திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-பெலாரஸ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 11 OCT 2017 8:34PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – பெலாரஸ் இடையே தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெலாரஸ் அதிபர் மேதகு அலெக்சாண்டர் லுகாசென்கோ, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, செப்டம்பர் 12, 2017-ல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொழிற்கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக, ஐரோப்பிய மற்றும் ஆசிய மண்டலத்தில் உள்ள ஒரு நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

பெலாரஸில் மிகப்பெரும் அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இவை குறிப்பாக, உற்பத்தி மற்றும் கனரக தொழில் துறையில் இடம்பெற்றுள்ளன. திறன்பெற்ற மனிதவளம் மற்றும் உயர்ந்த அளவில் உருவாக்கப்பட்டுள்ள திறன் பயிற்சி அமைப்பு மூலம், இந்த நிறுவனங்களுக்கு பணியாளர்கள் கிடைக்கின்றனர். அவர்களது திறன் செயல் முறையியல் (skilling methodology) புலமையை பகிர்ந்துகொள்வதன் மூலம், “இந்தியாவில் தயாரிப்போம்”, “திறன் இந்தியா” போன்ற நமது முயற்சிகளுக்கு மிகப்பெரும் அளவில் பயனளிக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அவர்களது நிபுணத்துவம் மற்றும் மனிதசக்தியின் திறனை எவ்வாறு வளர்ப்பது, குறிப்பாக, உற்பத்தித் துறையில் திறனை எவ்வாறு வளர்ப்பது என்பது ஆகியவற்றை அமைப்புரீதியாக பரிமாறிக் கொள்ள வழியை ஏற்படுத்துகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே அடையாளம் காணப்பட்ட பிரிவுகளில் ஒத்துழைப்பானது, மேம்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியிலான ஒத்துழைப்பு மூலம் செயல்படுத்தப்படும். அதாவது, பெலாரஸின் தொழில் கல்வி முறை வளர்ச்சிக்கான உயர் அமைப்பான தொழில் கல்விக்கான குடியரசு அமைப்புக்கும் (RIPO), தொழில்கல்வி மற்றும் பயிற்சியில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அதன் நீடித்த தன்மைக்கான பயிற்சி இயக்குநரகத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படுகிறது. திறன்வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஆய்வுக்காக பெலாரஸில் உள்ள உயர்திறன் மையங்கள்/தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சிக்கான பிரிவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்:

1. வளரும் தொழில்நுட்பங்கள், பயிற்சி மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகள், வழக்கமான/தொலைதூரக் கல்வி/ மின்னணு கற்றல்/ தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளித்தல், போட்டி நிறைந்த பகுதிகளில் மதிப்பீட்டாளர்களின் போட்டித்திறனை வளர்ப்பது மற்றும் இணைய கட்டமைப்பு மற்றும் தொழில் துறை இணைப்பு ஆகியவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது குறித்த தகவல்களை பெலாரஸ் அரசு விரிவாக பகிர்ந்துகொள்ளும்.

2. கட்டுமானம், மின்சாரத் திறன் உற்பத்தி மற்றும் பகிர்வு, உற்பத்தித் தொழில் துறை, வர்த்தகம், ஆட்டோ சேவைகள் மற்றும் வீட்டுஉபயோகப் பொருட்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றுடன் இந்தியாவில் அதிக அளவில் தேவை உள்ள துறைகளில் இந்திய குடிமக்களுக்கு திறன் வளர்ப்புக்கான தொழில் கல்வி சேவைகள் வழங்கப்படும்.

3. இந்தியாவில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் மேலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி அளிப்பவர்களுக்கு மறு பயிற்சி, திறனை மேலும் வளர்த்தல், உள்ளகப் பயிற்சி அளித்தல் (internship) ஆகிய பணிகளை பெலாரஸ் அரசு மேற்கொள்ளும்;

4. தொழில்கல்வி மற்றும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான திட்டமிடலை வலுப்படுத்துதல், மேலாண்மை மற்றும் விநியோகிப்பதற்காக ஆலோசனை சேவைகளை வழங்குதல்.

ஏற்படும் மிகப்பெரும் மாற்றங்கள்:

• நாட்டில் திறனுக்கான சுற்றுச்சூழல் அமைப்பில் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக பெலாரஸின் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுவரும்.

• இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம், ஏற்கனவே உள்ள தொழில்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புத்தாக்கம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிமுறைக்குள், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஏற்படுத்த, ஒவ்வொரு நேரத்திலும், இருக்கும் நிதியின் அடிப்படையில் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்டும்.
 

***



(Release ID: 1505844) Visitor Counter : 123


Read this release in: English