விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளுக்கு வசதிகள்

Posted On: 01 AUG 2017 5:21PM by PIB Chennai

வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை விவசாய விரிவாக்கம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மக்களிடையே ஆத்மா திட்டம் என்று பெயர் பெற்றுள்ள விரிவாக்க சீர்திருத்தங்களுக்கான மாநில விரிவாக்க திட்டங்களுக்கு உதவி, வேளாண் விரிவாக்கத்துக்கு தகவல் தொடர்பு சாதன உதவி, விவசாயி அழைப்பு மையங்கள் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.  விவசாயிகளுடன் விரிவாக்கப் பணியாளர்கள் நேரடி தொடர்பு கொள்வதை அதிகரிப்பதற்காக நிபுணர்கள் மற்றும் சிறப்பு பணியாளர்களுக்கு ஒன்றிய நிலை வரை இத்திட்டப்படி நிதியுதவி வழங்கப்படுகிறது. மாநில / மாவட்ட / ஒன்றிய நிலைகளில் தன்னாட்சி நிறுவனங்களை அமைத்தல், பல சேவை முகமைகளை ஊக்குவித்தல், விரிவாக்கத்துக்கு குழு அணுகுமுறையை கடைபிடிப்பதற்கான விரிவான விரிவாக்க திட்டங்கள், திட்டமிடல், செயல்பாடு, அமலாக்கம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பு வசதி ஆகியன ஆத்மா திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.  பொதுமக்கள் தகவல் ஊடக திட்டத்தின் கீழ், அரசு விவசாயிகளுக்கு கண்காட்சிகள் மூலம் கல்வியளிக்கிறது. இந்த கண்காட்சிகளில் புதிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், விவசாயிகளுக்கு நலன் பயக்கும் திட்டச் செயல்பாடு அமலாக்கம் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது.

விவசாயிகள் கல்வி விழிப்புணர்வு, வேளாண் சந்தைகள், கண்காட்சிகள், அச்சுஊடகம், வானொலி போன்ற மின்னணு ஊடகங்கள், சமூக ஊடக மேடைகள் ஆகியவற்றின் மூலம் ஏற்படுத்தப்படுகின்றன. விவசாயி அழைப்பு மையங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களது ஐயப்பாடுகளை தொலைபேசி வழியாக தங்களது சொந்த மொழிகளில் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் தீர்த்துக் கொள்ளலாம்.   தற்போது விவசாயி அழைப்பு மையங்கள் 14 இடங்களில் அனைத்துமாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு சேவை புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மையங்களுக்கென இலவச தொலைபேசி எண் 1800 – 180 – 1551 வழங்கப்பட்டுள்ளது.

      விவசாயிகளுக்கு வானிலை அறிக்கை, பயிர் பாதுகாப்பு, இடுபொருள் விற்பனையாளர்கள் விவரம், வேளாண் ஆலோசனை மற்றும் சந்தை வசதி ஆகியவை குறித்த தகவல்களை வழங்குவதற்கென விவசாயி சுவிதா மொபைல் தொலைபேசி செயலியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.  இதுதவிர பூசா விவசாயி மொபைல் தொலைபேசி செயலி, வேளாண் சந்தை செயலி, பயிர்பாதுகாப்பு மொபைல் தொலைபேசி செயலி ஆகியனவும் விவசாயிகள் நலனுக்கென தொடங்கப்பட்டுள்ளன.

      இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை நாடெங்கும் 680 விவசாயி அறிவியல் மையங்களை அமைத்துள்ளது. இவற்றின் கடமை திறன் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் செயல் விளக்கத்தை   வழங்குவது ஆகும்.  வயல்களில் சோதனை நடவடிக்கைகள், முன்னணி செயல் விளக்கங்கள், மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் விவசாயி அறிவியல் மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

      நாட்டில் பயிர்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு பயிர் மேம்பாட்டு திட்டங்களை வேளாண் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, சணல், கரும்பு போன்ற வர்த்தக பயிர்கள் ஆகியவற்றுக்கான தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், கிழக்கு இந்தியாவுக்கு பசுமை புரட்சியை கொண்டு வருதல், பயிர் பலதரப்பு திட்டம் போன்றவை இதில் அடங்கும்.  இந்தத் திட்டங்களின் கீழ், விவசாயிகளின் வயல்களில் அறிவியல்பூர்வ பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. தொகுப்பு செயல்விளக்கம், விவசாயிகளுக்கு காலத்துடன் விதைப்பு செய்தல், விதைகள் பயன்பாட்டு வீதம், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் போன்ற பயிர் செலவின குறைப்பு நடவடிக்கைகளில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  மேம்படுத்தப்பட்ட விதைகள் விநியோகம், வேளாண் கருவிகள், எந்திரங்கள், பாசன கருவிகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மைக்கான உயிரி பூச்சிக் கொல்லிகள், மண் மேம்பாட்டு பொருட்கள் விநியோகத்தில் மாநில அரசு மூலம் உதவி வழங்கப்படுகிறது. இலவச புதிய பயறு வகைகளுக்கான விதைகள் கொண்ட குறும்பெட்டி விநியோகம், தரமான விதைகள் உற்பத்தி, விவசாயி அறிவியல் மையங்களில் விதை மையங்களை உருவாக்குதல், உயிரி உரங்களை வலுப்படுத்துதல், வேளாண் அறிவியல் மையங்களில் தொழில்நுட்ப செயல்விளக்கம், நாற்றாங்கால் விதை உற்பத்தி போன்ற புதிய திட்டங்களும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

      தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கிழக்கு இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டு வருதல் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் அமைப்பு அடிப்படையிலான பயிற்சி என்பதும் ஒன்று. இதில் கரீஃப் மற்றும் ரபி பருவங்களுக்கு முன்னிலை பயிற்சி, இந்தப் பருவங்களுக்கு இடையிலான பயிற்சி ஆகிய நான்கு பயிற்சிகள் வழங்கப்படும்.  இந்த திட்டத்தின்படி, ஆசிரிய பயிற்சியாளர் பயிற்சி, பயிர்கள் மற்றும் பாட நிபுணர்கள் மூலம், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை நிறுவனங்களான விவசாயி அறிவியல் மையம் போன்றவற்றில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் புதிய உயர் விளைச்சல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

      எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை குறித்த தேசிய இயக்கம் (NMOOP): இந்தத் திட்டத்தின் தொழில்நுட்பத்தை மாற்றித்தருதல் என்ற பகுதியின் கீழ், விவசாயிகள் பயிற்சி, ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்களுக்கு மாநில அரசுகளுக்கு உதவி வழங்கப்படுகிறது.  திட்டத்தின் பயன்களைப் பெறும் வகையில் விவசாயிகளுக்கு விரிவாக்கப் பணியாளர்கள் மூலமும், நேரடியாகவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

      பிரதமர் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் – ஒரு துளிக்கு அதிகப்பயிர்: இந்தத் திட்டத்தின் ஒரு துளிக்கு அதிகப்பயிர் பகுதியின் கீழ் பாசன நீர் திறம்பட்ட முறையில் பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.  சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ம பாசன திட்டங்களுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

      ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டம் (IPM): பூச்சி கட்டுபாடு அணுகுமுறைகள் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மாற்று முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் எண்ணிக்கையை பொருளாதார விளிம்பு நிலைக்கு கீழே கொண்டு வருவதை நோக்கமாகக்  கொண்டது இந்தத் திட்டம். தடுப்பு நடவடிக்கைகள், பண்பாட்டு, இயந்திரவியல் மற்றும் உயிரியல் கட்டுப்பாடு நடவடிக்கைகள், வேம்புச்சாறு போன்ற தாவர அடிப்படை பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்துதல் போன்றவை இதில் முக்கிய இடம்பெறுகின்றன. இந்தியாவில் பூச்சி கட்டுப்பாட்டு அணுகுமுறையை வலுப்படுத்தி நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தை 35 மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த மையங்கள் பயிர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சேமிப்பு இயக்ககத்தின் மூலம் நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் விவசாயிகளுக்கான களப்பள்ளிகளை அமைத்து ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறையை மேம்படுத்தி வருகின்றன.

      ஒருங்கிணைந்த தோட்ட பயிர் மேம்பாட்டு இயக்கம்: ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள் போன்ற தோட்டப்பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டை நோக்கமாக கொண்டது இந்த இயக்கம். பல்வேறு திட்டங்கள், விவசாயிகளின் திறன்மேம்பாடு, தொழில்நுட்பாளர்களின் திறன் மேம்பாடு   போன்ற நடவடிக்கைகள் இயக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.  அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவது, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க சந்தை வசதி ஏற்படுத்துதல் ஆகியனவும் இத்திட்டத்தில் அடங்கும்.

      பொது வேளாண் சந்தை அமைத்தல்: 2016 ஏப்ரல் 14 ஆம் தேதி, தேசிய வேளாண் சந்தை திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.  இத்திட்டத்தின்படி, மாநிலங்களில் 585 ஒழுங்குமுறை சந்தைகள் அமைக்கப்படுகின்றன.  இந்த சந்தைகள் 2018 மார்ச் மாதம் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்படும். மின்னணு தேசிய வேளாண் சந்தை விவசாயிகளுக்கு தங்களது விளை பொருட்களை இந்த அமைப்பில் இணைந்த எந்த சந்தைக்கும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய இயலும்.  இந்த சந்தையில் பதிவு செய்த வர்த்தகர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதுவரை 13 மாநிலங்களைச் சேர்ந்த் 455 சந்தைகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை வலைதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.   

      இந்தத் தகவல்களை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பர்ஸோத்தம் ரூபாலா மக்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.


(Release ID: 1499208)
Read this release in: English