குடியரசுத் தலைவர் செயலகம்
விசாகப்பட்டினத்தில் கடற்படை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
08 DEC 2017 4:05PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் நீர்முழ்கிக் கப்பலுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு-
- இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக விசாகப்பட்டினத்துக்கு நான் வருகிறேன். முப்படைகளின் தளபதி என்ற முறையில் இந்தியக் கடற்படையின் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல் முறையாகும். கடற்படை தின விழா (டிசம்பர் 4) கொண்டாப்படும் இந்த வாரத்தில் நான் இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
- இந்தியா, பல ஆயிரம் ஆண்டுகளாக கடல்வழிப் பாதை கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. ஹராப்பா நாகரிகப் பண்பாட்டுக்குப் பின் துறைமுக நகரமான லோத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பழங்கலாத்திலேயே கடல் வழி வர்த்தகம் நடைபெற்றதை நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இதன் பின் சோழ சாம்ராஜ்யத்தின் காலத்திலும் அதைத் தொடர்ந்து சிவாஜி தலைமையிலான மராட்டியப் பேரரசு காலத்திலும் கடல் வழி வர்த்தகத்தோடு கடற் படையின் ஆதிக்கமும் நிலவி வந்ததுள்ளது. இந்திய நாட்டின் கடல்வழி வளர்ச்சிக்கான இரண்டு உதாரணங்கள் மட்டுமே இவை ஆகும்.
- இன்றைய நிலையில் நமது கடல்வழி ஆர்வங்கள் எல்லாம் இந்திய நாட்டின் பொருளாதரம், பாதுகாப்பு மற்றும் நமது மக்களின் நலன் சார்ந்தவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் 90 சதவிகித வர்த்தகம் கடல்வழியைச் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. இதனால் தேசத்தைப் பாதுகாப்பதில் கடற்படையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்பதோடு மட்டும் அன்றி தேசத்தை கட்டமைப்பதிலும் கடற்படையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. கடல் ஆதிக்கத்தின் முதன்மைக் கருவியாக கடற்படை விளங்குகிறது. அத்தோ\டு மட்டும் அல்ல கடல் வழிப் பாதையின் போது, சாதாரண மக்களின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது கடற்படை.
- 2017-ம் ஆண்டு இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் பொன் விழா ஆண்டாகும். 1967-ம் ஆண்டு இந்தியக் கடற்படையின் முதல் நீர் முழ்கிக் கப்பலான கல்வாரியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போதே அது இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலின் ஆதிக்கம் பிரகாசமாக இருக்கும் என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
- கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் 25 நீர் மூழ்கிக் கப்பல்கள் செலுத்தப்பட்டன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களும் அதன் பணியாளர்களும் இந்தியக் கடற்படையின் இயக்கத்துக்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல்கள் பல பாகங்களைக் கொண்டதோடு உயர்ந்த தொழில் நுட்பத்தையும் கொண்டவையாகும். நம்முடைய நீர் மூழ்கிக் கப்பல்கள் 1971-ம் ஆண்டு யுத்தம், 1999-ம் ஆண்டின் ஆப்பரேஷன் விஜய், 2002-ல் ஆப்பரேஷன் பரக்ராம் ஆகியவற்றின் போது மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளது. இன்றைய தேதியில் 17 நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அதன் அளப்பறிய சாதனைகளுக்காக கடற்படையின் விருது வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் இது இந்தியாவின் செயல் வல்லமையை வலுப்படுத்தும்.
சீமாட்டிகளே கனவான்களே
- கடலை மதிக்கத் தெரியாதவர்களுக்கு அது ஒரு மன்னிப்பு அளிக்காத சக்தி. இந்தியக் கடற்படையின் வலிமையான நீர்மூழ்கிக் கப்பலைவிட பொங்கி வரும் கடல் அலைகளின் நடுவே தங்களது பணியை ஆற்றும் விதமாக படகை செலுத்தும் படகோட்டிகளின் ஆற்றல் என்பது மிகப் பெரியது. கடுமையான ஆபத்துகளிடையே சீரிய திறமையுடன் அவர்கள் தங்களது தொழில் ரீதியான பொறுப்புகளைச் செய்கின்றனர். தேசிய பாதுகாப்புக்காக நீங்கள் ஆற்றும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு உங்கள் சாதனைகளுக்காக இந்த தேசம் பெருமை கொள்கிறது.
- நீர்மூழ்கிக் கப்பல் குழு உறுப்பினர்கள் விளையாட்டு மற்றும் மலையேற்றத்திலும் சாதனை படைத்துள்ளனர். 2002-ம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியக் கடற்படையினர் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர். அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் நீர் மூழ்கிக் கப்பல் குழுவைச் சேர்ந்தவர் என்பதோடு மட்டும் அன்றி அந்த மலையேற்றத்தில் இடம் பெற்றவர்கள் பெரும்பலோர் நீர் மூழ்கிக் கப்பல் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அப்போது இயற்றப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல் பாடலை இயற்றியவர் நீர் மூழ்கிக் கப்பல் குழு அதிகாரியாவர். உண்மையைச் சொல்லப்போனால் நமது நீர்மூழ்கிக் கப்பல் குழு உறுப்பினர்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்கள் ஆவர்.
- கடந்த 50 ஆண்டுகளில் அமைதிகாப்பு மற்றும் யுத்தத்தின் போது நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆற்றிய அசாதாரண சேவைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்படுகிறது. இந்த சாதனைகளுக்காக நீர் மூழ்கிக் கப்பல் குழு உறுப்பினர்களை நான் பாராட்டுகிறேன். முந்தைய மற்றும் தற்போதைய நீர் மூழ்கிக் கப்பல் படை உறுப்பினர்கள் அனைவருமே ஒரு சிறப்பான சமுதாயத்தினர். இந்திய நீர்மூழ்கிக் கப்பல் படையின் 90-க்கும் மேற்பட்ட வயதை உடைய முதல் கேப்டன் கமோடர் கே.எஸ். சுப்பிரமணியன் அமெரிக்காவில் இருந்து இங்கு வந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன் அவருடன் பணியாற்றிய ஏராளமானோர் இன்று நம்மோடு உள்ளனர். முன்னோடிகளான அவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்.
- நாட்டுக்காக சேவை செய்த காலத்தில் உயிர் நீத்த நீர் மூழ்கி கப்பல் ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன். கடந்த, நடப்பு நீர் மூழ்கிக் கப்பல் ஊழியர்களின் குடும்பத்தினரின் தியாகத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டைக் கட்டமைப்பதில் அவர்களும் பங்காற்றியுள்ளனர்.
- முடிவாக எதிர்காலத்தில் இந்திய நீர் மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் மேலும் சிறப்பான கடமையாற்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நீர் மூழ்கி கப்பல்கள் என்றென்றும் கடலில் ஆதிக்கம் செலுத்த சமுத்திரக் கடவுள் வருணனின் அனுகூலம் கிட்டுவதாக அமையட்டும்
நன்றி
ஜெய்ஹிந்த்
(வெளியீட்டு அடையாள எண்: 1512285)
வருகையாளர் எண்ணிக்கை : 465