எரிசக்தி அமைச்சகம்

பிரதம மந்திரியின் “வீட்டுக்கு வீடு எளிதாக மின்சாரம் திட்டம்” – “சவுபாக்யா” பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Posted On: 27 SEP 2017 11:27AM by PIB Chennai

பிரதம மந்திரியின் வீட்டுக்கு வீடு எளிதாக மின்சாரம் திட்டம் – “சவுபாக்யா”, என்ற புதிய திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2017 செப்டம்பர் 27 அன்று தொடக்கி வைத்தார். நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப் புற பகுதி வீடுகளில் விரும்புவோர் அனைவருக்கும் மின்சார வசதியை இத்திட்டம் உறுதி செய்கிறது.

     இந்தத் திட்டத்தின் நோக்கம், முக்கிய அம்சங்கள், எதிர்ப்பார்க்கப்படும் விளைவுகள், அமலாக்க அணுகுமுறை ஆகியன தொடர்பாக கீழ்கண்ட வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

கே.எண். 1. இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

பதில்: நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி வழங்குவதை உறுதி செய்வதற்காக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மின்சார வசதி இல்லாமல் விடுபட்டு இருக்கும் வீடுகளுக்கு மின்சார இணைப்பையும் கடைசிப் பகுதி தொடர்பையும் வழங்குவது சவுபாக்யா திட்டத்தின் நோக்கமாகும்.

கே. எண். 2. வீடுகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் கடைசி பகுதி தொடர்பு ஏற்படுத்துவதில் எவையெல்லாம் அடங்கும்?

பதில்: வீடுகளுக்கு மின்சார இணைப்பு என்பதில் வீட்டுக்கு அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து இணைப்புக்கான மின் கம்பிகளை ஏற்படுத்துதல், மின்சார மீட்டர் பொருத்துதல், எல்இடி பல்புடன் கூடிய ஒரு விளக்குக்கு ஒயர் இணைப்பு வழங்குதல், கைபேசி மின்னேற்றும் பிளக் பாயின்ட்டுக்கு ஒயர் இணைப்பு வழங்குதல் ஆகியன அடங்கும். வீடுகளுக்கு அருகே மின் கம்பம் இல்லாத நிலையில் தேவையான கூடுதல் மின் கம்பங்களையும் அவற்றிற்கான மின் கம்பிகள், இதர கருவிகள் வழங்குவதும் இத்திட்டத்தில் அடங்கும்.

கே. எண். 3. மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படும் போது அது இலவசமானதாக இருக்குமா?

பதில்: ஆம். ஏழை மக்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு இலவசமாக வழங்கப்படும். இதர வீடுகளுக்கு இத்திட்டத்தின்படி ரூ.500 செலுத்தி மின் இணைப்புப் பெறலாம். இந்தத் தொகையை மின் விநியோக நிறுவனங்கள் / மின்சாரத் துறை, மின்சாரக் கட்டணத்துடன் 10 தவணைகளில் பிடித்தம் செய்யும்.

கே. எண். 4. இலவச மின்சார இணைப்பு என்பது பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணமும் இலவசம் எனப் பொருள்படுமா? பதில்: இந்தத் திட்டத்தின் எவ்வகையான நுகர்வோருக்கும் இலவச மின்சராம் வழங்கும் எண்ணம் ஏதும் இல்லை. பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை மின் பகிர்வு நிறுவனம் / மின்சாரத் துறை கட்டண வீதங்களில் நுகர்வோர் செலுத்த வேண்டும்.

