மத்திய அமைச்சரவை

நீர்வளங்கள் தொடர்பாக இந்தியாவும் மொராக்கோ நாடும் ஒத்துழைப்பதற்கு வகை செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2017 8:13PM by PIB Chennai

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நீர் வளங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

இரு நாடுகளும் தங்களது நிபுணத்துவம், தங்களது சட்டங்கள் ஆகிய வரையறைக்கு உட்பட்டு, நீர் வளங்களை மேம்படுத்துவது, கையாள்வது தொடர்பான துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதற்கும் வழியமைக்கும். இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான களங்கள் வருமாறு:

  1. நீர் இயக்கக் கட்டுமானத்தை, குறிப்பாக பெரிய அணைக்கட்டுகள், நீர் மாற்றுத் திட்டங்கள் ஆகியவை தொடர்பான கருத்தாக்கம், அதைச் செயலாக்குவது, அதைப் பராமரித்தல் ஆகியவை
  2. ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை, அதாவது, ஆற்றுநீர், ஊற்றுநீர் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவது, நீர்ப் பயன்பாட்டு முறையை மேலும் அதிகரிப்பது, பருவ மாற்றங்களுக்கு ஏற்ப விரி திறனோடு, சாதகமாகவும் செயல்படுவது,  நீர் நிலைகளில் செயற்கையான நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தவது ஆகியவற்றுடன் நிறுவனங்கள், அமைப்புகள், அவை தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள்.
  3. வெள்ளம், வறட்சி ஆகியவற்றைச் சமாளித்தல்.
  4. நிலத்தடி நீர் வளம் குறையாமல் இருக்க, நீடித்த வளர்ச்சி காணுதல் மற்றும் அதைக்  கையாளுதல்.
  5. நிலத்தடி நீர் வளத்தைப்  பயன்படுத்துவது, அதற்கு முக்கியத்துவம்அளிப்பது மற்றும் பருவ மாற்றத்துக்கு ஏற்ப செயல்படுவதும், விரிவான திறனோடு செயல்படுவதும்

இந்த ஒத்துழைப்பில் இடம்பெறும் சில அம்சங்கள்:

  1. இரு தரப்பு நாடுகளின் வல்லுநர்களையும் திட்ட இயக்கங்களையும் பரிமாறிக் கொள்ளுதல்.
  2. நீர் வளங்கள் தொடர்பான தகவல்கள், திட்டங்களைப் பரிமாறிக் கொள்ளுதல், வெளியீடுகள், நிபுணத்துவம், ஆய்வு முடிவுகளைப் பரிமாறிக் கொள்ளுதல்
  3. இந்தியாவிலும் மொராக்கோவிலும் மேற்குறிப்பிடப்படப்பட்ட துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குதல், இரு நாடுகளிலும் சமூக-பொருளாதாரப்பணிகளில் ஈடுபடுவோருக்கு இடையில் பரஸ்பரம் கூட்டாண்மை மேற்கொள்வதற்ான நடைமுறை.
  4. தண்ணீர் தொடர்பான நிகழ்வுகள், திட்டங்கள் குறித்த தகவல்களை வல்லுநர்களிடையில் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதை உறுதி செய்தல்.
  5. இரு நாடுகளிலும் உள்ள வடிநிலப் பகுதிகளை நிர்வகிக்கும் துறைகள் அப்பகுதிகளில் ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை குறித்த கொள்கைகளைச் செயல்படுத்துவது தொடர்பான நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்.

 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு கூட்டுச் செயல்பாட்டுக் குழுவை (Joint Working Group - JWG) அமைப்பதற்கு வகை செய்கிறது. அதில் இரு நாடுகளிலிருந்தும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இடம்பெறுவர். இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செயல்படுவதை இவர்கள் கண்காணிப்பர். இதற்கான பணிக்குழு ஆண்டுதோறும் இந்தியாவிலும் மொராக்கோவிலும் கூட்டங்களை மாறி மாறி நடத்தும். இப்பணிக்குழு இவை தவிர, எப்போது வேண்டுமானாலும் பரஸ்பரம் காணொலி மூலமாகவோ தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொள்ளும்.

அறிவியல், தொழில்நுட்ப, தொழில்நுணுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்த ஒத்துழைப்பு அமையும். இரு நாடுகளிலும் நீர் வளம் தொடர்பாக இயங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் இரு தரப்பு உறவுகளை ஏற்படுத்தி, மேம்படுத்த இந்த ஒத்துழைப்பு ஊக்குவிக்கும். இரு நாடுகளும் புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், தொழில்நுணுக்கங்கள் தொடர்பான தங்களது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும்போது இரு நாடுகளும் புதிய விஷயங்களை அறிந்து கொள்வதுடன், தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும்.

 பின்னணி:

நீர் வளங்களின் மேம்பாடு, நீர் வளங்களைக் கையாளுதல் தொடர்பாக இதர நாடுகளுடன் இரு தரப்பு பரிமாற்றங்களுக்கு மத்திய நீர் வள, நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை நதி மேம்பாட்டு அமைச்சகம் வழியமைத்து வருகிறது. நீர் வளம் குறித்த கொள்கை, தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளுதல், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள்,  அறிவியல் -  தொழில்நுட்பக் கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துதல், வல்லுநர்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் ஆய்வு சுற்றுலாக்களை நடத்துதல்  ஆகியவை இந்த இரு தரப்பு பரிமாற்றத்தில் இடம்பெறுகின்றன.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அமைந்து வரும் இச்சூழ்நிலையில், நீர் வளங்கள் தொடர்பான அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், மொராக்கோ நாட்டுடன் உடன்பாடு கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

 

 ****


(வெளியீட்டு அடையாள எண்: 1505866) வருகையாளர் எண்ணிக்கை : 396
இந்த வெளியீட்டை படிக்க: English