பிரதமர் அலுவலகம்

ஜெர்மனி, ஸ்பெயின் ரஷ்யா மற்றும் பிரான்ஸ் புறப்படும் முன் பிரதமரின் அறிக்கை

Posted On: 28 MAY 2017 3:06PM by PIB Chennai

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வதற்காக புறப்படும் முன்னர் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்

“ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பின் பேரில் நான்காவது இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 2017 மே 29-30 தேதிகளில் நான் ஜெர்மனி செல்கிறேன்.

இந்தியாவும் ஜெர்மனியும் பெரும் ஜனநாயகங்களாக, பெரும் பொருளாதாரங்களாக பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எங்களது உத்திபூர்வமான கூட்டணி எனபது  தூதரக மதிப்புகள் மற்றும் வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கு அடிப்படையில் அமைந்ததாகும். எங்களது வளர்ச்சிக்கான முயற்சிகளில் மதிப்பு மிகுந்த பங்குதாரராக ஜெர்மனி  உள்ளது என்பதுடன் ஜெர்மனியின் திறன்கள் இந்தியாவின் மாற்றத்திற்கான எனது தொலைநோக்குப் பார்வைக்கு பொருத்தமாகத் திகழ்கிறது.

பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஆலோசனைகள் நடத்துவதற்காக ஜெர்மன் அதிபர் மெர்க்கெல் மிகுந்த பெருந்தன்மையுடன் அழைப்பு விடுத்துள்ள ஜெர்மனியின் பெர்லின் அருகே உள்ள மெசிபெர்க்கில் இருந்து நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன்.

30ம் தேதி அதிபர் மெர்க்கல் மற்றும் நான் 4வது ஐ.ஜி.சி.யில் நமது இருதரப்பு உறவு நிலை குறித்து ஆய்வு செய்வோம். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, புதுமை மற்றும் அறிவியலும் தொழில்நுட்பமும், திறன் மேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து, தூய்மையான எரிசக்தி, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, சுகாதாரம் மற்றும் மாற்று மருத்துவம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான கண்ணோட்டத்துடன் எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களை உருவாக்குவோம்.

ஜெர்மானிய கூட்டுக்குடியரசின் அதிபர் மாண்புமிகு டாக்டர் பிராங்க் வால்டர் ஸ்டீன்மியரையும் நான் சந்திக்க உள்ளேன்.

வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் ஜெர்மனி நமது முக்கியப் பங்குதார்ராக உள்ளது. பெர்லினில் அதிபர் மெர்க்கலும் நானும் இரு நாடுகளின் வர்த்தகத் தலைவர்களுடன் நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தவுள்ளோம்.

இந்தப் பயணம் ஜெர்மனியுடனான நமது இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கி நமது உத்திபூர்வமான கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன்.

2017  மே 30,31 தேதிகளில் நான் ஸ்பெயின் செல்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக இது இருக்கும்.

இந்தப் பயணத்தின் போது மேதகு அரசர் நான்காம் பிலிப்பை சந்திக்கும் கவுரவம் எனக்கு கிடைக்கும்.

மே 31ம் தேதி அதிபர் மரியானோ ரஜாய்-யின் சந்திப்பை நான் எதிர்ப்பர்த்திருக்கிறேன். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது, குறிப்பாக பொருளாதார, பொது கவலை கொண்ட சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு குறித்து ஆலோசனைகள் நடத்தப்படும்.

இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. உள்கட்டமைப்பு, நவீன நகரங்கள், டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு இந்தியத் திட்டங்களில் ஸ்பெயின் தொழில்துறையினரின் தீவிர பங்கேற்பை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.

ஸ்பெயின் தொழில்துறையின் முன்னணி தலைவர்களையும் நான் சந்தித்து நமது இந்தியாவில் தயாரிப்போம் முயற்சியில் அவர்களும் த்ங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவிப்பேன்.

எனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய-ஸ்பெயின் வர்த்தக நிறுவன தலைவர்களின் முதலாவது கூட்டமும் நடைபெற உள்ளது. இந்திய – ஸ்பெயின் பொருளாதார கூட்டணியை வலுப்படுத்துவதற்கான அவர்களது மதிப்புமிக்க பரிந்துரைகளை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

18வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக நான் மே 31 முதல் ஜூன் 2 வரை செயின்ட் பீட்டஸ்பர்க் செல்கிறேன்.

ஜூன் 1ம் தேதியன்று நான் அதிபர் புடினுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தி கடந்த 2016 அக்டோபரில் கோவா உச்சிமாநாட்டில் நடத்திய பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். பொருளாதார உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதிபர் புடின் மற்றும் நான், இரு நாடுகளின் வர்த்தக நிறுவனத் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்த உள்ளோம்.

அடுத்த நாள் அதிபர் புடின் உடன் இணைந்த நான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பில் உரையாற்றுகிறேன். இந்த ஆண்டு கவுரவ விருந்திரனராக நான் அழைக்கப்பட்டிருப்பதை கவுரவமாக்க் கருதுகிறேன். இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பில் இந்தியா கவுரவ விருந்தினர் நாடாக இருக்கும்.

முதன்முறையாக நடைபெறும் இந்தச் சந்திப்பில் பல்வேறு ரஷ்ய பகுதிகளின் ஆளுநர்களுடன் கலந்துரையாடி நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், ரஷ்ய மாநிலங்கள்/பிராந்தியங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் தீவிரமாக ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை எனக்கு அளிக்கும்.

எனது பயணத்தின் முதல் கட்டமாக நான் பிஸ்கரோவிஸ்கோயி கல்லறைக்கு சென்று லெலின்கிராட் முற்றுகையின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். உலகப்புகழ்பெற்ற ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்திற்கும் கிழக்கத்திய ஓலைச்சுவடிகள் நிறுவனத்திற்கு சென்று பார்வையிடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருநாடுகளும் தங்களது தூதரக உறவுகளுக்கான 70வது ஆண்டைக் கொண்டாடிவரும் இந்த சிறப்புமிக்க ஆண்டில் செயின்ட் பீட்டஸ்பர்க்கிறகு பயணம் மேற்கொள்வதை நான் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன்.

2017 ஜூன் 2 – 3 தேதிகளில் நான் பிரான்சுக்கு பயணம் செய்கிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அதிபர் திரு. இமானுவேல் மக்ரூனை ஜூன் 3ம் தேதி அதிகாரபூர்வமாக சந்திக்கிறேன்.

பிரான்ஸ் நமது மிக முக்கியமான உத்திபூர்வமான பங்குதாரராக உள்ளது.

அதிபர் மக்ரூனைச் சந்தித்து அவருடன் பரஸ்பர ஆர்வம் கொண்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தங்கள் மற்றும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இருப்பது, பலதரப்பு ஏற்றுமதி கட்டுபாட்டு முகமையில் இந்தியா உறுப்பினராவது பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி இணைப்பு உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன் பேச்சுக்களை நடத்துகிறேன்.

பிரான்ஸ் நமது 9வது பெரிய முதலீட்டு பங்குதாரராக இருப்பதுடன், பாதுகாப்பு, விண்வெளி, அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் ரயில்வே ஆகிய துறைகளில் நமது வளர்ச்சி முயற்சிகளில் முக்கியப் பங்குதாரராக உள்ளது, பிரான்ஸ் உடனான நமது பன்முக உறவை குறிப்பிடத்தக்க அளவுக்கு வலுப்படுத்தி அதனை முன்னெடுத்துச் செல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்.


***

 



(Release ID: 1491126) Visitor Counter : 73


Read this release in: English