பிரதமர் அலுவலகம்
அம்பேத்கர் பிறந்த நாளில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் பகுதியில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர்
प्रविष्टि तिथि:
14 APR 2018 3:39PM by PIB Chennai
அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதன் அடையாளமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூரில் உள்ள ஜங்லா மேம்பாட்டு முனையத்தில் இந்த மையம் தொடங்கிவைக்கப்பட்டது.
ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அங்கிருந்த பிரதமர், ஏராளமான மக்களுடன் கலந்துரையாடினார். மேம்பாட்டு முனையத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத் தொடக்கவிழாவில், அங்கீகரிக்கப்பட்ட சமூகச் சுகாதாரப் பணியாளர்களுடன் (ASHA workers) பிரதமர் கலந்துரையாடினார். பின்னர், மாதிரி அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்ட பிரதமர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்துத் திட்டத்தின் பயனாளிகளான குழந்தைகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து ஹாத் பசார் சுகாதார மையத்தைப் பார்வையிட்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி, சுகாதாரப் பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஜங்லா பகுதியில் வங்கிக் கிளையை அவர் தொடங்கிவைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ், கடன் வழங்குவதற்கான அனுமதிக் கடிதங்களை வழங்கினார். மேலும் அவர், கிராமப்புற வெளிப்பணி ஒப்படைப்பு (BPO) அலுவலகஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு பிரதமர் வருகைதந்தார். பழங்குடியினசமூகத்தினரை மேம்படுத்தும் நோக்கிலான வேன் தன் திட்டத்தை (Van Dhan Yojana) அவர் தொடங்கிவைத்தார். குறைந்தபட்ச ஆதாரவிலை மூலம், வனப்பகுதியில் உற்பத்தியாகும் சிறு பொருட்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் வனப்பகுதியில் உற்பத்தியாகும் சிறு பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றுக்கான வழிமுறையை இது உருவாக்குகிறது.
காணொளிக் காட்சி மூலம், பானுபிரதாப்பூர்-குடும் ரயில்வே பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தல்லி ரஜாரா மற்றும் பானுபிரதாப்பூர் இடையேச் செல்லும் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மேலும், பீஜப்பூர் மருத்துவமனையில் டயாலிஸிஸ் மையத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
இடதுசாரிப் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் 1,988 கி.மீட்டர் தொலைவுக்கான பிரதம மந்திரியின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள்; இடதுசாரிப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மற்ற சாலை இணைப்புத் திட்டங்கள்; பீஜப்பூர் பகுதியில் நீர் விநியோகத் திட்டம்; மற்றும் இரண்டு பாலங்கள் கட்டுதல் ஆகியவற்றுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிவைத்தார்.
பேரார்வம் மிகுந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்த, இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்தப் பிராந்தியத்தில் நக்சலைட்டுகள்-மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்புப் படையினருக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார்.
சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து இரண்டு முக்கிய வளர்ச்சித் திட்டங்களான ஷியாம் பிரசாத் முகர்ஜி ருர்பன் இயக்கம், பிரதம மந்திரியின் கிராம வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கிவைத்ததைப் பிரதமர் குறிப்பிட்டார். இன்று ஆயுஷ்மான் பாரத் மற்றும் கிராம சுயாட்சி ஆகிய திட்டங்கள் இந்த மாநிலத்திலிருந்து தொடங்கிவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கிராமச் சுயாட்சி திட்டத்தின்மூலம், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு தொடங்கிய அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் பலனும், சமூகத்தில் ஏழைகள் மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மக்களுக்குச் சென்றுசேர்வது உறுதிசெய்யப்படும் என்று அவர் கூறினார். கிராமச் சுயாட்சி திட்டம், இன்று முதல் மே 5-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
கோடிக்கணக்கான மக்களின் மனங்களிலும் மற்றும் இதயங்களிலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில், பாபாசாகேப் அம்பேத்கர் முக்கியப் பங்கு வகித்ததைப் பிரதமர் குறிப்பிட்டார்.
பீஜப்பூர் பகுதியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் முக்கியத்துவத்தை விவரித்த பிரதமர், நாட்டில் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றமிகு மாவட்டங்களில் ஒன்றாக இந்த மாவட்டம் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதுவரை பின்தங்கிய மாவட்டங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்த மாவட்டங்களை மாற்றத்தை விரும்பும் மற்றும் இலக்குகளைக் கொண்ட மாவட்டங்களாக மாற்ற விரும்புவதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த மாவட்டங்கள் நீண்டகாலத்துக்கு சார்ந்திருக்கக் கூடிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்களாக இருக்காது என்று அவர் கூறினார். மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் மக்கள் இயக்கமாக ஒன்றாக இணையும்போது, எதிர்பாராத பலன்களைப் பெற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த 115 மாவட்டங்கள் மீதும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் அரசு பணியாற்றிவருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு மாவட்டமும், தங்களுக்கு என்று தனித்தனிச் சவால்களை எதிர்கொண்டுவருவதால், ஒவ்வொரு விவகாரத்திலும் மாறுபட்ட உத்திகள் தேவை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டில் சமூக நிலைத்தன்மையின்மையை முடிவுக்குக் கொண்டுவரவும், சமூக நீதியை உறுதிப்படுத்தவும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், தொடக்க நிலைச் சுகாதார வசதிகளில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் 1.5 லட்சம் இடங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் துணைமையங்கள், தற்போது சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக தரம் உயர்த்தப்படும். இந்தப் பணியை 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதே நோக்கம் என்று அவர் கூறினார். இந்தச் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், ஏழைமக்களுக்கு ஒரு குடும்ப மருத்துவர் போலச் செயல்படும் என்றும் பிரதமர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அடுத்த இலக்கு, ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குவதே என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டுவருவதற்காக சத்தீஷ்கர் முதலமைச்சர் டாக்டர் ராமன் சிங்கைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார். குறிப்பாக, மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களான சுக்மா, தாண்டேவாடா, பீஜப்பூர் ஆகியவற்றில் மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் வரவேற்றார். பாஸ்டர் பகுதி விரைவில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார மையமாக மாறும் என்று அவர் தெரிவித்தார். பிராந்தியச் சமநிலையற்ற தன்மையைப் போக்க இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். இந்தச் சூழலில், தொடங்கிவைத்த இணைப்புத்திட்டங்களை அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் உள்ள ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை மத்தியஅரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் வெளிப்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், பழங்குடியினச் சமூகத்தினரின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட வான் தன் திட்டம் மற்றும் மற்ற முடிவுகளைப் பிரதமர் குறிப்பிட்டார். பெண்களுக்குப் பலனளிக்கும் வகையிலான, ‘தூய்மை இந்தியா இயக்கம்’, ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்’, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’, ‘இலவச எரிவாயு இணைப்புத் திட்டம்’ போன்றவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களின் பங்களிப்பே அரசின் பலம் என்று பிரதமர் தெரிவித்தார். இது, புதிய இந்தியாவை 2022-ம் ஆண்டில் உருவாக்க உதவும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
(रिलीज़ आईडी: 1529177)
आगंतुक पटल : 287