கே. எண். 5. மத்திய அரசின் முந்தய “24 மணி நேரமும் அனைவருக்கும் மின்சாரம்திட்டமும் இதே போன்ற நோக்கத்தை கொண்டிருக்கவில்லையா? இத்திட்டம் புதிய திட்டத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பதில்: “24 மணி நேரமும் அனைவருக்கும் மின்சாரம்திட்டம் மாநில அரசுகளுடன் சேர்ந்து செயல்பட்டக் கூட்டு மின்திட்ட முயற்சியாகும். அதாவது மின்சார உற்பத்தி, அதனைக் கொண்டு சென்று விநியோகித்தல், மின்சார சிக்கனம், மின் விநியோக நிறுவனங்களின் ஆரோக்கியம் முதலியவை சார்ந்த மாநில / யூனியன் பிரதேச செயல் திட்டத்தை இறுதி செய்து அவற்றின் ஆலோசனைகளின்படி “24 மணி நேரமும் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதற்கான திட்டமாகும். இந்தத் திட்டத்தின் ஆவணங்களில் மின்சாரத் துறையில் தேவைப்படும் கூட்டு நடவடிக்கை சார்ந்த பல்வேறு இதரத் திட்டங்களின் விவரங்களும் அடங்கியிருக்கும்.  

அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்குவது “24 மணி நேரமும் அனைவருக்கும் மின்சாரம்என்ற திட்டத்திற்கு முன் நிபந்தனையாக அமைந்துள்ளது. மின்சாரம் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்வதற்கு திட்டமிட்ட ஆதரவு வழங்குவது சவுபாக்யாவின் நோக்கம்.

கே. எண். 6. மின் விநியோகத் துறையில் இரண்டு பெரிய திட்டங்கள் (கிராமப் பகுதிகளுக்கான தீன்தயாள் உபாத்யாய கிராம விளக்குத் திட்டம், நகர்புற பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்டம்) ஏற்கனவே செயல்படுகின்றன. அப்படியிருக்கப் புதிய திட்டத்துக்கு என்ன அவசியம்

பதில்: தீன்தயாள் உபாத்யாய கிராம விளக்குத் திட்ட (DDUGJY) த்தின்படி கிராமங்களில் / குடியிருப்புகளில் அடிப்படை மின்சாரக் கட்டமைப்பு உருவாக்குதல், ஏற்கனவே உள்ள அடிப்படை வசதிகளை வலுப்படுத்தி விரிவாக்குதல், தற்போது உள்ள மின்வழங்கு அமைப்பு / விநியோக மின்மாற்றிகள் / நுகர்வோர் ஆகியோருக்கு மின்சாரம் மீட்டர்கள் பொருத்தி கிராமப் பகுதிகளில் மின்சார வினியோகத்தின் தரத்தையும் நம்பகத் தன்மையையும் மேம்படுத்துதல் ஆகியன மேற்கொள்ளப்படும். இவை தவிர, மாநில அரசுகள் பட்டியலின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பையும், கடைசிப் பகுதி தொடர்பையும் ஏற்படுத்துதல் இத்திட்டத்தில் அடங்கும். எனினும் நீண்ட காலத்துக்கு முன்னதாகவே மின்சார வசதி பெற்ற கிராமங்களில் பல வீடுகளில் பல காரணங்களுக்காக மின்சார இணைப்புகள் இல்லை. உண்மையிலேயே ஏழ்மையில் உள்ள ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் என்ற அட்டை பெறாத குடும்பத்தினர் மின்சார இணைப்புக்கான தொடக்கக் கட்டணங்களை செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். மேலும் எவ்வாறு மின் இணைப்பு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. எழுத்தறிவு இல்லாத மக்கள் மின்சார இணைப்பை பெறுவது எளிதான பணி அல்ல. வீடுகளுக்கு அருகே மின்சாரக் கம்பம் இல்லாமல் இருக்கலாம். அப்போது கூடுதலாக மின்சாரக் கம்பங்கள் அமைப்பதற்கும் கம்பி இனைப்புக்கும், வீட்டு மின் இணைப்புக்கும் மின் இணைப்புக் கோருவோர் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதே போல நகர்புறப் பகுதிகளில் மின்சார வசதியை வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்குவது ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்ட(IPDS) த்தின் நோக்கமாகும். ஆனால், சில வீடுகள் அவற்றின் பொருளாதார நிலைமை காரணமாக மின்சார இணைப்பை இன்னும் பெறாமல் இருக்கக் கூடும். மின் இணைப்புக்கான தொடக்கநிலைக் கட்டணங்களை இத்தகைய வீடுகள் செலுத்த இயலாத நிலையில் உள்ளன.

