மத்திய அமைச்சரவை
பிற நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகள்/சர்வதேச முகமைகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
30 AUG 2017 3:03PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் ஒத்துழைப்புக்காக பிற நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகள்/சர்வதேச முகமைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, கீழ்க்காணும் அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்:
1. ஈக்வடார் தேசிய தேர்தல் கவுன்சில்
2. அல்பேனியா மத்திய தேர்தல் ஆணையம்
3. பூடான் தேர்தல் ஆணையம்
4. ஆப்கானிஸ்தானின் சுதந்திரமான தேர்தல் ஆணையம்
5. கினியாவின் தேசிய சுதந்திரமான தேர்தல் ஆணையம்
6. மியான்மர் மத்திய தேர்தல் ஆணையம்
7. ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச கல்வி நிறுவனம் (IIIDEM), ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச கல்வி நிறுவனம் (International IDEA).
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நிலையான கூறுகள்/வகைகள் இடம்பெற்றிருக்கும். இவை, தேர்தல் நடவடிக்கைகளில் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறைகளில் அனுபவங்கள் மற்றும் அறிவை பகிர்ந்துகொள்வதில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல்; தகவல் பரிமாற்றம், நிறுவன அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் திறனை வளர்ப்பது, பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றுக்கு வழிவகை செய்யும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேற்குறிப்பிட்ட தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தொழில்நுட்ப உதவி/திறன் ஆதரவை நோக்கமாகக் கொண்டு, இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
பின்னணி:
உலகம் முழுவதும் தேர்தல் விவகாரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் பங்கேற்றுள்ளது. இதற்காக சில வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுடன் அந்தந்த நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற வழிமுறையை பின்பற்றி வருகிறது. அரசியல்சாசன அமைப்பான தேர்தல் ஆணையம், உலகின் மிகப்பெரும் தேர்தலை நடத்தி வருகிறது. பல்வேறுபட்ட சமூக-அரசியல் மற்றும் பொருளாதார பின்னணியுடன் 85 கோடி வாக்காளர்களைக் கொண்ட நாட்டில், நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. அண்மை ஆண்டுகளாக, தேர்தல் ஆணையத்தின் பணிகள் மூலம், அரசியல் விவகாரங்களில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக, இந்தியா இன்று கருதப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தின் வெற்றி, உலகம் முழுவதையும் சேர்ந்த பெரும்பான்மையான ஒவ்வொரு அரசியல் அமைப்பையும் கவர்ந்து இழுத்துள்ளது.
(Release ID: 1501199)