்.

     அண்மையில், நாட்டில் விவசாயப் பொருள் விநியோகம் மற்றும் இருப்பு வைப்பதற்காக கிஸான் சம்பாத திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதுஅழுகும் விவசாயப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலைப் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அழுகிப் போவதைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ் அரசு உணவுப் பதப்படுத்துதல் துறையை வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயியின் விளைநிலம் ஒரு தொழிற்சாலையைப் போல செயல்படமுடியும்

     விவசாயப் பொருட்கள் பதப்படுத்தும் துறைக்கு முழுமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், நவீன தொழில்நுட்பத்துடன் உணவுப்பதப்படுத்தும் உணவுப்பூங்காக்களை உருவாக்குவதற்கும், அரசு ரூ.6,000 கோடிக்கும் மேல் செலவழிக்கவுள்ளது.

சகோதர, சகோதரிகளே, இயற்கை விவசாயமும், அதன் மூலம் உற்பத்திச் செய்யப்படும் பொருட்களின் தேவையும் தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சிக்கிம் மாநிலத்தைத் தொடர்ந்து, இதர பல்வேறு மாநிலங்களும், 100 சதவீத இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள தகுதி வாய்ந்தவையாக உள்ளன. குறிப்பாக, நமது இமயமலை மாநிலங்களில் இதனை ஊக்குவிக்க முடியும். இந்த நோக்கத்துக்காக, 10,000 தொகுப்புகளை உருவாக்கி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை அரசு வகுத்து வருகிறது

     அண்மையில், மிக முக்கியமான முடிவு ஒன்றை நாங்கள் எடுத்தோம். சகோதர, சகோதரிகளே, அண்மைக்காலம் வரை உள்ளுர் சட்டத்தின்படி மூங்கில் ஒரு மரமாக கருதப்பட்டது. இதன் காரணமாக, மூங்கிலை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் இருந்து வந்தது. தற்போது மரங்கள் பட்டியலில் இருந்து அரசு மூங்கிலை நீக்கி விட்டது.

இது, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு பலனை அளிக்கும். குறிப்பாக, மூங்கில் வீட்டு உபயோகப் பொருட்களையும், கைவினைப் பொருட்களையும் செய்வதில் ஈடுபட்டுள்ள, வடகிழக்கு மாநிலங்களின் விவசாயிகளுக்கு பெருமளவு இது உதவும். முந்தைய அரசு, நிறைவேற்றிய ஒரு சட்டத்தில் மூங்கில் மரமாக கருதப்படமாட்டாது என்று இருப்பதை அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள்.

இந்தக் குழப்பம், 10 – 12 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, நாட்டின் தேவையை உணர்ந்து எங்கள் அரசின் முடிவுகள் முழுமையான அணுகுமுறையுடன் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற முடிவுகள் இதற்கு முன்பு எடுக்கப்படவில்லை. அதனால்தான் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் முன்பு கவலை அடைந்திருந்தனர். நாட்டை பீடித்திருந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். மேலும் புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.

சகோதர, சகோதரிகளே, நாட்டில் முன்பிருந்த நிர்வாக நடைமுறை ஊழலை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்திருந்தது. கருப்புப் பணம் நாட்டின் ஒவ்வொரு பெரிய துறையையும் கட்டுப்படுத்தி வந்தது. 2014-ஆம் ஆண்டு இந்த முறையை மாற்றுவதற்காக 125 கோடி இந்தியர்கள் வாக்களித்தனர். நாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய விஷயங்களுக்கு நிரந்தர தீர்வு காணுவதற்காக அவர்கள் வாக்களித்தனர். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக, அவர்கள் தங்கள் வாக்கைச் செலுத்தினர்.

     பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் அணுகுமுறையில் ஒருவகையான மாற்றம் கொண்டுவரப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து முதன்முறையாக, கருப்புப் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வந்த ஊழல்வாதிகள் அஞ்சத் தொடங்கினர். எங்கே நாம் கைது செய்யப்படுவோமோ என அவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். முன்பு இணைப் பொருளாதார அடிப்படையில் இருந்து வந்த கருப்புப் பணம், பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து, இயல்பான பொருளாதாரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

     வங்கிகளுக்கு வந்து சேர்ந்த இந்தப் பணத்துடன் அதற்கான ஆதாரங்களும்கொண்டுவரப்பட்டதுதான் இதில் முக்கியமான விஷயமாகும். பெறப்பட்ட தகவல்கள், பொக்கிஷத்திற்கு சமமானவையாகும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, நமது நாட்டில் 400 – 500 நிறுவனங்கள் ஒரே முகவரியில், ஒரே நிறுவனமாக இயங்கி வந்ததும், அவற்றுக்கு 2,000 வங்கிக் கணக்குகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆச்சரியமான முரண்பாடு இல்லையா? ஒரு பக்கம் ஏழை மக்கள் வங்கி கணக்கு திறக்க முடியாமல், பிரச்சினையைச் சந்தித்து வந்தனர். மறுபுறம், நிறுவனங்கள் சுலபமாக ஆயிரம் கணக்குகளைத் திறக்க முடிந்திருக்கிறது.