எனவே சவுபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மின் இணைப்பு பெறுவதில் தடையாக உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து கடைசி நிலை தொடர்பினை ஏற்படுத்தி கிராமப்புற, நகர்புற பகுதிகளில் மின்சார வசதி இல்லா வீடுகளுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தித் தர செயல்படுத்தப்படுகிறது.

கே. எண். 7. DDUGJY திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட செலவீனத்துக்கும் கூடுதலாக சவுபாக்யாத் திட்டத்தில் செலவினம் ஒதுக்கப்படுகிறதா?

பதில்: ஆம். சவுபாக்யாத் திட்டத்தின் செலவினமான ரூ.16,320 கோடி DDUGJY திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட செலவினத்துக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கே. எண். 8. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நிபந்தனைகள் யாவை?

பதில்: மாநிலங்கள் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கைகள் அடிப்படையில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்படும். இத்திட்டத்தின்படி முன்பண நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை.

கே. எண். 9. நாடு முழுமைக்கும் இந்தத் திட்டம் எவ்வாறு அமல்படுத்தப் படும்?

பதில்: மாநில மின் விநியோக நிறுவனங்கள் / மின்சாரத் துறைகள் திட்டங்களை வரைந்து அனுப்பிவைக்கும். மத்திய அரசின் மின்சாரத் துறை செயலாளர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான கண்காணிப்புக் குழு அவற்றை பரிசீலித்து அனுமதி வழங்கும். பின்னர் திட்டப் பணிகளை சம்மந்தப்பட்ட மின் விநியோக நிறுவனங்கள் / மின்சாரத் துறைகள் ஒப்பந்தங்கள் மூலமாகவோ அல்லது துறைகள் மூலமாகவோ அல்லது இப்பணியைச் செய்வதற்கான தகுதியுள்ள முகமைகள் மூலமாகவோ அமல்படுத்தும்.

கே. எண். 10. இலக்கை உரியக் காலக் கெடுவில் அடைவதற்கான அணுகுமுறைகள் யாவை?

பதில்: கிராமங்களில் / கிராமத் தொகுதிகளில் திட்டத்தின் பயனாளிகளை நவீன கைபேசி செயலி / வலைதள மேடை போன்ற நவீனத் தொழில்நுட்ப மூலம் அடையாளம் கண்டு வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதை விரைவுபடுத்த முகாம்கள் நடத்தப்படும். மின்சார இணைப்புக்கான மனுக்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படும். தேவைப்படும் விண்ணப்பதாரர் புகைப்படம், அடையாள அட்டை நகல் மற்றும் / அல்லது அலைபேசி எண்ஆதார் எண் / வங்கி கணக்கு எண் போன்றவை முகாம்களிலேயே பூர்த்திச் செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்குவது விரைவு படுத்தப்படும்.

கிராமப் பஞ்சாயத்துகள் / கிராமப்பகுதி பொது நிறுவனங்கள் ஆகியனவும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெற அனுமதிக்கப்படும். திட்டம் செயல்படும் போது கட்டண பில்களை விநியோகித்தல், கட்டணங்களை வசூலித்தல் போன்ற இதர பணிகளுக்கும் அவை பயன்படுத்தப்படும்.

கே. எண். 11. மின்சாரக் கட்டமைப்பில் புதிதாக சுமார் 4 கோடி வீடுகள் இணையும் போது மின்சாரத் தேவையில் உயர்வு எவ்வளவு என மிதிப்பிடப்பட்டுள்ளதா?

