நகர்புற மேம்பாட்டு அமைச்சகம்

தேசத் தலைநகரில் மூன்றாவது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கானோர் யோகாசனம் செய்தனர்

யோகாவுக்கு மதம் கிடையாது; எல்லோருக்கும் பலன் தரும் அறிவியல் அது- திரு. வெங்கையா நாயுடு

Posted On: 21 JUN 2017 2:52PM by PIB Chennai

மூன்றாவது சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும்  வகையில்    ஆயிரக்கணக்கானோர்  தேசத் தலைநகர் தில்லியில்  யோகாசனம் செய்தனர். கன்னாட் பிளேஸ் மற்றும்  அதைச் சுற்றிய வட்டப்பாதையின்  இதயப் பகுதியில்  அமைந்துள்ள மையப் பூங்காவில்  10000 க்கும் மேற்பட்டோர்  கூடி இதனை நகரின் ஒரு மாபெரும் யோகா கண்காட்சியாக்கினர். புல் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் யோக உடற்பயிற்சி செய்தவர்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள், காவல் துறையினர் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் அவர்களுடன் அரசு சாரா நிறுவனத் தன்னார்வலர்களும்  ஆவர்.

தில்லி நிகழ்வின்  தலைமை விருந்தினராகப் பங்கேற்ற நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு.எம்.வெங்கைய  நாயுடு யோகாவை ஒரு சர்வதேச கலையாக்கும் ஐக்கிய நாடுகள் முயற்சியினை முனைப்புடன் எடுத்துக்கொண்ட பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.  "நமது தொன்மையான பண்பாடான யோகா சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு பெருமைக்குரிய செய்தியாகும். யோகா அரசியல் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ அல்ல; அது காலத்திற்கு அப்பாற்பட்டு பயின்று வரப்படும் பண்டைய இந்திய பண்பாட்டுக்கலை; மன அமைதி, சிறந்த உடல்நலம் மற்றும் ஒற்றுமை உணர்வைத் தருகிறது. யோகா ஒரு அறிவியல். அது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் நல்லிணக்க மேம்பாட்டை இலக்காகக் கொண்டது", என்றார் அவர். 

 

நிர்மாண் பவனில்   அந்த நிகழ்வைத் தலைமை ஏற்று வழி நடத்திய  திரு. எம். வெங்கையா நாயுடு,  அனைவரையும் இந்த இயக்கத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். சமூகத்திற்கு யோகா மிக அத்தியாவசியமானது என்றார். யோகாவைக் கொண்டாடி அதனை உலகெங்கும் நடத்துவது,   அனைத்து மக்களையும் யோகாவின் பலன்களை அறியச் செய்து  அவர்களை ஊக்கப்படுத்துவதற்கே;  நமது மூதாதையர்களால்  பின்பற்றப்பட்டு வந்த, உலகளாவியதும், தொன்மை வாய்ந்த பயிற்சியானதுமான யோகா,  மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வருகிறது என்றார் அமைச்சர்.

 

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் புது தில்லி நகர்மன்றத்தால் கன்னாட் பிளேஸில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தில்லி நிகழ்ச்சி  மாணவர்கள் நிகழ்வுடன்  காலை 6.15 க்குத் தொடங்கியது. காலை 7.45 வரையில் 45 நிமிடங்களுக்கு, பல்வேறு வரிசைக் கிராமமான ஆசன முறைகள் அடங்கிய ஒரு 'பொது யோகா விதிமுறை'   பின்பற்றப்பட்டது. அந்நிகழ்வில்  ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து தில்லியின் துணை நிலை ஆளுநர் திரு.அனில் பைஜால், கோவா ஆளுநர் திருமதி.மிருதுளா சின்ஹா, தில்லி முதலமைச்சர் திரு.அர்விந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் ஆளுநர் திரு ராம் நாத் கோவிந்த், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகளை இணை அமைச்சர் திரு விஜய் கோயல், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. மீனாட்சி லேகி  ஆகியோரும் யோகாசனங்கள் செய்தனர்.



(Release ID: 1493521) Visitor Counter : 52


Read this release in: English