தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரைத்துறை கலைஞர்களை இந்தியாவிற்கு வரவேற்பதே இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) பெரும்முயற்சியாகும்: ஸ்மிருதி ஜுபின் இரானி
கோவாவில் 48 –வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
ஐ.எஃப்.எஃப்.ஐ – 2017 –ன் சிறப்பம்சமாக கலாச்சார நிகழ்வு அமையும்
திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், துடிப்பான இளைஞர்களை கொண்ட நாடு, 1600க்கும் மேல் பேச்சு வழக்கு மொழிகளில் கதைகள் சொல்லப்படும் நாடு இந்தியாவாகும் என்றார் மத்திய ஜவுளி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ஜுபின் இரானி. கோவாவில் நடைபெற்று வரும் 48 –வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
உலகெங்கும் உள்ள திரைத்துறை கலைஞர்களை இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் கதைகள் பேசும் நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற கூறிய அவர், ஐ.எஃப்.எஃப்.ஐ, இந்திய திரைப்படத் துறையின் சிறந்த கலைஞர்களை திரைப்பட ரசிகர்கள் சந்திக்க வாய்ப்பளிக்கிறது என்றும் கூறினார்.

ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –க்கு அனைத்து பிரமுகர்களையும் வரவேற்ற கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், 2019 –ல் ஐ.எஃப்.எஃப்.ஐ –யின் 50 வது சர்வதேச திரைப்பட விழாவ பிரமாண்டமாக வழங்க தயாராக உள்ளது என்று கூறினார். கடந்த சில ஆண்டுகளில் கோவா சிறப்பான திரைப்பட கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. கோவாவில் திரைப்பட தொழிலை மேலும் வளர்க்க மாநில அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சிக்கும் என்று கூறினார்.
ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –க்கு அனைத்து திரைத்துறை கலைஞர்கள் மற்றும் பிரமுகர்களை வரவேற்ற இந்திய திரைப்பட நட்சத்திரமான திரு. ஷாருக் கான், ஒரு சிந்தனையை 100 –க்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து செயல்பட்டு நிஜமாக்குவதே திரைப்படமாகும் என்று கூறினார். கதை சொல்பவர்களும் கதை கேட்பவர்களும் ஒரே குடும்பத்தினர் ஆவார்கள். ஒவ்வொருவரையும் இணைக்கும் சக்தி கதைகளுக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ன் தொடக்க விழாவை ராஜ்குமார் ராவ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் தொகுத்து வழங்கினர். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் ஸ்ரீதேவி, நானா படேக்கர், ஷாகித் கபூர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். “டிரம்ஸ் ஆஃப் இந்தியா” என்ற நாடு முழுவதும் உள்ள டிரம்ஸ் இசைக் கருவியின் இசை நிகழ்ச்சியும் “உத்சவ்” என்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் நடைபெற்றது.

