கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

தூத்துக்குடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரக்குவாகன நிறுத்து முனையம் மற்றும் தகவல் மையத்தை திரு.நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்.

Posted On: 26 FEB 2018 6:26PM by PIB Chennai

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன நிறுத்தும் முனையத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி 2018, பிப்ரவரி 26 அன்று தொடங்கி வைத்தார். இருபத்து மூன்று கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தில் இருநூறு வாகனங்களை நிறுத்த முடியும். மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள துறைமுகத் தகவல் மையத்தையும் அமைச்சர் தொடங்கிவைத்தார். ஒரு கோடியே எண்பத்தொன்பது லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த்த் தகவல் மையத்தில் துறைமுகத்தின் பரிணாமம் மற்றும் வளர்ச்சியைச் சித்திரிக்கும் அறுபது எல்இடி விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடுதிரை வசதிகளுடன் கூடிய இந்தப் பலகைகளில் கடல் துறைமுகங்கள் தொடர்பான கப்பல், இந்திய துறைமுகங்கள், ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம், புகைப்பட மற்றும் வீடியோ தொகுப்புகளும் விரிவான முறையில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது, கூடுதல் சரக்குப் பெட்டக இறங்குதளம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்த இறங்குதளம், ஆண்டுக்கு 7.2 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றதாகும். இத் திட்டம் 312 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் தற்போதுள்ள பதினைந்து இறங்குதளங்கள் வாயிலாக 65.9 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இத் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி துறைமுகத்தின் அமைவிட முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், மின்உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், துறைமுகத்தை ஆழப்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் கடற்கரைத் தொழில் நகரமான தூத்துக்குடியிலிருந்து ஏற்றுமதிப் பெட்டகங்களை எடுத்துச்செல்லும் கப்பல்கள் வந்துசெல்ல வழிவகை ஏற்படும் என்றார். இதன் மூலம் சரக்குப் பெட்டகங்களை வெளிநாட்டுத் துறைமுகங்களில் இறக்கி மாற்றி அனுப்புவது தவிர்க்கப்படுவதுடன் நிலக்கரி இறக்குமதிக்கான செலவும், மின் உற்பத்திக்கான ஒட்டு மொத்தச் செலவினமும் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தப் பணிகளுக்காக மூவாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அது ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும் என்றும் திரு.நிதின் கட்கரி அறிவித்தார். தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன நிறுத்துமிடத்தில், வாகன ஓட்டுநர்களுக்கான ஓய்வறை வசதிகள் செய்யப்படுவதால், விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தூத்துக்குடி வட்டாரத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலும் இதே போன்ற வறட்சி நிலவுவதைச் சுட்டிக் காட்டினார். இதனைப் போக்க,  கோதாவரி ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும். மூவாயிரம் டிஎம்சி தண்ணீரை, காவிரி வழியாகத் தமிழகத்திற்குத் திருப்பி விட தாம் முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  


(Release ID: 1521866)
Read this release in: English