தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இதழியலில் சிறந்து விளங்குவோருக்கு தேசிய விருதுகளைக் குடியரசுத் துணைத்தலைவர் வழங்கினார்.

பிரஸ் கவுன்சில், தேசியப் பத்திரிகை தினத்தைக் கொண்டாடியது.

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2017 6:51PM by PIB Chennai

தேசியப் பத்திரிகை தினத்திற்கு இந்தியப் பத்திரிகை கவன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாங்களின் நிறைவைக் குறிப்பதாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தது.

     இந்த நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் கடந்த பல ஆண்டுகளில் இதழியலில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும், பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதிலும் அரசின் முடிவு எடுக்கப்படுதல் முறையிலும் அது மாபெரும் செல்வாக்கு செலுத்துவது இன்னமும் தொடர்கிறது என்றார்.

     அச்சு மற்றும் மின்னணு ஊடகச் செய்தி அறைகளுக்குள் சில ஆபத்தான போக்குகள் பரவியிருப்பது குறித்து மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் கவலையை வெளிப்படுத்தினார். ஏற்கனவே பத்திரிகைத் துறையாற்றிய சிறந்த பங்களிப்பை உறுதி செய்து இந்தப் போக்குகளைத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்றார்.

     முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி, ஊடகங்களின் குரல்கள் நசுக்கப்படக் கூடாது என்றும் ஊடகம் சுதந்திரமாகப் பேசுவதை உறுதி செய்வது அரசமைப்புச் சட்டப்படி நமது பொறுப்பாகும் என்றும் கூறினார். இக்காலத்தில் சமூக ஊடகங்கள் மூலம் செய்தியாளர்களாகும் குடிமக்களை நாம் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தின் பொறுப்பை நினைவுப்படுத்தும் முக்கியமான பங்களிப்பை அவர்கள் செய்துவருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

     இதழியலுக்கு மிகச் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக பிரபல பத்திரிகையாளர்கள் திரு சாம் ராஜப்பாவும் திரு. சரத் மிஸ்ராவும் கூட்டாக ’ராஜாராம் மோகன்ராய் விருதினை’ப் பெற்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ்ன், திருமதி ஷாலினி நாயர், ”கிராமப்புற இதழியல் மற்றும் வளர்ச்சிக்கான செய்தி சேகரிப்பு“ விருதினைப் பெற்றார். மங்களம் டெய்லி பத்திரிகையின் திரு கே. சுகித்தும், ஒடிசாவைச் சேர்ந்த சுயேச்சை பத்திரிகையாளர் திருமதி சித்ரங்கடா சௌத்ரியும் ”புலனாய்வு இதழியலுக்கான” விருதுகளைப் பெற்றனர். சந்திரிகா டெய்லியைச் சேர்ந்த திரு. சி. கே. தன்சீருக்கும் பிரஸ்ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (செய்தி நிறுவனத்தின்) திரு. விஜய் வர்மாவுக்கும் மலையாள மனோரமா வின் திரு. ஜே. சுரேஷுக்கும் புகைப்பட இதழியலுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் திரு. கிரீஷ்குமார் சிறந்த செய்தித்தாள்கள் கலைக்கான விருதினைப் பெற்றார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1510411) வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க: English