     இந்த வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் எதுவாக இருந்தாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை சுமார் 2.25 லட்சம் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தொடர்பான பொறுப்பை, அதன் இயக்குநர்களுக்கு நாங்கள் நிர்ணயித்தோம். இதனால் அவர்கள் வேறு எந்த நிறுவனத்திலும் இயக்குநர்களாக முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.

நண்பர்களே, இந்த நடவடிக்கை நம் நாட்டின் ஆரோக்கியமான, வெளிப்படையான, தொழில் நிறுவன, கலாச்சாரத்தை வலுப்படுத்த உதவும். நாட்டின் பொருளாதாரத்தைத் தூய்மைப்படுத்த, ஜி.எஸ்.டி. முறை அமலாக்கமும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நடைமுறை, பலவீனமானதாக இருந்தது. வர்த்தகம் புரிவதில் கடின நிலை நிலவியது. இப்போது அவற்றை புறந்தள்ளி நாடு முன்னேறி செல்கிறது.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம், நாட்டில் வெளிப்படையான புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. இந்த நேர்மையான நடைமுறையில் வணிகர்கள் மேலும், மேலும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். நண்பர்களே, மற்றொரு மாற்ற முடியாத நடவடிக்கை ஆதார் எண் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உரிய உரிமைகளை அவர்களுக்கு அளிப்பதை உறுதி செய்ய அரசு விரும்பியது. அதற்கு ஆதார் ஒரு வலுவான சாதனமாக இருக்கிறது.

மானிய விலை ரேஷன் பொருட்கள் விநியோகம், உதவித் தொகைகள், மருத்துவச் செலவு, ஓய்வூதியம், அரசிடமிருந்து கிடைக்கும் மானியம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் ஆதார் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர்  செல்பேசி, ஜன்தன் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது நடக்கவே இயலாத காரியம் என்று கூறப்பட்ட விஷயம் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் ஆதாரின் உதவியுடன் லட்சோப லட்சம் போலி பெயர்கள் நடைமுறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போது, பினாமி சொத்துக்கு எதிராக இது ஆற்றல் மிக்க ஆயுதமாக மாற உள்ளது.

சகோதர, சகோதரிகளே, இந்த அரசு பழைய பொது கொள்முதல் முறையை முற்றிலுமாக மாற்றி உள்ளது. அரசு மின்னணு சந்தை மூலம் புதிய முறையை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

இந்த முறையின் மூலமாக தற்போது அரசு ஒப்பந்த புள்ளிகளையும், பொது கொள்முதலையும் வழங்கி வருகிறது. இந்த சந்தை மூலமாக, குடிசைத் தொழில் அதிபர்கள், சிறிய கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், வீட்டிலிருந்தபடியே பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியும்.

சகோதர, சகோதரிகளே, நடைமுறை பலவீனத்தால், கருப்புப் பணம் உருவாவதற்கான வாய்ப்புள்ள நடைமுறையை முற்றிலுமாக  நீக்கப்படவுள்ளது. இந்த இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம்.

நாட்டில் வாங்குவதும், விற்பதும், பெருமளவிலான பரிவர்த்தனைகள் தொழில்நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் முறைக்கு மாறும் போது ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் கணிசமான அளவில் கட்டுப்படுத்தப்படும். இதற்கான அரசியல் விலையை நான் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் அதற்கு தயாராகவே இருக்கிறேன்.

நண்பர்களே, திட்டங்களின் செயல் வேகம் அதிகரித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். அரசின்  ஏராளமான திட்டங்கள் விரைவாக நடப்பதற்கு காரணங்கள் இருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த அதே கருவிகள், அதே ஆதார வளங்கள் ஆனால், பணிமுறை வேகபட்டுள்ளது. அதிகார வர்க்கத்தில் புதிய பணிக்கலாச்சாரத்தை அரசு உருவாக்கியதால் இது சாத்தியமானது. அதிகார வர்க்கத்திற்கு கூடுதல் பொறுப்பை இது அளித்துள்ளது.