பதில்: வீடொன்றுக்கு சராசரியாக 1 கிலோ வாட் மின்சக்தி சராசரியாக நாளொன்றுக்கு 8 மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் கூடுதலாக 28,000 மெகாவாட் மின்சாரமும் ஆண்டொன்றுக்கு கூடுதலாக 80,000 மில்லியன் யூனிட் மின்சாரமும் தேவைப்படும். இந்த அளவுகள் மாறி அமையக் கூடியவை. வருமானம் அதிகரிக்கும் போதும் மின்சாரம் பயன்பாடு பழக்கம் ஏற்படும் போதும், மின்சாரத் தேவை கட்டாயம் அதிகரிக்கும் மேலும் நாம் முதலில் எடுத்துக் கொண்ட அனுமானம் மாறினாலும் மின்சாரத் தேவை மாறுபடும்.

கே. எண். 12. மின் கட்டமைப்பு கம்பிகளை விரிவாக்க இயலாத சூழ்நிலையில் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவது எப்படி?

பதில்: தொலை தூர, எளிதில் அணுக முடியாத பகுதி வீடுகளைப் பொருத்தவரை 200 முதல் 300 வாட் வரையிலான திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி கட்டகங்கள் வழங்கப்படும். இவற்றில் பேட்டரிகள் அமைந்திருக்கும். மேலும் 5 எல்இடி பல்புகள், 1 டிசி மின் விசிறி, 1 டிசி பிளக் பாயின்ட் ஆகியவை வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு, பழுது பார்ப்பு வசதியும் வழங்கப்படும்.

கே. எண். 13. “சவுபாகயா திட்டத்தின் கீழ், மின்வசதிப் பெறாத எத்தனை வீடுகள் இந்த வசதியைப் பெறும்?

பதில்: நாட்டில் மின்வசதி பெறாத 4 கோடி வீடுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 1 கோடி வீடுகள் DDUGJY திட்டத்தின்படி மின் இணைப்பைப் பெற்றுள்ளன. இவை தவிர எஞ்சிய 3 கோடி வீடுகளில் கிராமப் பகுதியைச் சேர்ந்த இரண்டரை கோடி வீடுகளும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த அரைக் கோடி வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும்.

கே. எண். 14. இந்தத் திட்டத்தில், சட்ட விரோத மின் இணைப்பு மூலம் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மன்னிப்பு வழங்கி பதிவு செய்ய அனுமதிக்கபடுமா? இதுவும் இந்தத் திட்டத்தின் இலக்கா?

பதில்: மின் விநியோக நிறுவனங்கள் / மின்சாரத் துறைகள் தங்களது விதிமுறைகளின் படி சட்ட விரோத இணைப்புகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கும். எனினும் இந்தத் திட்டத்தில் உரிய கட்டணங்களைச் செலுத்தாத காரணத்தால் இணைப்புத் துண்டிப்புக்கு உட்படுத்தப்பட்டோருக்கு, இத்திட்டத்தின் பலன்கள் வழங்கப்படமாட்டாது.

கே. எண். 15. இந்தத் திட்டம் மக்களுக்கு தங்களது அன்றாட வாழ்வில், எவ்வாறு பயன்படும்?

பதில்: மின்சார வசதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டாயம் நல்ல வகையில் உயர்த்தும். வீட்டுவேலைகள், மனித ஆற்றல் மேம்பாடு, உள்ளிட்ட அம்சங்களிலும் முன்னேற்றம் இருக்கும் முதலாவதாக மின்சார வசதி இருந்தால் மண்ணெண்ணெய் விளக்குகள் தவிர்க்கப்பட்டு வீட்டிற்குள் காற்று மாசடைவது தவிர்க்கப்படும்; இதனால் மக்கள் ஆரோக்கியக் கேட்டிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மேலும், மின்சார வசதி கிடைப்பதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திறன்பட்ட, நவீன மருத்துவ சேவை வசதிகள் உருவாக்கப்படும். சூரியன் மறைந்தபின் மின்விளக்குகள் பயன்பாடு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். மேலும், சூரியன் மறைவுக்குப் பிந்தைய சமூக, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும். மின்சார வசதி அனைத்துப் பகுதிகளிலும் கல்விச் சேவையை மேம்படுத்தும். சூரியன் மறைவுக்குப் பின்னர் குழந்தைகள் அதிக நேரம் பாடம் படிக்க மின்சார விளக்குகள் வசதி செய்கின்றன. இதனால் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகளும் நன்கு படித்து சிறந்த எதிர்க்காலத்தை பெறுவார்கள். வீடுகளில் மின்சார வசதி இருப்பதால் பெண்கள் கல்வி வாய்ப்பும், அவர்கள் வருவாய் ஈட்டுவதும் அதிகரிக்கும்.

