குடியரசுத் தலைவர் செயலகம்
ஜார்கண்டில் இந்தியக் குடியரசுத்தலைவர் ; ஜார்கண்ட் மாநிலத்தின் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2017 5:44PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், ராஞ்சியில் நடைபெற்ற ஜார்கண்ட் மாநில நிறுவன நாள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இன்று ( நவம்பர் 15, 2017 ) பங்கேற்றுச் சிறப்பித்து, உரையாற்றினார். இந்த நிகழ்வின்போது, குடியரசுத்தலைவர் பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் துவக்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் செய்தார்.
திரளாகக் கூடியிருந்த மக்களிடையே குடியரசுத்தலைவர் உரையாற்றுகையில், ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளின் 17 – வது ஆண்டுவிழாவுக்காக ஜார்கண்ட் மாநில மக்களுக்குத் தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் உற்சாகத்தைக் கண்டு உணர்ந்தவராய்க் குடியரசுத்தலைவர், ஜார்கண்ட் மாநிலத்தை நிறுவ முடிவு செய்த முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் தொலைநோக்கு உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுடன் இணந்து இன்று பிறந்தநாள் ஆண்டுவிழா காணும் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டா மற்றும் சிடோ – கானு, சந்த் – பைரவ், தில்கா மஞ்சி, நிலாம்பர் – பீதாம்பர், 1928 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் ஹாக்கி கேப்டனும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜெயபால் சிங் முண்டா உள்ளிட்ட ஜார்கண்டின் ஒப்பற்ற வரலாற்று நாயகர்களுக்குக் குடியரசுத்தலைவர் அஞ்சலி செலுத்தினார். சமத்துவத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக, அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர் என்று குடியரசுத்தலைவர் புகழாரம் சூட்டினார். பிர்ஸா முண்டாவின் கனவுக்கிணங்க ஒவ்வொருவரும் சமத்துவத்தையும் செல்வச் செழுமையையும் துய்த்துவாழும் ஜார்கண்ட் மாநிலத்தையும் இந்திய தேசத்தையும் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் கேட்டுக் கொண்டார்.
குடியரசுத்தலைவர் மேலும் பேசுகையில், இயற்கையின் அருளால் நமது தேசத்தின் கனிமவளங்களில் ஜார்கண்ட் 40 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறது என்றும் இது தொழில்வளர்ச்சிக்கான மகத்தான வாய்ப்பை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். ஜார்கண்ட் மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், நமது நாட்டின் மாநிலங்களுக்கிடையே ஜார்கண்ட் இரண்டாவது உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். தொழிலாளர்நலச் சீர்திருத்தத்தைப் பொறுத்தமட்டில், இம்மாநிலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. 2014 இல் ‘ வியாபாரத்தை எளிய முறையில் செய்வது ‘ என்று சாதாரண நிலையில் செயல்பட்ட ஜார்கண்ட், தற்போது சிறந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
முன்னதாக, ராஞ்சியில் ‘ மண்ணின் தந்தை ‘ பிர்ஸா முண்டா சிலைக்கு மரியாதை செலுத்திக் குடியரசுத்தலைவர் தமது நிகழ்ச்சிகளைத் துவக்கினார்.
மாலையில், ராஞ்சியில் ‘ இறைவன் அர்ஜுனனுக்கு அருளியது – பகவத் கீதை ‘ என்னும் பரமஹம்ஸ யோகானந்தரின் இந்தி மொழிபெயர்ப்பு நூலின் முதற்படியைக் குடியரசுத்தலைவர் பெற்றுக்கொண்டார். ஜார்கண்ட் மாநில ஆளுநர் திருமதி திரவுபதி முர்மு அந்நூலை வெளியிட, அவரிடமிருந்து குடியரசுத்தலைவர் பெற்றுக் கொண்டார்.
இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்றுப் பேசுகையில், உலகெங்கும் ‘யோகா’வின் நற்செய்தியைப் பரப்பிவரும் பாராட்டத்தக்கப் பங்களிப்புக்காக ’யொகோடா’ சத்சங்க சொசைட்டியையும் அதனுடன் இணைந்துசெயல்படுபவர்களையும் பாராட்டினார். சமூகநலச் செயல்பாடுகளில் இந்தச் சங்கத்தின் ஆஸ்ரமங்களும் தியான மையங்களும் ஆற்றிவரும் சேவையையும் குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1510810)
வருகையாளர் எண்ணிக்கை : 187