  • தற்போது நாள் ஒன்றுக்கு 22 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. முந்தைய அரசில் இது நாள் ஒன்றுக்கு 11 கிலோ மீட்டராக இருந்தது.
  • முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டு காலத்தில் 80,000 கிலோ மீட்டர் ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டன. எமது அரசில் கடந்த மூன்றாண்டுகளில் 1,20,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன
  • முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டு காலத்தில் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தற்போதைய அரசின் மூன்றாண்டுகளில் 2,100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக இது உள்ளது.
  • முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டு காலத்தில் 2,500 கிலோ மீட்டர் தூர ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டது. தற்போதைய அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் 4,300 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது.
  • முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டு காலத்தில் மூலதனச் செலவு சுமார் 1.49 லட்சம் கோடியாக இருந்தது. தற்போதைய அரசின் மூன்றாண்டு காலத்தில் சுமார் 2.64 லட்சம் கோடி மூலதனச் செலவு செய்யப்பட்டுள்ளது.
  • முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 12,000 மெகாவாட்  அளவிற்கு புதிதாக புதுப்பிக்கவல்ல மின்சக்தித் திறன் சேர்க்கப்பட்டது. தற்போதைய அரசின் மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 22,000 மொகா வாட் புதிய புதுப்பிக்கவல்ல மின்சக்தித் திறன் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
  • கப்பல் தொழில்துறையை  நாம் ஒப்பிட்டு பார்த்தால், முந்தைய ஆட்சிக்காலத்தில் இதன் வளர்ச்சி எதிர்மறையாக இருந்த நிலையில், தற்போதைய அரசின் மூன்றாண்டுகளில் கப்பல் தொழில்துறை வளர்ச்சி 11 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.

நண்பர்களே, கீழ்நிலையில் உள்ள குறைகளை நாம் சரி செய்யாமல் போனால் இத்தகைய வளர்ச்சி வேகத்தை எட்டுவது சாத்தியமாகுமா?

இந்த முடிவுகளை அரசால் எடுக்க முடியுமா? முடியாது. மிகப்பெரிய நீடித்து நிற்கும் மாற்றங்களைக் கொண்டு வருவது எளிதானது அல்ல. அதற்கு ஒட்டுமொத்த அமைப்பையும் சரி செய்வது தேவையாகிறது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்ததால் மட்டுமே வர்த்தகம் செய்வதில் எளிதான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 142-ஆவது இடத்தில் இருந்து 100-ஆவது இடத்திற்கு நம் நாடு சென்றுள்ளது.

சகோதர, சகோதரிகளே, 2014-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, எங்களிடம் எவ்வாறு அது ஒப்படைக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பொருளாதாரம் மற்றும் நிர்வாக நிலை, நிதி நிலை, வங்கி நடைமுறை என எல்லாமும் மோசமான நிலையில் இருந்தன. இது பற்றி நீங்கள் எழுதுவதற்கு ஒரு சில வார்த்தைகள் தேவைப்பட்டன. பிறகு இது பற்றி கொள்கை, முடக்குவாதம்என்று தலையங்கம் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.

நமது நாடு வலுவற்ற ஐந்து நாடுகளில் ஒன்றாக எண்ணப்பட்டதை நீங்கள் கற்பனைச் செய்து பாருங்கள். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தன. ஆனால், வலுவற்ற இந்த ஐந்து நாடுகள் மூழ்குவது மட்டுமின்றி, மேலும் கூடுதல் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விடும் என்று கருதினர்.

உலக அளவில் இந்தியா இன்று எங்கே உள்ளது. அதன் நிலை என்ன, உங்களுக்கு இதுபற்றி மிக நன்றாகவே தெரியும். சிறிய நாடாக இருந்தாலும், பெரிய நாடாக இருந்தாலும், உலகில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுடன், தோளோடு தோள் சேர்ந்து நடக்கவே விரும்புகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது எந்தச் சூழ்நிலையிலும் நாம் நிற்கப்போவதில்லை, தொடர்ந்து நாம் முன்னேறி வருகிறோம்.

நண்பர்களே, தன்னம்பிக்கையோடு ஒரு நாடு எழுந்து நிற்குமானால், மாற்றக்கூடியது அல்லது மாற்ற முடியாதது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தன்னம்பிக்கையோடு ஒரு நாடு முன்னேறி செல்லும்போது, தன்னம்பிக்கையோடு அது முடிவுகளை மேற்கொள்கிறது. இதனால் கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது இப்போது சாத்தியமாகிறது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்வில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது ஒட்டுமொத்த உலகின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பிரதிபலிப்பாகும். சகோதர, சகோதரிகளே, .நா. சபையில் யோகா ஒருமனதாக அங்கீகாரம் பெற்றிருப்பது இந்தியாவின் அசைக்க முடியாத எழுச்சியைப் பிரதிபலிப்பதாகும்.

