நீர்வளத் துறை அமைச்சகம்
அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் நீர் வளங்களுக்கான தென் மாநிலங்களின் மண்டல மாநாடு
Posted On:
19 FEB 2018 5:15PM by PIB Chennai
மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகம் நீர் வளங்களுக்கான தென் மாநிலங்களின் மண்டல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு நாளை ஐதராபாத்தில் நடைபெறும். மத்திய நீர்வளம், நதிமேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களின் அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள், நீர்வளங்களின் தலைமைப் பொறியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பர்.
நீர் வளங்கள் குறித்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் மாநிலங்கள் இடையேயான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். காவேரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியார் அணை ஆகியவை குறித்த உச்சநீதி மன்றத்தின் சமீபத்திய ஆணைகளைச் செயல்படுத்துதல், கோதாவரி-காவேரி போன்ற நதிகளை இணைத்தல், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மேலாண்மை வாரியங்களின் அதிகார வரம்பு அறிவிப்பு, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டங்கள், பொள்ளாவரம் திட்டம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
******
(Release ID: 1521015)
Visitor Counter : 105