48 –வது ஐ.எஃப்.எஃப்.ஐ –ல் சிறந்த சர்வதேச திரைப்படங்கள், ரெட்ராஸ்பெக்டிவ், பிரிக்ஸ் –ல் விருது வென்ற திரைப்படங்கள், அஞ்சலிகள், கடந்த ஆண்டில் இந்திய திரைப்படத் துறையில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் ஆகியவை திரையிடப்படும். இளைய சிந்தனையாளர்கள் கலந்துரையாடவும் கற்றுக்கொள்ளவும் நல்ல களத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல் 82 நாடுகளிலிருந்து 195 திரைப்படங்கள் திரையிடப்படும். இதில் 10 உலக திரைப்படங்கள், 10 ஆசிய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், 64 –க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களும் அடங்கும். தங்க மயில் மற்றும் வெள்ளி மயில் விருதுகள் (Golden and Silver Peacock Awards) பிரிவில் 15 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. பிரபல திரைப்பட இயக்குநர் திரு. முசாஃபர் அலி தலைமையில் சர்வதேச போட்டிக்கான நடுவர்கள் குழுவில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்சின் வில்லியம்சன், இஸ்ரேலைச் சேர்ந்த நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் சாஹி கிராட், ரஷ்ய ஒளிப்பதிவாளர் விலாதிஸ்லவ் ஒப்பிலியன்ஸ், லண்டன் இயக்குநர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜர் கிறிஸ்டின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், தொடக்க மற்றும் நிறைவு திரைப்படங்கள் இந்தியாவை மையமாகக் வைத்து வலுவான சர்வதேச இணைப்புகளை கொண்ட திரைப்படங்கள் திரையிடப்படும். ஈரானின் சிறந்த திரைப்பட இயக்குநரான மஜித் மஜிதியின் முதல் திரைப்படமான (இந்தியாவில் உருவாக்கப்பட்ட) “பியான்ட் தி கிளவுட்ஸ்”, குருதேவ் ரவீந்தரநாத் தாகூரின் வாழ்க்கைத் தொகுப்பை மையமாக கொண்ட பேப்லோ சீசரின் இந்தியா அர்ஜுன்டைனா இணைந்து தயாரித்த “திங்கிங் ஆஃப் ஹிம்” என்ற திரைப்படங்கள் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் திரையிடப்படும்.
ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், முதல் முதலாக ஜேம்ஸ் பான்ட் திரைப்படங்களுக்கு சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1962 முதல் 2012 வரை வெளிவந்த ஜேம்ஸ் பான்ட் திரைப்படங்களில், ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிறந்த பல்வேறு நடிகர்களின் 9 முக்கியத் திரைப்படங்கள் திரையிடப்படும். இதை தவிர, ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனடா நாட்டின் படங்களும் திரையிடப்படும்.
48 –வது ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், மறைந்த நடிகர்கள் ஓம் பூரி, விநோத் கண்ணா, டாம் ஆல்டர், ரீமா லகு, ஜெயலலிதா மற்றும் இயக்குநர்கள் அப்துல் மஜித், குந்தன் ஷா, தசாரி நாரயண ராவ் மற்றும் ஒளிப்பதிவாளர் ராமநந்தா செங்குத்தா ஆகியோருக்கு மரியாதை அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி காட்சிகள் திரையிடப்படும்.
ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், பிரிக்ஸ் மண்டலத்தின் அங்கமான பிரிக்ஸ் திரைப்பட தொகுப்பில் விருது பெற்ற 7 திரைப்படங்களும் திரையிடப்படும். மத்திய அரசின் “ஆக்சசபிள் இந்தியா கம்பைன்” இயக்கத்திற்கு (இந்தியாவின் மாற்றுத்திறனாளிகளான விழிப்புணர்வு இயக்கம்) ஆதரவளிக்கும் வகையில் ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், பார்வையற்றோருக்காக தி ஆக்சசபிள் இந்தியா, ஆக்சசபிள் சினிமா என்ற பிரிவில் இரண்டு ஒலிச்சித்திரம் திரையிடப்படும்.
48 –வது ஐ.எஃப்.எஃப்.ஐ 2017 –ல், இந்திய பனோரமா 2017 பிரிவில் திரைப்படம் மற்றும் திரைப்படம் சாரா படங்கள் திரையிடப்படும். இந்திய பனோரமா திரைப்பட பிரிவில், விநோத் கேப்ரி இயக்கிய பிஹூ திரைப்படம் திரையிடப்படும். இந்திய பனோரமா திரைப்படம் சாரா பிரிவில், கமல் ஸ்வருப் இயக்கிய புஷ்கர் புரான் என்ற திரைப்படம் சாரா படம் திரையிடப்படும். நாடு முழுவதும் உள்ள புத்தாக்க இந்திய சினிமாவை இந்த பிரிவு பிரதிபலிக்கும்.
******
(Release ID: 1510327)
Visitor Counter : 323