இந்தியாவின் முன் முயற்சியோடு சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதும் அதன் அசைக்க முடியாத எழுச்சியைப் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே, எமது அரசு அரசியல் செயல் திறத்தை மனிதாபிமானத்தோடும், மனித உணர்வுகளோடும் இணைத்துள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நிவாரணம் வழங்குவதிலும், மீட்புப்பணியிலும் முதல் நாடாக இருந்தது இந்தியாவாகும். இலங்கையில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவர்களுக்கு உதவி செய்ய முதலாவதாக சென்றடைந்தது  இந்திய கடற்படையாகும். மாலத்தீவுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்தியா பல கப்பல்களில் தண்ணீரை அனுப்பி வைத்தது. ஏமனில் நெருக்கடி ஏற்பட்டபோது 4,000-த்திற்கும் அதிகமான அந்நாட்டு குடிமக்களை இந்தியா பாதுகாத்தது மட்டுமின்றி, 48 இதர நாடுகளின் 2,000 மக்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டு வந்தது. இந்தியாவின் வளர்ந்து வளரும் செல்வாக்கின் விளைவு இதுவாகும். வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் இன்று அவருக்கு முன்னால் நிற்பவர்களிடம் உறுதியோடும், பெருமிதத்தோடும், பேச முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த முறை கேமரூன் அரசு’, ‘இந்த முறை டிரம்ப் அரசு’, என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுவது அங்குள்ள இந்திய வம்சாவழியினரின் பலத்துக்கான அங்கீகாரமாகும். சகோதர, சகோதரிகளே, ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு சமூகமும், தனிநபர் ஒவ்வொருவரும் தங்களின் சக்தியை உணர்ந்து மாற்றங்களைக் கொண்டு வர தொடங்கினால், புதிய இந்தியா என்ற கனவு நனவாகும். இன்று நாட்டின் முன்னுள்ள தேவைகளையும், சவால்களையும் மனதில் கொண்டு, நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள உறுதியேற்பது காலத்தின் தேவையாகும்.

நமது நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திரத் தினத்தை கொண்டாடும் 2022-க்குள் இந்த உறுதிமொழிகளை நாம் நிறைவேற்ற வேண்டும். உங்களைப் போன்றோருக்கு நான் அறிவுரை கூற இயலாது. இருப்பினும் நமது அன்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் கூறியதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் கூறினார் :

நமது நாட்டின் ஊடகங்கள் ஏன் இவ்வளவு எதிர்மறையாக இருக்கின்றன? நமது சொந்தத் திறமைகள், சாதனைகள் பற்றி கூறுவதற்கு சங்கடப்படும் நிலை ஏன் இருக்கிறது? வெற்றிகள் குறித்த வியத்தகு கதைகள் ஏராளமாக உள்ள மகத்தான நாடாக நமது நாடு உள்ளபோதும் அவற்றை நாம் அங்கீகரிக்க மறுப்பது ஏன்? ஏன் இப்படி?”

இதனைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் கூறியிருந்தார். அறிவு ஜீவிகளான நீங்கள் இது பொருத்தமானது என்று எண்ணினால் இது பற்றி உங்களின் செய்தி அறைகளுக்குள்ளும், அறிவார்ந்த குழுக்களோடும் விவாதியுங்கள்உங்களைப் போன்றவர்கள் கொண்டுவரும் மாற்றங்கள் மாற்ற முடியாதவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த மேடையிலிருந்து ஒட்டுமொத்த ஊடக தொழில்துறைக்கும் நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், உங்களுக்கு நீங்களே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல், மற்றவர்களையும் அதற்கு ஆட்படுத்துங்கள். தூய்மை இந்தியா திட்டத்தை உங்களுடையதாகக் கருதி, அதனை இயக்கமாக மாற்றியதில் உங்களின் ஊக்கமிக்கப் பங்கினைப் போல் உறுதியேற்பதன் மூலம் வெற்றிகளை நனவாக்கும் பயணத்திற்கு தயவு செய்து முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வார்த்தைகளுடன் எனது உரையை நான் நிறைவு செய்கிறேன். இந்த நிகழ்வுக்காக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்திற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

ஜெய்ஹிந்த்.
 

*******



(Release ID: 1538175) Visitor Counter : 378


Read this release in: English