பிரதமர் அலுவலகம்

கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்களுடன் பிரதமரின் மூன்றாவது கலந்துரையாடல்

Posted On: 27 AUG 2017 3:47PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மத்திய அரசின் 80 கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இத்தகைய ஐந்து கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடல் மூன்றாவதாகும்.

இந்த கலந்துரையாடல்களின் போது பிரதமருடன் கூடுதல் செயலாளர்கள் வேளாண்மை, குடிநீர், குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுமை, புத்தாக்கம், ஆளுமையில் கூட்டு பணி, திட்ட அமலாக்கம், கல்வி, உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சூரிய சக்தி போன்றவற்றில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

திட்டப்பணிகளை கண்காணிக்க தான் மேற்கொண்டுள்ள பிரகதி முன்முயற்சி குறித்து பிரதமர் குறிப்பிட்டார். உற்பத்தித் துறையில் பிரதமர் மின்னணு உற்பத்தியில் மருத்துவ கருவிகளை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரசாங்கத்தில் நேர்மறையான பணிச்சூழலை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் குறிப்பிட்டார். அப்போது தான் அரசு உயிருள்ள அமைப்பாக இருக்கும் என்றார். புதிய சட்டங்கள் இயற்றப்படும் போது பழைய சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை நீக்கப்பட வேண்டும் என்றார்.

தற்போது இந்தியாவில் நேர்மறையான உலகளாவிய சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட பிரதமர், 2022ஆம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்க தெளிவான இலக்குடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நாடெங்கும் 100 பின்தங்கிய மாவட்டங்கள் மீது அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் பல்வேறு வளர்ச்சி அளவுகோலில் இந்த மாவட்டங்களை தேசிய சராசரிக்கு உயர்த்த முடியும் என்றார்.
 

 

******



(Release ID: 1501064) Visitor Counter : 72


Read this release in: English