கே. எண். 16. இந்தத் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கும் எவ்வாறு உதவும்?

பதில்: மண்ணெண்ணெய் விளக்குகளுக்குப் பதிலாக மின்விளக்கு பயன்படுத்தப்படுவதால் மண்ணெண்ணெய்க்கான ஆண்டு மான்யம் குறையும் அதனையடுத்து பெட்ரோலியம் பொருட்கள் இறக்குமதியும் குறையும். வீடுகளில் மின்சார வசதி இருப்பதால் வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட், செல்பேசி ஆகியவற்றின் மூலம் தொலைத்தொடர்புகள் அதிகரிக்கும். இந்த ஊடகங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து முக்கிய தகவல்களையும் அனைவரும் பெறலாம். விவசாயிகளைப் பொறுத்தவரையில் புதிய மேம்பட்ட வேளாண் தொழில் நுட்பங்கள், வேளாண் எந்திரங்கள், தரமான விதைகள் போன்றவை குறித்த தகவல்கள் கிடைப்பதால் வேளாண் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருமானமும் பெருகும். விவசாயிகளும், இளைஞர்களும், வேளாண் அடிப்படையிலான சிறு தொழில்கள் தொடங்கும் சாத்தியக் கூறுகளை ஆராய இயலும்.

மின்சார வசதி கிடைப்பதால் தினமும் பயன்படும் பொருட்கள் கொண்ட புதிய கடைகள் உருவாக்கப்படும், வடிவமைப்புப் பணிமனைகள் ஏற்படும், மாவு மில்கள், குடிசைத் தொழில்கள் போன்றவையும் ஏற்படும். இதனை அடுத்து நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். திட்ட அமலாக்கத்திலும் வேலைவாய்ப்புகள் ஏற்படும். வீட்டு மின்சார வசதி செய்து தருவதில் திறன் மிகுந்த அல்லது ஓரளவு திறன் கொண்ட பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவார்கள். திட்ட அமலாக்கத்தில் சுமார் 1000 லட்சம் மனித-நாட்கள், அளவு வேலைவாய்ப்புகள் ஏற்படும்.

இந்த திட்டத்தின் ஒதுக்கீடான ரூ 16,000 கோடி செலவிடப்படும் போது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுப் பொருளாதாரம் மேம்படும்.

கே. எண். 17. அதிக அளவில் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

பதில்: மத்திய அரசு, திட்டம் குறித்து வானொலி, அச்சு ஊடகம், தொலைக்காட்சி, விளம்பரப் பலகைகள் ஆகியவற்றின் மூலம் விளம்பரம் படுத்த திட்டமிட்டுள்ளது. மின்சார இணைப்பு பெறும் நடைமுறைகளை அறியாதிருத்தல், அதற்கான செலவினம் பற்றி அறியாதிருத்தல், மின்சராப் பயன்கள், மண்ணெண்ணெய் பயன்பாட்டைவிட மின்சாரம் லாபகரம் ஆகியவற்றை அறியாதிருத்தல் போன்றவை, வீடுகளில் மின் இணைப்பு திட்டச் செயல்பாடுகள் மந்த நிலையில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் பயன்படுத்தப்படும் இயக்கம் விரிவாக மேற்கொள்ளப்படும். மின்சாரப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மின்விநியோக அமைப்புகளும் விழிப்புணர்வு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், கல்வி அறிவுப் பெற்ற உள்ளுர் இளைஞர்கள் ஆகியோரும் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

******


(Release ID: 1504357) Visitor Counter : 1605
Read this release in: English